June 2026

 

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே, 

என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்  (யோவான் 14:2,3) என்று சொன்னவரும்,  நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன் (யோவான் 17:24) என்று பிதாவினிடத்தில் வேண்டிக்கொண்டவருமாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துதல்கள்.  

உயிர்த்தெழுதலே கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆணி வேர் என்றும், உயிர்த்தெழுதலின் செய்தியே உயர்த்திக் கூறப்படவேண்டும் என்றும், உயிர்த்தெழுதலின் செய்தியை நம்மை இயக்குவிக்கும் சக்தி என்றும் உங்களோடு பகிர்ந்துகொண்டதோடு, பாவத்தில் வாழும் மக்கள் உயிரோடிருந்தாலும் மரித்தவர்களே என்றும், பரிசுத்தவான்களுக்கோ மரமும் நித்திரைதான் என்றும், உயிர்த்தெழுதலின் செய்தி சத்துருவினால் சகிக்கக்கூடாதது என்றும் கடந்த இதழில் உங்களோடு பகிர்ந்துகொண்டேன். இந்த இதழில், உயிர்த்தெழுதலின் மேலும் சில உண்மைகளை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்; வேத வாக்கியங்களைப் புரிந்துகொள்ளவும், மேன்மையானவைகளையே வாழ்க்கையில் வாஞ்சிக்கவும் தேவன் நமக்கு உதவிச் செய்வாராக! 

பழைய ஏற்பாட்டுக் காலத்தில், கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்த மனிதர்களுக்கு, அதாவது, வேதவசனத்தை அறியாதவர்களுக்கு, உயிர்த்தெழுதலைக் குறித்த அறிவு இல்லாதிருந்தது. ஆனால், கிறிஸ்துவைப் பின்பற்றுகின்ற, வேதவார்த்தைகள் தேவனால் அருளப்பட்டது என்று விசுவாசிக்கின்ற, அவைகள் தேவ ஆவியினால் எழுதப்பட்டது என்ற நம்புகின்ற நாம், சில காரியங்களை பழைய ஏற்பாட்டில் தெளிவாகக் காணமுடியும். ஏனென்றால், பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த யூதர்களுக்கு, தேவன் தன்னுடைய வார்த்தையை தன்னுடைய விரலினால் எழுதிக் கொடுத்தார். எனவேதான், அவர்களைப் பார்த்து, இவ்விதமாய்ச் சீரைப் பெற்ற ஜனம் எது? என்றும், பாக்கியம் பெற்ற ஜனம் எது? என்றும், தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்ற ஜாதி எது? என்று ஆண்டவரே கேள்வி எழுப்புகின்றார். இதற்குள், புறஜாதியாயிருந்தவர்கள் உட்படவில்லை. ஆனால், ஆண்டவர் எழுதிக் கொடுத்த வார்த்தைகளுக்குத் தன்னை விட்டுக் கொடுத்த தேவ மனிதர்களுக்கு, வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் காரியங்களை தேவன் சொல்லாமலில்லை. விசேஷமாக ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான ஏனோக்கு, 300 வருடங்கள் குடும்பஸ்தனாக, பிள்ளைகளையும் மற்றும் பேரப் பிள்ளைகளையும் கண்டவனாக வாழ்ந்து, தேவ வெளிப்பாடையும் பெற்றான். 

ஆனால், அந்நாட்களில் வாழ்ந்த மனிதர்களைக் குறித்தோ, 'இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள்; புத்தியில்லாத மிருகங்களைப்போலச் சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள். இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச்செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள். இவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக்கூட விருந்துண்டு, தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்ளுகிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ் செத்து வேரற்றுப்போன மரங்களும், தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது" (யூதா 1:10-13) என்று எழுதுகிறார் யூதா. 

ஆபேல் காயினால் கொல்லப்பட்டான். காயீன் பொல்லாங்கனுக்குத் தன் வாழ்க்கையில் இடங்கொடுத்தபடியினால், 'பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீன்" (1யோவான் 3:12) என்றே அவனைக் குறித்து வேதம் சொல்லுகிறது. காயின் ஆண்டவரின் சமுகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டவன். ஆனால், தண்டனை பெற்ற காயீனோ, 'எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது. இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே" (ஆதி. 4:13,14) என்று ஆண்டவரிடத்திலேயே அவர் கொடுத்த தண்டனையைக் குறித்துக் கேள்வி எழுப்புகின்றான். இன்றைய நாட்களிலும், தேவன் இல்லை என்று சொல்லுகிறவர்களும் மற்றும் தேவனை தேவனாக ஆறியாதவர்களின் இருதயத்திலும் இதைப்போன்ற பலவிதமான கேள்விகள் எழும்புகின்றன. ஆம், அவர்கள் காயீனின் வழிகளில் நடக்கிற மனிதர்கள்.  

ஆதாம் கீழ்ப்படியாமற்போனபோது, 'பூமி சபிக்கப்பட்டிருக்கும்" (ஆதி. 3:17) என்று சொன்ன ஆண்டவர், காயீன் பாவம் செய்தபோதோ, 'பூமி இனி பலன் கொடுக்காது" (ஆதி. 4:12) என்று சொல்லுகிறார். பூமி சபிக்கப்பட்டதற்குக் காரணம் ஆதாம்; ஆனால், பூமி பலன் கொடாமலிருப்பதற்குக் காரணம் பகை. சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆண்டவர் அருவருக்கிற காரியம் (நீதி. 6 அதி.) என்று சொல்லுகிறது வேதம். எனது சட்டையில் தூசி பட்டுவிட்டதென்றால், அதைத் துடைத்துவிடலாம்; ஆனால், என்னுடைய சட்டையில் அசிங்கம் பட்டுவிட்டதென்றால், சொந்த பிள்ளையில் மலம் பட்டுவிட்டதென்றால், இருந்துவிட்டுப்போகட்டும் என்று சொல்லிவிட முடியுமா? சீ..... என்று சொல்லுகிறோமே; அதுவே அருவருப்பு. சகோதரர்களுக்குள் விரோதத்தை உண்டாக்குவதும் இப்படிப்பட்டதே! சில பாஸ்டர்கள் மற்ற பாஸ்டர்களுக்கு ‘Pசயளைந வாந டுழசன” என்றுகூட சொல்லமாட்டார்கள். ஏன்? என்று கேட்டால், என்னிடத்திலிருந்து ஜனங்களைப் பிரித்துக்கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுவார்கள். இன்றைய நாட்களில், காயீனுடைய வழிகளில் வாழும் மனிதர்கள் அநேகர் இந்தியாவிலும் மற்றும் உலகமெங்கிலும் பரவியிருக்கிறார்கள். 

அதுமாத்திரமல்ல, 'பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி" (யூதா 1:11) என்றும் இவர்களைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. பிலேயாமினிடத்தில் இரண்டு ஆவிகள் கிரியை செய்தன. 'கண் திறக்கப்பட்டவன்" என்றும் தன்னைச் சொல்லிக்கொள்ளுவான், நிமித்தமும் பார்ப்பான். இப்படிப்பட்ட இரட்டை ஆவியைக் கொண்ட பிலேயாமைப் போன்ற மனிதர்களும் இந்நாட்களில் உண்டு. 

ஒரு சகோதரர் தெருவில் நின்றவாறு மற்றொருவருடன் கெட்ட வார்த்தையில் சண்டையிட்டுக்கொண்டிருந்தார். அவரது வெள்ளை நிற காலர் இல்லாத ஜிப்பா உடையைப் பார்த்த நான், அவர் ஒரு பெந்தேகோஸ்தேகாரர் என்று புரிந்துகொண்டவனாக அருகில் சென்று, 'சகோதரனே" என்று சொன்னபோது, 'எனக்கு மனுஷர் பாஷையும் பேசத் தெரியும் தூதர் பாஷையும் பேசத் தெரியும்" என்று என்னிடத்தில் சொன்னார். அவர் பேசியது தூதர் பாஷை அல்ல, தூஷணப் பாஷை. துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது (யாக். 3:10) என்று எழுதுகிறார் யாக்கோபு. பிலேயாமுக்கு காசுதான் முக்கியம். மேலும், 'கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்" (யூதா 1:11) என்றும் எழுதுகிறார் யூதா. இப்படிப்பட்ட பிலேயாமைப் போன்ற கோராகைப் போன்ற மனிதர்கள் இன்றைய நாட்களிலும் உண்டு.

இப்படிப்பட்ட தேவனற்ற தேவபக்தியற்ற சந்தியாரின் மத்தியிலும், இப்படிப்பட்ட ஆவியினால் நிறைந்த மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருந்தபோதிலும், உலகத்தின் மனிதர்கள் தேவனுக்குத் தூரமாக வாழ்ந்துகொண்டிருந்த காலத்திலும், ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான ஏனோக்கு தேவனோடு நடந்தான். பிரியமானவர்களே! யார் தேவனோடு நடக்கவில்லையென்றாலும், நாம் தேவனோடு நடக்கமுடியும். ஒரு குடும்பம் என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள், 'ஊரார் எங்களை ஒதுக்கிவைத்துவிட்டார்கள்; எங்களுக்கு நன்கு பெண் பிள்ளைகள், நாங்கள் மட்டும் தான் தேவனுக்காக நின்றோம்; அந்த நேரத்தில், சாத்ராக் Nமுஷாக் ஆபேத்நேகோ என்பவர்களைக் குறித்து நீங்கள் பேசிய செய்தியைக் கேட்டோம்; என்ன வந்தாலும் பரவாயில்லை என்று தைரியமாக நின்றோம்" என்று சொன்னார்கள். அநேக நேரங்களில், பக்கத்து வீட்டார் சரியில்லை, எதிர்த்த வீட்டார் சரியில்லை என்று மட்டுமே நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம், உடன் பணிசெய்கிறவர்கள் சரியில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம், சபைக்கு வருகிறவர்களே சரியில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்; பரவாயில்லை; ஆனால், நாம் தேவனோடுகூட நடக்க அழைக்கப்பட்டவர்கள்.  

எனவே, 

கர்த்தரோடிசைந்தே நடந்தேன்

கிருபை சமாதானம் ஈந்தார்

விசுவாசத்தால் நானும் பிழைத்ததால்

விரும்பி என்னை அணைத்தார் 

எனக்கேன் இனி பயமே

எந்தன் இயேசு என் துணையே

என் துன்ப நேரத்திலே

இயேசுவே என்னோடிருப்பார் 

என்று பாடுகிறார் சகோதரி சாராள் நௌரோஜி

ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: 'இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும். தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார்" என்று முன்னறிவித்தான் (யூதா 1:14,15).  

ஒருமுறை தூத்துக்குடியில் கூட்டங்களில் பேசிக்கொண்டிருந்தேன், இரண்டாம் நாள் கூட்டத்தில் பேசும்படியாக நான் சென்றிருந்தபோது, அங்கே சிலர் நோட்டீஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அதில், இயேசு கிறிஸ்துவுக்கு உடலெல்லாம் சீலைப்பேன் இருந்தது; இயேசு கிறிஸ்து குளிக்கிறதே இல்லை; இயேசு கிறிஸ்து பயங்கர நாற்றமுடையவர் என்று நோட்டீஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். என்னுடைய கைகளில் அந்த நோட்டீஸ் கிடைத்தது. அவர்களுக்கு நான் பதிலாக, 'இயேசு கிறிஸ்துவுக்கு உடலில் பேன் இருந்தது என்று எந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறது என்று எனக்கு காட்டினால், நான் உனது வீட்டிற்கு வந்து மண்டியிடுவதற்கு ஆயத்தம்" என்று அவர்களுக்குச் சொன்னதோடு, 'சீலைப்பேனை எடுத்துத் தின்கிறதைக் கும்பிடுகிற நீ அதைச் சொல்லக்கூடாது" என்றும் அவர்களுக்குச் சொன்னேன்; அடுத்த நாள் அவர்கள் வரவில்லை. 

ஆதி சபைகளில் விசுவாசிகள் 'மாரநாதா" என்றே ஒருவரையொருவர் வாழ்த்தினார்கள். நாம் இப்போது, 'அல்லேலூயா அல்லது ''Praise The Lord" என்று சொல்லுகிறோம். பீஹாரில், சிலர், அவர்களுக்கும் ஆண்டவருக்கும் சம்மந்தமே இருக்காது; என்றபோதிலும், ''Praise The Lord" என்று சொல்லுவார்கள். முதலில், 'அல்லேலூயா" என்றே சொல்லிக்கொடுத்தோம்; ஆனால், வயதான பாட்டிமாரெல்லாம் 'ஆலுகொய்யா" என்று சொல்லத்தொடங்கிவிட்டார்கள்; ஹிந்தியில் 'ஆலு" என்றால் உருளைக் கிழங்கு. எனவே, பின்னர், ''Praise The Lord"  என்று சொல்லிக்கொடுத்தோம். ஆதி சபை விசுவாசிகளும், உபத்திரவத்தில், நெருக்கத்தில், அவமானத்தில் இருந்தபோதும், ஒருவரையொருவர் சந்திக்கும்போதும், 'மாரநாதா" 'இயேசு வருகிறார்" என்றே சொன்னார்கள். இச்செய்தி அவர்களைத் உற்சாகப்படுத்துவதாகவும், தட்டியெழுப்புவதாயிருந்தது. ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கே இதனைச் சொன்னார். பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள், 'தேவன் நியாயம் தீர்க்க வருகிறார்" என்பதை அறிந்திருந்தார்கள்.

எனவே, 'ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்" (தானி 12:12) என்பதைக் கேட்டதும், தானியேலின் மனதில், 'நீர் எப்போது வருவீர்?" என்ற கேள்வி உண்டாயிற்று. அப்பொழுது, விசேஷித்த ஆவியைப் பெற்ற தானியேலைப் பார்த்து, 'நீயோவென்றால் முடிவுவருமட்டும் போயிரு; நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய்" என்கிறார் ஆண்டவர் (தானி 12:13). பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களுக்கு, 'நான் மறுபடியும் எழுந்திருப்பேன்; சுதந்தர வீதத்திற்காக எழுந்திருப்பேன்" என்ற நம்பிக்கை இருந்தது; தேவ ஆவியைப் பெற்ற தானியேலுக்கு இது வெளிப்படுத்தப்பட்டிருந்தது. 

எனவே, யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப்போகிறேன்; ஆனாலும், தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தைவிட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப்பண்ணுவார் என்று சொன்னதுமன்றி; தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான் (ஆதி. 50:24,25) என்று வாசிக்கின்றோம். இதன் காரணம் என்ன? இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.   அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது. கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள் (மத். 27:50-53) என்று வாசிக்கின்றோமே; இதனை, ஆவியில் யோசேப்பு முன்னறிந்திருந்ததினாலேயே தன்னுடைய எலும்புகளை எடுத்துக்கொண்டுபோங்கள் என்று சொல்லுகின்றான். தான் மரித்து உலர்ந்த எலும்பாக மாறியிருந்தாலும், அவருடைய சத்தத்தைக் கேட்கவேண்டும் என்ற வாஞ்சை அவனுக்குள் காணப்பட்டது. யோசேப்பு ஆவியில் நிறைந்தவனல்லவா, வரும் பஞ்சங்களையும் அழிவையும் காணக்கூடியவனல்லவா, அவனுக்கு, 'இயேசு வருவார், அவரை கல்வாரிச் சிலுவையில் அடிப்பார்கள், அவர் சத்தமிடுவார், அப்பொழுது கல்லறைகள் திறக்கும்; அப்பொழுது நான் பரிசுத்த நகரத்தில் பிரவேசிக்கவேண்டும்" என்ற தன்னைக் குறித்த வெளிப்பாடு இருந்தது. 

பழைய ஏற்பாட்டுக் காலத்தில், தேவ ஆவியினால் நடத்தப்பட்ட பரிசுத்தவான்கள் அனைவருக்கும் இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது.   'என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்" (சங். 23:6) என்று முடிவில்லாத வாழ்க்கையைக் குறித்தும், நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன் (சங் 27:13) என்று தன்னுடைய விசுவாசத்தையும் தாவீது சொல்லுகின்றானே! பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் ஆவியில் நடத்தப்பட்டார்கள், ஆவியில் நிறைந்துமிருந்தார்கள். எனவே, நேபுகாத்நேச்சார் தானியேலைப் பார்த்து, 'தேவ ஆவியைப் பெற்ற  மனுஷன்" என்றும், பார்வோன் யோசேப்பைப் பார்த்து, 'தேவ ஆவியைப் பெற்ற  மனுஷன்" என்றும் சொல்லுகின்றார்கள்.  

நம்மிடத்தில் இன்று இருப்பது எந்த ஆவி? ஒரு சகோதரியினிடத்தில், உங்கள் கணவர் சபையில் முழங்காலிலேயே துள்ளுகிறாரே! அவருக்கு என்ன ஆவி இருக்கிறது? என்று கண்டுபிடித்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு அந்த சகோதரி, அவர், வீட்டில் பருப்பு வேகிறதற்கு பத்து நிமிடம் பிந்திவிட்டாலே  துள்ளுவார். நேற்று அவர் வாங்கிக்கொடுத்தது உடனே வெந்துவிட்டது; ஆனால், இன்று அவர் வாங்கிக்கொடுத்த பருப்பு குக்கரில் மூன்று விசில் வந்தபோதிலும் வேகவில்லை; அதற்காக இப்படித் துள்ளுகிறார். என்னுடைய மாமியாரிடத்தில் கேட்டபோது, 'இவன் இன்று அல்ல; வயிற்றில் இருக்கும்போதும் இப்படி குதித்துக்கொண்டுதான் இருந்தான்" என்று சொன்னார்.  ஆம், இன்றைய நாட்களிலும் அநேகருக்குள் இருக்கின்ற ஜென்ம சுபாவம் போகவில்லை. தாயின் வயிற்றில் குதித்துக்கொண்டிருந்தவர்கள் பலர், இன்றும் குதித்துக்கொண்டிருக்கிறார்கள்; ஆனால், அவர்கள் ஆவியில் குதிக்கிறார்கள் என்று நாம் ஏமாந்துவிடுகின்றோம். பிரியமானவர்களே! தேவ ஆவியினால் நிறைந்தவர்களாக எப்போதும் காணப்பட தேவன் நமக்கு துணைசெய்வாராக. 

ஆனாலும், இயேசுவின் நாட்களில் காணப்பட்ட பரிசேயர்கள் உயிர்த்தெழுதலை விசுவாசித்தார்கள்; ஆனால், சதுசேயர்களுக்கு உயிர்த்தெழுதலில் விசுவாசமில்லாதிருந்தது. எனவே, அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, போதகரே, ஒருவனுடைய சகோதரன் சந்தானமில்லாமல் தன் மனைவியை விட்டு இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டுமென்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே. இப்படியிருக்க, ஏழுபேர் சகோதரர் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனான். இரண்டாம் சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் சந்தானமில்லாமல் இறந்துபோனான். மூன்றாம் சகோதரனும் அப்படியேயானான். ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள். ஆகையால், உயிர்த்தெழுதலில், அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில்  எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? ஏழுபேரும் அவளை மனைவியாகக் கொண்டிருந்தார்களே என்று கேட்கிறார்கள். சில மதங்களில், 'நீ பரிசுத்த யுத்தம் செய்துவிட்டால், நேராக பரதீசுக்குச் செல்லுவாய்; அங்கே சென்றதும் உனக்கு 70 மனைவிகள் கிடைப்பார்கள்; கொஞ்ச நாட்களுக்குப் பின்பு 440 மனைவிகள் கிடைப்பார்கள்" என்று அவர்களது புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கிறதை நான் அறிவேன். 

இன்றைய நாட்களிலும், அநேக கள்ளப் பிரசங்கிகள், பொருளாசையைத் தூண்டிவிடுகின்ற பிரசங்கிகள், 'ஆபிரகாம் மிகுந்த சீமானாயிருந்தான்" என்று மாத்திரம் பிரசங்கிப்பது உண்டு. இவர்கள் அடிக்கடி தொலைக்காட்சிகளில் தோன்றுவார்கள். ஆபிரகாமைப் போல தேவன் உன்னை ஆசீர்வதிக்க விரும்புகிறார், அதற்காகத்தான் இயேசு சிலுவையில் சாபமானார் என்றும், ஆபிரகாமின் ஆசீர்வாதம் உனக்குத்தான் என்றும் பிரசங்கிப்பார்கள். இதனைக் கேட்கும் மக்களுக்கும், 'எங்களுக்கும் அப்படியே ஆகக்கடவது" என்று சொல்லத்தான் நோன்றும். ஆனால், ஆபிரகாமின் வீட்டிற்கு கர்த்தர் (இயேசு) இரண்டு தூதர்களோடு வந்தபோது, 'அவன் பகலிலே உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்திருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரை மட்டும் குனிந்து" (ஆதி 18:1,2) என்றே வாசிக்கின்றோம். ஆனால், ஆபிரகாம் கூடார வாசலில் உட்கார்ந்திருந்தான் என்பதை, பொருளாசையைத் தூண்டுகிற பிரசங்கிகள் சொல்லுவதில்லை. மேலும், 'ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம். கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள்" (ஆதி. 18:3,4) என்றே கூறுகின்றான் ஆபிரகாம். ஆபிரகாம் வீட்டின் வரவேற்பறை மரத்தடியே!  இதனை மறைத்துவிட்டு, 'ஆபிரகாமைப் போல உங்களையும் தேவன் சீமானாக்குவார்" என்பதை மாத்திரமே பிரசங்கிக்கிறவர்கள் உண்டு.  

  ஆனால், 'இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலல்லவா தப்பான எண்ணங் கொள்ளுகிறீர்கள்? (மாற்கு 12:19-24) என்று பதில் கூறுகின்றார். இன்றைய நாட்களிலும், சதுசேயர்களைப் போல, வேத வாக்கியங்களைத் தவறாக எண்ணும் மனிதர்கள் உலகத்தில் உண்டு. நம்மிடத்தில் நல்ல வீடு, வாகனம் என அனைத்தும் இருக்கலாம்; ஆனால், அவைகளோடு நாம் ஓட்டிக்கொள்ளக்கூடாது; கூடாரவாசியாக வாழவேண்டும்; அதுவே தேவனுடைய சித்தம். என்னுடைய வீட்டின் முன் பகுதியில், 'நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது" (பிலி. 3:20) என்ற வசனத்தையே எழுதியிருக்கிறேன். நான் வசிக்கும் வீட்டிற்கு வாடகையும் கொடுக்கிறேன், மின்சாரக் கட்டனமும் செலுத்துகின்றேன்.  

எனவேதான், 

கூடார வாசிகளாகும் நமக்கிங்கு

வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ?

கைவேலையில்லாத வீடொன்றை மேலேதான்

செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ 

                                                                                          - ஆனந்தமே பரமானந்தமே    

என்று பாடுகின்றோம். 

பிரியமானவர்களே! பழைய ஏற்பாட்டுக் காலத்தில் உயிர்த்தெழுதலைக் குறித்த வாஞ்சை இருந்தது; ஆனால், புதிய ஏற்பாட்டின் காலத்தில் வாழும் நமக்கோ, உயிர்த்தெழுதலைக் குறித்த நிச்சயம் உண்டு; அல்லேலூயா!  


பொருளாசையைத் தூண்டி, போதனையைப் புரட்டி

ஐசுவரியமும் ஆஸ்தியுமே ஆசீர்வாதம் எனக் கூறி

சீமானாய் வாழுவதையே தங்கள் செய்தியாக மாற்றி

கூடாரவாசிகள் எனக் கூறுவதில்லை போதகர் பலர்

                                                                                                             ஆனால், நாமோ, 

'மாரநாதா" என்றே வாழ்த்துவோம் சகோதரரை

வருகையைச் சொல்லும் வார்த்தையது இத்தரையில்

விளங்காத மனிதர்க்கு இன்னும் அது விமர்சனந்தான்

விண்ணகம் செல்வோருக்கோ வாழ்த்துதலின் செய்தியது


                                                                                  அன்பரின் அறுவடைப் பணியில் 

                                                                   அன்பு சகோதரர் D. அகஸ்டின் ஜெபக்குமார்


MAY 2026

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே, 

நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருப்பவரும் (1தீமோ. 1:17), நான் உங்களுக்குக்  கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் (மத். 28:20) என்று இராஜ்யத்தின் பணியில் நம்மை உற்சாகப்படுத்துகிறவரும், நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் (யோவான் 11:25) என்று வாக்களித்தவருமாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக! (1தீமோ. 6:16)

பிரியமானவர்களே! இன்றைய நாட்களில், அநேக விசுவாசிகளுக்கும் கூட்டத்தாருக்கும் உயிர்த்தெழுதலைக் குறித்த தெளிவு இல்லை. 'ஆண்டவர் மரணத்திலிருந்து எழுந்தார்" என்பதனைப் பண்டிகையாக நாம் கொண்டாடுகிறவர்கள்; என்றாலும், கிறிஸ்து பிறப்பின் பண்டிகைக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை, கிறிஸ்து உயிர்த்தெழுந்த பண்டிகைக்கு நாம் கொடுப்பதில்லை. கிறிஸ்து உயிர்த்தெழுந்த பண்டிகைதான் அதிகமாகக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்; ஆனாலும், என்ன காரணத்தினாலோ, கிறிஸ்து பிறப்பின் பண்டிகைக்கு நாம் அத்தனை முக்கியத்துவம் கொடுத்து, விசேஷப் பாடல்கள் மற்றும் பவனி என்றெல்லாம் வைத்திருக்கிறோம்; வீடு வீடாகச் சென்று பாடல்களைப் பாடுகிறோம், புத்தாடைகளை வாங்குகிறோம், பலகாரங்கள் செய்து மற்றவர்களுக்கும் கொடுக்கிறோம். கிறிஸ்மஸ் என்று சொன்னாலே, சபைகளிலேயும் நாட்டிலேயும் ஒரு குதூகலம் உண்டாகிவிடுகின்றது. துபாய் போன்ற நாடுகளில், செப்டம்பர் மாதத்திலேயே கடைகளை அலங்கரிக்கத் தொடங்கிவிடுவார்கள்;அமெரிக்காவிலே முன்னதாகவே நட்சத்திரங்கள் தொங்கவிடப்பட்டுவிடும். ஆனால், சபைகளிலே கிறிஸ்மஸ் கொண்டாடினதாக புதிய ஏற்பாட்டில் எங்கும் காணப்படவில்லை. 

கிறிஸ்து பிறப்பின் பண்டிகைக்கு நான் விரோதி அல்ல; ஏனெனில், சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு வட இந்தியாவில் நாங்கள் அதை உபயோகப்படுத்திவருகின்றோம். உலக மக்கள் அனைவரும் அறிந்திருக்கின்றபடியினாலே, நற்செய்தியைச் சொல்லுவதற்கு அது நல்லதோர் நாள். அரசு உயர் அதிகாரிகளையும், மந்திரிமார்களையும் கூட விழாக்களுக்கு அழைத்து, நற்செய்தியினை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். கிறிஸ்மஸ் அன்று, இப்படிப்பட்ட நோக்கத்தோடு செய்யப்படும் காரியங்களுக்கு நான் விரோதி அல்ல. என்றபோதிலும், அப்போஸ்தல நடபடிகளிலோ அல்லது அதற்குப் பிறகு எழுதப்பட்ட நிருபங்களிலேயோ, கிறிஸ்மஸ் கொண்டாடினார்கள் என்றோ, இயேசுவுக்குப் பிறந்தநாள் கொண்டாடினார்கள் என்றோ எங்கும் எழுதப்படவில்லையே! என்ற கேள்வி எனக்கு உண்டு. அப்படியானால், எப்படியோ உலகத்தின் வழிபாடுகளுக்கு நம்மை விட்டு கொடுத்துவிட்டோம் என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. நாம் கொண்டாடியிருக்க வேண்டியது கிறிஸ்து உயிர்த்தெழுந்த பண்டிகையையே! 

ஏன் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு நாம் அத்தனை முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்? இந்த உலகத்தில், மரித்து உயிரோடு எழுந்தவர் இயேசு ஒருவர் மாத்திரமே. பெரிய பெரிய தலைவர்கள் மண்ணுக்குள் போய்விட்டார்கள், இதிகாச நாயகர்களும் போய்விட்டார்கள்; சித்தர்களும் செத்து மண்ணுக்குள் போய்விட்டார்கள். இயேசுவும் மண்ணுக்குள் சென்றார்; ஆனால், மூன்றாம் நாள் உயிரோடு எழும்பினார். அவருடைய கல்லறை மாத்திரமே இன்றும் காலியாக இருக்கிறது, திறந்திருக்கிறது. 

வேதத்தின் பார்வையில், மரணம் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதுதான். உலகத்தின் எல்லா மதங்களும், மார்க்கங்களும், கொள்கையாளர்களும், மற்ற அனைவரும், ஏன்? கிறிஸ்து இல்லை என்று சொல்லுகிற நாஸ்திகனும் கூட மரணத்தை விலக்க முடியாது என்பதை நன்கு அறிவார்கள். தீவிர கம்யூனிசவாதியாக இருந்தாலும், பெரியதோர் கலாச்சாரப் புரட்சியை சீனாவிலே கொண்டுவந்த மாசேதுங் மற்றும் ரஷ்யாவை ஆண்ட லெனின் போன்றவர்களானாலும் மண்ணுக்கடியிலேயே இருக்கிறார்கள். கம்யூனிசம் ரஷ்யாவில் வீழ்ந்தபோது, 'உனது சத்துவமும் மற்றும் தத்துவமும் எங்களை மாற்றவில்லை, எங்கள் நாட்டை மாற்றவில்லை" என்ற வெறுப்பில், மக்கள் லெனின் சிலையை கீழே தள்ளினார்கள். 

கம்யூனிசம் வீழ்ந்தபோது, மாஸ்கோ நன்றாயிருந்தது; ஆனால், சைபீரியாவோ தண்டனை கொடுக்கிற இடமாகக் காட்சியளித்தது. கைதிகளே அங்கு அனுப்பப்பட்டார்கள்; எட்டு மாதங்கள் வெறும் பனியை மாத்திரமே நாம் காணமுடியும். அங்கு இருக்கும் 'பைகால்" என்ற ஏரி, பல மைல்கள் நீளமானது, சிங்கப்பூர் மற்றும் இலங்கை தேசங்களைக் காட்டிலும் பெரியது. குளிர் காலங்களில், மேலே ஜீப் ஓட்டக்கூடிய அளவிற்கு அதன் தண்ணீர் உறைந்து காணப்படும்; அதை நான் பார்த்திருக்கிறேன். அங்குள்ள ஜனங்களின் நிலை மிகவும் மோசமானதாகக் காட்சியளித்தது. ஊழியத்திற்காக ஒருமுறை நான் அங்கு சென்று, ஒரு பெரிய ஹோட்டலில் தங்கியிருந்தேன். மங்கோலியாவிலிருந்து ரஷ்யாவிற்கு பயணித்ததாhல் இரவில் எதுவும் என்னால் சாப்பிடமுடியவில்லை. எனவே, காலையில் எழுந்து ஓர் உணவகத்திற்குச் சென்றேன், அங்கே இரண்டு பேர் மாத்திரமே இருந்தார்கள்; எனக்கு ரஷ்ய மொழி தெரியாது, ஹோட்டல்காரருக்கோ ஆங்கிலம் தெரியாது; நான் 'bread" என்று கேட்டபோது, அவன் என்னை மேலும் கீழும் பார்த்தான், அவனுக்குப் புரியவில்லை. முட்டையை உடைப்பதைப் போல செய்கைக் காட்டி ஒரு ஆம்ளேட் கேட்டேன் அதுவும் அவனுக்குப் புரியவில்லை. கடைசியாக, அங்கே யாரோ சாப்பிட்டுப் போட்ட ஒரு ரொட்டித் துண்டை காண்பித்து, இது வேண்டும் எனக் கேட்டபோது, 'இது மிகவும் விலை அதிகம்" என்று சொன்னான்; ஆம், அது நமது ஊரைக் காட்டிலும் பத்து மடங்கு அதிக விலையாயிருந்தது. கம்யூனிசம் விழுந்தபோது, ரொட்டி வாங்குவதற்குக்கூட ஜனங்கள் வரிசையில் நிற்கவேண்டியதாயிற்று. லெனின் கொள்கைகளைக் கொண்டிருந்த ரஷ்யா இப்படிதான் காணப்பட்டது, இன்றும் அநேகக் காரியங்கள் அப்படியே காணப்படுகின்றன; அந்த லெனின் அழிந்துபோனார்.  

எனது மகள் ரஷ்யாவில் மருத்துவம் பயிலச் சென்றிருந்தபோது,  ராஸ்தவ்கான் என்ற பிரபலமான ஒரு பட்டணத்தில்தான் அவள் பயிலும் பல்கலைக்கழகம் காணப்பட்டது. அவள் அங்கு சென்றபின், மூன்று நாட்களாக தொலைபேசியில் எங்களைத் தொடர்புகொள்ளவே இல்லை. மூன்று நாட்களுக்குப் பின், அழுதவளாக, 'அப்பா, இந்த யுனிவர்சிட்டியில், ஆண்களும் பெண்களுமாக எழுபத்தைந்து பேர் ஒரே அறையில் தங்கவைக்கப்பட்டிருக்கிறோம்; அத்துடன், கழிவறைகளில் கதவுகளே இல்லை" என்று போனில் சொன்னாள். மகளே, 'உன்னை ஆண்டவர் கதவு இல்லாத டாய்லெட் இருக்கிற ஊருக்குக் கொண்டுசென்றிருக்கிறார்"; ஆனால், என்னையோ, 'சுவரே இல்லாத டாய்லெட் இருக்கிற ஊருக்குக் கொண்டுசென்றார்" என்று சொன்னேன். ஆம், கம்யூனிசம் மற்றும் மாசேதுங் கொள்கைகள் அனைத்தும் மண்ணுக்குள் போய்விட்டன; ஆனால், இயேசு கிறிஸ்துவோ இன்றும் உயிரோடு இருக்கிறார். ஆனால், 'உயிர்த்தெழுதல்" என்பதோ கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆணி வேர். எனவே, கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள் (1கொரி. 15:17) என்று எழுதுகின்றார் பவுல். 

பெத்தானியாவில் குடியிருந்த லாசரு வியாதியாயிருந்தபோது, 'ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான்" என்று சொல்ல, அவனுடைய சகோதரிகள் அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள் (யோவான் 11:3). ஆயினும், அதனைக் கேள்விப்பட்ட இயேசு, தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டுநாள் தாமதித்தார் (யோவான் 11:6). நான்கு நாட்கள் கழித்து அவர் பெத்தானியாவுக்கு வரும்போது, 'நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன்" என்று சொன்னபோது, அவருடைய சீஷர்கள்: ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள் (யோவான் 11:11,12). மரித்துப்போயிருந்த லாசருவை, 'நித்திரையடைந்தவன்" என்று சொல்லுகின்றார் இயேசு. என்றபோதிலும், இயேசுவின் வார்த்தைகளை சீஷர்களோ புரிந்துகொள்ளவில்லை. மூன்று வருடங்கள் இயேசுவோடுகூட இருந்தபோதிலும், பயிற்சி பெற்றபோதிலும், அவரது வார்த்தைகளை அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை. 

சீஷர்கள் அநேக நேரங்களில் இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளத் தவறினார்கள், 'பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்" என்று இயேசு சொன்னபோது, 'நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார்" என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணினார்கள் (மத். 16:6,7). இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளாமல், 'தரிசனம் கண்டேன், தரிசனம் கண்டேன்" என்று சொல்லிக்கொள்வோர் இந்நாட்களிலும் அநேகர் உண்டு. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாகச் சொல்லுகின்றார் (யோவான் 11:14). அவரது வார்த்தைகளை நாம் புரிந்துகொள்ளத் தவறினாலும், அவர் நம்மை நேசிக்கிறார். இயேசு சொன்ன உவமையில், 'உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்" (லூக். 15:32) என்று தகப்பனிடத்தில் திரும்பி வந்த இளையகுமாரனைக் குறித்து  தகப்பன் சொன்னதை வேதத்தில் நாம் வாசிக்கின்றோமே! நாம் மரித்தவர்களா? அல்லது நித்திரையாயிருப்பவர்களா? பாவத்தில் வாழும் மனிதர்களே மரித்தவர்கள்; எனவே, 'அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்" (எபே. 2:1) என்று எழுதுகின்றார் பவுல். 

கிறிஸ்துவுக்குள் வாழ்பவர்கள், உயிரோடு எழுந்தவர்கள்; அவர்களுக்குள் ஜீவன் வந்துவிட்டது, கிறிஸ்து இல்லாமல் வாழுவோர் பிரதமமந்திரியானாலும், முக்கியமந்திரியானாலும் நடைபிணங்களே! 'குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்" (1யோவான் 5:12); இதுவே வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவரும், மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தவருமான ஆண்டவரின் வார்த்தைகள். இதனாலேயே நாம் சுவிசேஷம் சொல்லுகின்றோம். சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கானக் காரணம் இதுவே. எனவே, உயிர்தெழுதலின் செய்தியை சீஷர்கள் அன்றைய நாட்களில் முழங்கினார்கள். அச்செய்தி, 'இயேசு உயிர்த்தெழுந்தார்" என்ற செய்தி அன்றைய அரசாங்கத்திற்கும், அதிகாரிகளுக்கும், ஆசாரியர்களுக்கும் ஆபத்தானதாகக் காணப்பட்டது; அன்னா காய்பாவுக்கு அக்கினியைப் பற்றவைத்ததுபோலவும், அணுகுண்டைப் போட்டதுபோலவும் இருந்தது. பிரியமானவர்களே! இன்றைக்கு, சபை இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பறைசாற்றுமானால், இந்த தேசம் அசைந்துதான் ஆகும். 

'உயிர்த்தெழுதல்" என்ற வார்த்தையை, பழைய ஏற்பாட்டில் தேடினால் கிடைக்காது; அது புதிய ஏற்பாட்டின் புதிய செய்தி; நித்திய ஜீவனை நமக்குத் தருகிறதற்காகவே. ஏன் நாம் இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களை எடுத்துச் சொல்லுகின்றோம்? இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது (யோவான் 20:31). வேதம் நம்முடைய கரங்களில் கொடுக்கப்பட்டிருப்பதற்கானக் காரணம், ஒவ்வொரு மாதமும் ஒரு வாக்குத்தத்தத்தைப் பார்த்து, அதையே சுற்றிவருவதற்கு அல்ல; தினம் ஒரு வாக்குத்தத்தம், வாரம் ஒரு வாக்குத்தத்தம், மாதம் ஒரு வாக்குத்தத்தம், வருடம் ஒரு வாக்குத்தத்தம் இருந்தால் போதும், என்று வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் இன்றைய நாட்களில் உண்டு. இதுவே வேதம் நமது கரங்களில் கொடுக்கப்பட்டிருப்பதற்கானக் காரணம். பிரியமானவர்களே! நித்திய ஜீவனுக்கு நேராக நம்மை வழிநடத்தும் 'உயிர்த்தெழுதல்" என்ற பெரிய நற்செய்தியை நாம் நமது கரங்களில் வைத்திருக்கிறோம்; அது சாதாரணமானச் செய்தி அல்ல. எனவே, நாம் பயப்படவேண்டிய அவசியமில்லை; அந்த ஜீவனுக்கு முடிவில்லை. ஆகையினாலேயே, தெருத் தெருவாக, மூலை மூலையாக, ராஜ்யங்களுக்கு எல்லா மொழிகளிலேயும் சுவிசேஷத்தை எடுத்துச் சொல்லுகின்றோம்.  நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன் (யோவான் 10:10) என்று சொல்லுபவர் நமது இயேசு. இதனைப் புரிந்துகொள்ளும்படியாகவே, 'மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்" (ரோமர் 1:5) என்று எழுதுகிறார் பவுல்.  'உயிர்த்தெழுதல்" இயேசுவை 'ஜீவிக்கிறவர்" என்றும் 'தேவனுடைய குமாரன்" என்றும் நிரூபிக்கிறது.   

இயேசுவை தேவனுடைய குமாரன் என்று சொல்லுவதை இஸ்லாமிய சகோதரர்கள் மறுதலிப்பார்கள்; அவர் ஒரு தீர்க்கதரிசி மாத்திரமே என்று அவர்கள் சொல்லலாம். நாம் இயேசுவை தேவனுடைய குமாரன் என்று சொல்லுவதற்குக் காரணம், அவருடைய உயிர்த்தெழுதலே. 

ஒருமுறை கூட்டங்களை நடத்துவதற்காகவும், அதற்கான ஆயத்தப் பணிகளைப் பார்வையிடவும் ஒரு இடத்திற்குச் சென்றிருந்தேன். அந்த இடத்தின் அருகில், அநேக இஸ்லாமியர்கள் வசிக்கின்றார்கள். அப்போது, அங்கு ஏழு வயது நிரம்பிய ஒரு சிறுவன் வந்தான். அவனது தலையில் எண்ணெய் இல்லை, சட்டை போடவில்லை, கால்சட்டை மட்டுமே போட்டிருந்தான். அவன் என்னிடத்தில், 'நான் பாட்டு பாடி, டான்ஸ் ஆடட்டுமா?" என்று கேட்டான். தொடர்ந்து, சமாரிய ஸ்திரீயினிடத்தில் இயேசு தண்ணீர் கேட்டபோது, 'நீர் யூதனாயிருக்க" என்று அவள் சொன்னதுபோல, அந்தச் சிறுவன் என்னிடத்தில், 'அங்கிள், நாங்க இயேசுவை தீர்க்கதரிசி என்று சொல்லுகிறோம்; நீங்க தேவனுடைய குமாரன் என்று சொல்லுகிறீர்கள்" என்று சொன்னான். அத்தோடு அவன் நிறுத்தவில்லை, என்னுடைய அப்பா, ஒரு இந்து பெண்ணை திருமணம் செய்துகொண்டு ஊரை விட்டே சென்றுவிட்டார் என்று தனது குடும்ப வரலாற்றை முழுவதுமாகச் சொல்லத் தொடங்கினான்; எனக்கோ, சமாரிய ஸ்திரீதான் ஞாபகம் வந்தது. 'நீ எப்படி டான்ஸ் ஆடுவாய்?" என்று நான் அவனிடத்தில் கேட்டபோது, 'ஷாருக்கான் மாதிரி ஆடுவேன்" என்று சொன்னான். ஷாருக்கான் தெரியும்; ஆனால், சாவை வென்ற இயேசு தெரியாது.   

பிரியமானவர்களே! இயேசுவின் உயிர்த்தெழுந்த செய்தியின் வல்லமையும், அதன் நிரூபணமும் நமக்குத் தெரிந்திருக்கவேண்டிய செய்தியல்லவா! எனவே, இயேசு உயிரோடு எழுந்ததும், உயிர்த்தெழுந்த செய்தி பிரசங்கிக்கப்படாதபடி, அன்றைய நாட்களில் இருந்த ஆசாரியரும்,  அன்னா காய்பாவும், எதிரிகளும் பிலாத்துவினிடத்தில் வந்து, 'ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப் பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது. ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச்  சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்றுநாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிடவேண்டும்" என்று சொல்லுகின்றார்கள். 

சிலுவையில் அறையவேண்டும் என்று சொன்னீர்கள் அறைந்துவிட்டேன்; கையையும் கழுவிவிட்டேன்; ஆனால், திரும்பவும் வந்து நிற்கிறார்களே என்று எண்ணிய பிலாத்து அவர்களை நோக்கி, உங்களுக்குக் காவல்சேவகர் உண்டே; போய், உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டான். இதைக் கேட்டதும், அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள் (மத்தேயு 27:63-66). இயேசு உயிர்த்தெழுந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் அவ்வளவு வைராக்கியமாயிருந்தார்கள். இயேசு உயிரோடெழுந்துவிட்டால், அவர்களுடைய உபதேசம் வீணாகிவிடும், மனிதர்களின் வாழ்க்கை மாறிவிடும், அந்தச் செய்தி நித்திய ஜீவனைக் காட்டிவிடும் என்பதினால், அது நடைபெறாதபடிக்கு அவர்கள் கவனமாயிருந்தார்கள். இன்றைய நாட்களிலும், 'இயேசு உயிரோடிருக்கிறார்" என்ற செய்தியை சொல்லக்கூடாதபடிக்கே கூட்டங்களுக்குத் தடை விதிக்கிறார்கள். 

வட இந்தியாவில் 53 வருடங்களாக மிஷனரியாக வாழுகிறேன், துப்பாக்கிகளையும், மிரட்டல்களையும் நாங்கள் பார்த்தவர்கள்தான்; காரணம், 'இயேசு உயிரோடிருக்கிறார்". இதனை அவர்கள் சொல்லமுடியாது. அவர்களது தெய்வங்கள் எதுவும் உயிரோடு இல்லையே! எனவேதான், அன்றைக்கே, இயேசுவின் கல்லறையை முத்திரையிட்டு, காவலர்களை நிறுத்தி பாதுகாத்தார்கள். 

என்றபோதிலும், 'இயேசு உயிர்த்தெழுந்தார்" என்ற செய்தியைக் கேட்ட ஸ்திரீகள் கல்லறையை விட்டுப் போகையில், காவல்சேவகரில் சிலர் நகரத்துக்குள்ளே வந்து, நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்து, மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்தார்கள் (மத். 28:11,12). உயிர்த்தெழுதலை மறைக்க அன்றைக்கே லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால், உயிர்த்தெழுதலின் செய்தி அவர்களுக்கு வெடி வைப்பதைப் போன்றது. எனவே, உயிர்த்தெழுந்த இயேசுவை பிரசங்கித்த அப்போஸ்தலரைப் பிடித்து அவமானப்படுத்தி, அடித்து, அவருடைய நாமத்தையும் சொல்லக்கூடாது என்றும் அவரது உயிர்த்தெழுதலையும் அறிவிக்கக்கூடாது என்றும் அவர்களை பயமுறுத்தினார்கள். ஆனால், அவர்களோ புறப்பட்டுப் போய் எருசலேம் எங்கிலும் சுவிசேஷத்தை அறிவித்தார்கள்; நாமும் இதனையே செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம். இயேசுவோடு நாம் நடப்போமென்றால், இந்த தைரியம் நமக்கும் வந்துவிடும். 

ஜனங்கள் இயேசுவோடு நடக்காததினாலேயே, வாராவாரம், 'பயப்படாதே, பயப்படாதே" என்று போதகர் பிரசங்கிக்கவேண்டியதிருக்கிறது.  இயேசுவோடு நடப்போருக்கு பயம் இல்லையே! ஒருமுறை, சசராம் என்ற ஊரில் ஒரு கூட்டத்தில் நான் பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது, எனது சட்டையைப் பிடித்துக்கொண்டு இரண்டுபேர் இழுத்துக்கொண்டு சென்றார்கள். 'உனது தலை நாளைக்கு இருக்காது" என்று சொன்னான்.  அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், 'எதற்காக உங்க தலையைக் கேட்கிறான், தமிழ்நாட்டு ஆளு தலையை" என்று என்னிடத்தில் கேட்டபோது, 'அவன் தலைக்குள் இல்லாத ஒன்று, எனது தலைக்குள் இருக்கிறது; அதைக் கேட்கிறான்" என்று பதில் சொன்னேன் நான். 

அதுமாத்திரமல்ல, 'நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்" (மத். 28:13) என்று பொய் சொல்லவும் கற்றுக்கொடுக்கிறார்கள். பொய் சொல்லக் கற்றுக்கொடுப்பது யார்? அந்த நாளின் பிரதான ஆசாரியன் அதாவது அன்றைய நாளின் போப். பிரியமானவர்களே! இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை பிரகடனப்படுத்துவதில், இன்றைய கிறிஸ்தவம் தோற்றுவிட்டது. மேலும், இது தேசாதிபதிக்குக் கேள்வியானால், நாங்கள் அவரைச் சம்மதப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போம் என்று சொல்லுகின்றார்கள் (மத். 28:14). இன்றைய நாளில், மந்திரி இருக்கிறார் நாங்கள் பார்த்துக்கொள்ளுகிறோம் என்று சொல்லுவதைப் போல. அவ்வாறே, சேவகர்களும் பணத்தை வாங்கிக் கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது (மத். 28:15). இவை அனைத்தும், உயிர்த்தெழுதலின் செய்தியை உலகத்திற்கு மறைப்பதற்காகவே. 

இயேசுவின் மார்பில் சாய்ந்துகொண்டு இறுதி இராப்போஜனம் எடுத்தவனும், 'ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்" (1யோவான் 1:1) என்று எழுதினவனுமாகிய  யோவான், தனது 92-வது வயதில், பத்மு தீவில் ரோம அரசாங்கத்தினால் அடைக்கப்பட்டிருந்தான். மற்ற சீஷர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு தேசத்தில் இரத்தசாட்சிகளாகக் கொன்றுவிட்டனர். ஆனால், யோவானை கொதிக்கிற எண்ணெய் இருக்கும் கொப்பரையில் போட்டபோதோ, அவன் அங்கேயும் எழுந்து நின்று, 'தேவன் அன்பாகவே இருக்கிறார்" என்று பிரசங்கம் பண்ணினான். அவனைக் கொல்ல முடியாததினால், பத்மு என்ற தீவில் கல்லுடைக்கும்படியாகப் போட்டது ரோம அரசாங்கம். ஒரு கைதி மற்ற கைதியைப் பார்க்க முடியாத அளவிற்கு, பகலின் பயங்கரமான வெயிலிலும் மற்றும் இரவின் பயங்கரமான குளிரிலும் கற்களை உடைக்கும்படியாக அவனை அங்கே வைத்திருந்தார்கள்.  

பத்மு தீவில் இருந்த அவனுக்கு, வருங் காலங்களைக் குறித்துப் பேசவேண்டுமென்று விரும்பிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, அவனுடைய கண்களைத் திறந்து, அவனுக்குள் காட்சியளித்துச் சொன்ன முதல் வார்த்தை, 'மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்" (வெளி 1:18) என்பதே. மார்பில் இருந்தவனுக்கே, க~;டத்தில், பாடுகளில், பிரச்சனைகளில், உபத்திரவங்களில், கைதியாய் இருந்தவனுக்கே உற்சாகமூட்டக்கூடிய செய்தி 'உயிரோடிருக்கிறேன்" என்பதே.

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன் (யோவா 10:10) என்றார் இயேசு. திருடனாகிய சாத்தான், சொத்துக்களை, பிள்ளைகளை, சமாதானத்தை, சுகத்தை, சௌக்கியத்தை, ஆரோக்கியத்தைத் திருடவும் அழிக்கவுமே வருகிறான்; ஆனால், உயிர்த்தெழுந்த ஆண்டவரோ, நமக்கு ஜீவனைக் கொடுக்கிறவர். இயேசு இந்த உலகத்தில் வந்தபோது, ஏழை மனுவுருவை எடுத்தவராக நம்மைத் தேடிவந்தார். நமக்கு ஜீவன் கொடுப்பதற்காகத் தனது ஜீவனையே கொடுத்தவரை நாம் தள்ளிவிடக்கூடாதே! ஒருவேளை, பிறப்பினால் ஒரு பாரம்பரியக் கிறிஸ்தவனாக நீ வாழ்ந்துகொண்டிருக்கலாம். தாய் தகப்பனுக்காக, ஏதோ ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையை நீ வாழ்ந்துகொண்டிருக்கலாம், மற்றவர்கள் உன்னை 'விசுவாசி" என்று பெயரிட்டு அழைக்கலாம்; என்றபோதிலும், குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். பாவங்களை அறிக்கையிட்டு, அவரை ஏற்றுக்கொள்ளவே இன்றும் நம்மை அவர் வருந்தி அழைக்கிறார். அவர் நமக்காகச் செய்துமுடித்துவிட்ட காரியங்களை உள்ளான மனதோடு ஏற்றுக்கொண்டு, வாயினால் அறிக்கை செய்வோம்.

  ஏழை மனுவுருவை எடுத்த

இயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்

ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே


கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ

கடும் முள் முடி பொன் சிரசில் சூடிட

கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்

சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்

கனிவுடனே உன்னை அழைக்கிறாரே – ஏழை மனு


இன்னமும் தாமதம் உனக்கேன் மகனே

இன்ப இயேசுவண்டை எழுந்து வாராயோ

இந்த உலகம் தரக்கூடா சமாதானத்தை

இன்று உனக்கு தரக் காத்து நிற்கிறாரே

அண்ணல் இயேசு உன்னை அழைக்கிறாரே – ஏழை மனு

இந்த இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வதற்குத் தடையாயிருப்பவைகளைத் தள்ளிவிட்டு, பாவங்களைத் தள்ளிவிட்டு, ஜீவாதிபதியை நோக்கி ஓடிவருவோமென்றால், வாழ்க்கையில் அவரை ஏற்றுக்கொள்வோமானால், மற்றவர்களுக்கும் அவரை அறிவிப்போமானால், நம்மையும் மற்றவர்களையும் நித்திய ஜீவனின் சுதந்தரவாளிகளாக மாற்றிக்கொள்ள முடியும். 

உயிர்த்தெழுதல் ஆணி வேராயிராவிட்டால் 

நம் விசுவாசம் அது வீணாயிருந்திருக்கும்

உபத்திரவத்திலும் உற்சாகத்தின் செய்தியதுதான் 

நம்மை அனுதினம் அவருடன் வாழவைக்கும்


பாவத்தில் வாழ்பவர் உயிரிருந்தும் மரித்தோரே

மரணபய மிருந்தாலும் மறுவுலகவர்க் கில்லையே

நியாயத்தீர்ப்பு நாளிலே உயிரோடவரெழுந்தாலும்

நீதிபதி தீர்ப்பிலே பாதாளத்தில் கிடப்பாரே


பரிசுத்தம் ஆனோர்க்கு மரணமும் நித்திரையே

பாடுகளும், பிரச்சனையும் பாடலாயவர் வாயினிலே

பாதாளமும் வேதாளமும் கையாள முடியாதே

பரிகரிக்கப்படும் சத்துரு மரணம் அவர் வாழ்க்கையிலே


திறவுகோல்களை இனி திருடன் பறிக்க இயலாதே

திரும்ப அவர் வருவதையும் தடுக்க இனி முடியாதே

உயிர்த்தெழுந்த கிறிஸ்து பலமாய் ரூபிக்கப்பட்டவர்

பரமவாசலைத் திறந்தார் பிதாவுடன் நமைச் சோக்கவே


சத்தமிட்டுச் சொல்வோரை சத்துருவும் எதிர்ப்பர்

சங்கிலியால் கட்டி சித்திரவதையுங் கொடுப்பர் - ஆனால்

சத்தியம் அடக்காது சத்துருவின் கொடுமையால்

சத்தமிடு தெருவில் சித்தமதை முடித்திடவே


                                                                                அன்பரின் அறுவடைப் பணியில்

                                                                        அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

           

April 2026

 

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே, 

சத்திய வசனத்தினால் நம்மை ஜநிப்பித்தவரும் (யாக். 1:18), சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பவரும் (ஏசா. 66:2), வசனத்தை அனுப்பி நம்மை குணமாக்குகிறவர் மாத்திரமல்ல, அழிவுக்கும் நம்மைத் தப்புவிக்கிறவரும் (சங். 107:20), வசனத்தினால் நமது வாழ்க்கையைச் சுத்தம்பண்ணுகிறவரும் (சங். 119:9), சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவரும் (எபி. 1:3), தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தை நமது கரங்களில் கொடுத்தவருமாகிய (எபே. 6:17) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  

இன்றைக்கு தேவ மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக நடக்கவேண்டிய அவசியமுண்டு. அநேக காரியங்கள் ஆவிக்குரியவை போலக் காட்சி அளிக்கலாம்; ஆனால், அவைகள் ஆராய்ந்து அறியவேண்டியவை என்பதனை மறக்க இயலாது. 

ஏவாளை வஞ்சித்த வஞ்சகன் சாத்தான். அவளைப் பார்த்து, 'நீங்கள் தேவன் விலக்கின கனியைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள்.... தேவர்களைப்போல் இருப்பீர்கள்" என்றும் கூறினபோது (ஆதி 3:5), அது அவர்களுடைய ஆவிக்குரிய நிலைதனை உயர்த்தும் என்றுதானே அவள் நினைத்திருக்கவேண்டும். நாம் உண்டாக்கப்பட்டதே 'அவர் சாயலில்தானே" என்பதனை அவள் ஒரு கணம் யோசித்திருந்தால், அவனுடைய வஞ்சக யோசனைக்குக் கீழ்ப்படிந்திருக்கமாட்டாளே. தேவனை நித்தமும் நேருக்கு நேர் சந்திக்கும் பாக்கியத்தினை விட இன்னமும் கண் திறக்கப்பட்டு எனக்கு நிகழப்போவது என்ன? என்று கேட்டிருந்தால் விழுகை ஏற்பட்டிருக்காதே.

பிரபல ஊழியர் ஒருவர் தன்னுடைய கூட்டத்தில், இனி இயேசு சரீரப் பிரகாரமாகத் தோன்றுவார் எனக் கூறினபோது, ஜனங்கள் 'அல்லேலூயா" என்று ஆர்ப்பரித்தனர். கேட்பதற்கு அது ஆவிக்குரிய பெரிய அனுபவம் போலக் காணப்பட்டது. ஆனால், கேட்ட ஜனங்கள் 'நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்" (2கொரி 5:16) என்பதனை மறந்துவிட்டனரே. 

அதே ஊழியர் என்னுடைய ஊழியத்தினை எதிர்க்கிறவர்கள் சபிக்கப்படுவார்கள். அவர்களை கர்த்தரின் நாமத்தில் சபிக்கிறேன் என்று முழங்கினார். (அநேக கேள்விக்குரிய காரியங்களை அவருடைய ஊழியத்தில் காணலாம் அதனை வசன ஆதாரத்தில் எதிர்ப்பவர்களைத்தான் அவர் அப்படிச் சபித்தார்). அதனைக் கேட்ட ஜனங்கள் பயந்தார்கள், நடுங்கினார்கள், ஆமேன் என்று அலறினார்கள்; ஆனால் ஊழியரும், அவரைக் கேட்ட  ஜனங்களும், 

'நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து ஆசீர்வதியுங்கள்" என்ற அன்புக் கட்டளைதனை (1பேது 3:9), பிசாசையும் சபிக்க அதிகாரமில்லை என்பதனை (யூதா 9) மறந்துபோய்விட்டார்கள் அல்லவா!

இதற்குக் காரணம் என்ன? தேவ வார்த்தைதனை புறக்கணித்த ஏவாளைப் போல தேவ வார்த்தையைக் காட்டிலும் தோற்றத்தின்படி ஆவிக்குரியதாய் தோன்றியவற்றினை ஏற்றுக்கொண்டதே.

இயேசுவை கவனியுங்கள்; பிசாசு அவரிடம் 'நீர் தேவனுடைய குமாரனேயானால் தேவாலயத்து உப்பரிக்கையின் மேலிருந்து தாழக் குதியும், ஏனெனில் உம்மைக் காக்கும்படிக்கு தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார் என்றும் உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்றும் எழுதியிருக்கிறது" என்று சொன்னான். வேத வாக்கியங்களை இணைத்து ஆவிக்குரிய தோரணையில் பேசுகிறான். ஆனால், அவனுடைய உள்ளான எண்ணங்களை அறிந்த நம் ஆண்டவர், தான் தேவ குமாரன் என்று சில நாட்களுக்கு முன் பிதா கொடுத்த அறிக்கைதனை  நன்றாக அறிந்தவராய், தன்னைச் சோதித்துப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என்பதனைப் புரிந்தவராய் அவனை மடங்கடித்தார். நான் இப்படிச் (குதித்து) செய்துதான் தேவகுமாரன் என்பதனை நரூபிக்கவேண்டிய அவசியமில்லை. தேவன் என்னைக் குறித்து சொன்ன சாட்சி வசனமே போதும் என்பதனை தெளிவாக்குகிறார்.

இன்றைக்கு அநேக ஊழியங்களில் காணப்படும் வேதனை இதுதான். வேத வசனங்களில் தங்களுக்குச் சாதகமானவைகளை மாத்திரம் தெரிந்தெடுத்து அதனை ஆதாரமாகக் கொண்டு உபதேசங்களையும், ஊழிய முறைகளையும் தெரிந்துகொள்ளும்போது சத்துரு இதனை தனக்குச் சாதகமாக மாற்றி இவர்களை உபயோகிக்க ஆரம்பித்துவிடுகிறான். வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும். இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால் அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை" அவர்கள் அண்ணாந்து பார்ப்பார்கள் பூமியையும் நோக்கிப் பார்ப்பார்கள்; ஆனாலும், இதோ இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும். இடுக்கத்தால் இருளடைந்து அந்தகாரத்திலே தள்ளுண்டு அலைவார்கள் (ஏசா 8:20,22) என்பதுதானே தேவனின் நீதி. 

கிழட்டு தீர்க்கதரிசியின் பொய் வாக்கினை துடிப்பான வைராக்கியமான இளம் தீர்க்கதரிசி அடையாளம் காண முடியாமற்போனதற்கும் காரணம் இதுவல்லவோ! போன வழியாய் திரும்பாமலும் இருவென்று கர்த்தர் தம்முடைய வார்த்தையால் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்று அவன் கூறியதில் தெளிவு இருந்தது. அது கட்டளை எனவும் அறிந்திருந்தான் (1இராஜா 13:9), ஆனால் எனக்கு ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று பொய் சொன்ன கிழட்டு தீர்க்கதரிசியின் வார்த்தையில் காணப்பட்ட கபடமான 'தூதன் சொன்னான்" என்ற வார்த்தையை சோதித்திருந்தானேயானால் தன் ஜீவனை இழக்க நேரிட்டிருக்காதே! (1இராஜா 13:18,24). இன்றைக்கும் அநேக ஊழியர்கள் தேவ வார்த்தையை மீறி தூதன் சொன்னான் என்றே கூறி ஜனத்தினை திருப்பிவிட்டிருப்பது நாம் அறிந்ததே. பார்வைக்கு ஆவிக்குரிய கோலம் போட்ட அனைத்து திட்டங்களும், ஆலோசனைகளும், ஊழியங்களும் இந்த வகையைச் சார்ந்ததே; விழிப்பாயிருப்போம். 

சில வேளைகளில் கர்த்தரின் வார்த்தைக்குக் காத்திராமல், நம்முடைய அனுபவங்களை மாத்திரம் சார்ந்து, நம்முடைய கருத்தினை வெளிப்படுத்தி ஆலோசனை சொல்லவும் சோதனை உண்டாகலாம். நாத்தான் தீர்க்கன் செய்தது அதுதானே, 'தாவீது ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும் கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம் பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறது" என்றார். அப்பொழுது நாத்தான் இராஜாவை நோக்கி 'நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்hம் செய்யும், கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே"என்றான் (2சாமு 7:2,3). ஆனால், அது அவனுடைய அனுபவத்தையும், எண்ணத்தையும் சார்ந்ததே. தேவன் இடைப்பட்டு தம்முடைய திட்டத்தைத் தெளிவாக்குகிறார். இந்த ஆபத்தினையும் அடையாளம் கொண்டு செயல்படுவது நல்லது.

அனுதாபம், பற்று இவைகளும் சில வேளைகளில் ஆவிக்குரிய உடையினைத் தரித்து நம்மைச் சந்திக்கலாம். பவுலின் வாழ்வினை உற்றுப் பாருங்கள். அகபு தீர்க்கன் மூலம் பவுல் எருசலேமில் கட்டப்பட்டு புறஜாதிகள் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாரென்று தீர்க்கதரிசனம் உண்டாகிறது. அதனைக் கேட்டவர்கள் பவுலின் மேல் கொண்ட பாசத்தின் மிகுதியினால், எருசலேமுக்குப் போகவேண்டாமென வேண்டி, கெஞ்சி நிற்கின்றனர் (அப் 21:10-12). ஆனால் பட்டணங்கள் தோறும் ஆவியானவர் சொல்கிறதனை தெளிவாகக் கேட்டு தனக்குள் உறுதியான தீர்மானமாக, 'அவைகளில் ஒன்றையும் குறித்துக் கவலைப்படேன், என் பிராணனையும் நான் அருமையாக எண்ணன். என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோட முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்" என்ற முழக்கம் இன்றைக்கும் கேட்கப்பட்டால் நலமாயிருக்குமே. அனுதாபம், பாசம், பற்று சொந்த பந்தமல்ல தேவ வார்த்தையின் நிறைவேறுதலே நமக்கு முக்கியம் என்பதனை வாழ்ந்து காட்ட தேவ மனிதர்கள் தேவை. 

ஆபத்தினைச் சந்திக்கும் வேளைகளில் ஆவிக்குரிய கவசம் அணிந்த ஆலோசனைகள்  ஆபிரகாமிடத்திலிருந்து சாராளுக்கு வந்ததுபோல வரலாம். 'உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும் நீ உன்னை சகோதரி என்று சொல்" என்ற ஆலோசனை (ஆதி 12:13).தேவன் எகிப்திலும் கேராரிலும் அவனைக் காப்பாற்ற இடைப்பட்டிருக்காவிடில் இந்த தேசத்தாரை அழிவுக்கு நேராக வழிநடத்தியிருக்குமே (ஆதி 12:17, 20:9). என்னைக் காத்துக்கொள்ள, நான் மேற்கொள்ளும் ஆவிக்குரிய வேஷம் என்னைச் சுற்றியிருப்போரின் அழிவுக்குக் காரணமாக மாறிவிட்டால் அது எத்தனை பெரிய துக்ககரமானது. என் மூலம் ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படவேண்டுமே ஒழிய, என் மூலம் அவர்கள் அழிக்கப்பட்டுவிடக்கூடாதே. 

    சத்துருவினிடத்தில் கூலி பெற்றிருந்த செமாயா என்பவன் நெகேமியாவை நோக்கி, 'நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளே போய் தேவாலயத்தின் கதவுகளை பூட்டுவோம் வாரும், உம்மைக் கொன்றுபோட வருவார்கள். இரவிலே உம்மைக் கொன்று போட வருவார்கள்" என்றான் (நெகே 6:10). எத்தனையான ஆவிக்குரிய முலாம் பூசப்பட்ட பொய், ஆனால் ஜெபத்தினால் தேவனோடு ஒன்றிப் போய்விட்டவனும், தேவ காரியத்தில் கண்ணும் கருத்துமாய் இருந்தவனும், தேவனுக்குப் பயந்து நன்மை செய்பவனுமாகிய நெகேமியாவை அது அசைக்கவோ, ஏமாற்றவோ முடியவில்லை. மாறாக அவன் சொல்வதனைப் பாருங்கள்! என்னைப் போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய் பதுங்குவானோ? என்ற இடி முழக்கக்  குரல் (நெகே 6:11). அந்தப் பொய்யை அடையாளம் கண்டுகொள்ள நேரம் எடுக்கவில்லை. 

வெளி வேத்தில் மேன்மை பாராட்ட விரும்பும் ஒரு கூட்டம் எப்போதும் உண்டு; அது இருதயத்தில் அல்ல. அது தங்களையே மெச்சிக்கொள்ளும், தங்களுக்கே புகழ் தேடும். அதற்காக யாரையும் பலிகொடுக்கவும் தயங்காது (2கொரி 5:12). வெளித்தோற்றத்தின்படி மாத்திரம் பார்த்து ஏமாந்து போகாமல் தேவன் நம்மைக் காப்பாராக (2கொரி 10:7). பொல்லாங்கானதாகத் தோற்றமளிக்கிறவைகள் அநேக வேளைகளில் ஆவிக்குரிய தோற்றம் போலக் காட்சி தர ஏராளமான வாய்ப்புகள் உண்டு. இது கடைசி காலம் கன்னியாக வாழவேண்டிய சபைதனை கறைப்படுத்திவிட சத்துருவாகிய சாத்தான் பலவித சாகசங்களை கையாளும் வேளையிது (2கொரி 11:3).

கவனமாக வாழ்வோம் கர்த்தரின் ஆலோசனையாம் கர்த்தரின் வார்த்தைதனை நன்கறிவோம். காலத்தின் கோலத்தினைப் புரிந்துகொள்வோம். கருத்தாய் ஜீவிப்போம், கிருபைதனைச் சார்ந்த வாழ்வு பெற்றிடுவோம், கண்களில் தெளிவு உண்டாக்கும் கர்த்தரின் நியாயங்களால் எச்சரிக்கப்பட்டவர்களாய் வாழ்வோம் (சங் 19:8-11). எல்லா ஆவிகளையும் நம்பாமல் அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறிவோம் (1யோவா 4:1). தேவனால் உண்டானவைகள் தேவ வார்த்தையால் முத்தரிக்கப்பட்டு தேவனால் அங்கீகாரம் பெற்றிருக்கும். கலப்பு அதிலே காணப்படாது. தேவனால் உண்டானவைகள் அல்லாமல் தேவ நாமத்தைத் தரித்துக் கொள்பவை அந்திக்கிறிஸ்துவின் அடைக்கலத்தால் உண்டானவை என்பதனை மறந்துவிடாதீர்கள்.  

பல வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய பாடல் வரிகள்...

வேதமே எந்தன் வெளிச்சமே

வழிகாட்டியும் அதுவே

இரவுல் பகலும் தியானிப்பேன்

இடறிடேன் என்றென்றுமே

பிழைப்பது தேவ வார்த்தையினால்

மாத்திரம் என்றறிவேன்

குழந்தையைப் போல வாஞ்சிப்பேன்

பதறிடேன் என்றென்றுமே

இன்று அநேகருடைய வாழ்விலும், ஊழியத்திலும் வேதத்தின் முக்கியத்துவம் அசட்டை செய்யப்படுவதனையும், மறக்கப்படுவதனையும் காணுங்கால் உள்ளம் வேதனை அடைகிறது. வேத புத்தகம் மந்திர புத்தகம் போல் மட்டுமே பாவிக்கப்படுவதனையும் கண்டு மனம் புழுங்குகிறது.

'நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்" (ஓசி 4:6) என்று தேவன் கூறாதபடி பார்த்துக்கொள்ளவேண்டியது நம் கடமை. 

'என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன், அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்" (ஓசியா 8:12) என்று அங்கலாய்க்கும் தேவனைக் கண்டவர்கள் எத்தனை பேர், மற்ற மதங்களைப் போல நம் கையில் தேவன் அருளிய புத்தகமாகிய வேதம், ஏதோ ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், சடங்குகளில், விழாக்களில் ஓதுவதற்கு அருளப்பட்டது அல்ல. 

மாறாக அன்றாடக வாழ்வில் அதனை ருசித்து அவருக்குள் தேறினவனாக மாறி, நற்கிரியைகளைச் செய்யத் தகுதி பெற்றவர்களாகி, தேவனுக்கு உகந்தவர்களாக மாற்றுவதற்காகவே தரப்பட்டுள்ளது (2தீமோ 3:16,17) என்பதனை நாம் மறக்கலாகாது.

ஆயிரம் ஸ்தோத்திரபலிகளைச் சொன்னால் போதும் என்ற நிலைக்கு இன்று அநேகர் மாற்றப்பட்டிருப்பது நமது அவல நிலையையே சுட்டிக்காட்டுகிறது. வேதத்தினை ஆராய்ந்து அறியவும், தேடி வாசிக்கவும் (ஏசா 34:16) இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாகக் கற்றுக்கொள்வதும் (2தீமோ 3:15) அதன் அடிப்படையில் மற்றவர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்துவதும் நம்முடைய கடமைகளில் ஒன்றாகும்

அநேக நேரங்களில் வேதம் புறக்கணிக்கப்பட்டு, ஜெபங்கள் மணிக் கணக்கில் ஏறெடுக்கப்படுகிறது. விண்ணப்பங்கள் பரலோகத்தை நோக்கி தான் செய்யப்படுகிறது. தன்னுடைய செவிதனை வேதத்திற்கு விலக்கும் எந்த ஜெபமும் பரலோகம் அங்கிகரிக்காதவை என்பதனை அறியுங்கால் அந்த பிரயாசம் எத்தனை வீணாக செலவழிக்கப்படுகிறது என்பது உண்மை (நீதி 28:9).வேதத்தினை தியானித்து தன் வாழ்வினை ஆராய்ந்து அதன் அடிப்படையில் தேவ சமூகத்தில் சேரும்போது, நம் வாயில் வார்த்தை பிறக்கும் முன்னமே தேவன் பதில் அளிக்கிறார் என்ற உண்மையினை அறிந்தவர்கள் எத்தனை பேர்?

அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன். அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன் (ஏசா 65:24) என்ற வாக்கு அவரின் இராஜ்யத்தின் பிள்ளைகளுக்குச் சொந்தமல்லவா!

வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும். இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால் அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை (ஏசா 8:20) என்பது மாறாத பிரமாணம். 

அநேகர் வேதத்தினைக் கேட்க விரும்பாததற்குக் காரணம், அது அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்ற தடை செய்துவிடும் என்பது. அழுதாகிலும் அவரிடம் பெற்றுக்கொள்ளலாம் என்பதும், யாராகிலும் ஜெபித்தாகிலும் வாங்கித் தந்துவிடுவார்கள் என்பதும் போன்ற விநோத எண்ணங்களை உள்ளடக்கி வாழ்வதாலேயே சிலர் கர்த்தருக்குக் காணிக்கைச் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாமென தப்புக்கணக்குப் போடுகின்றனர். அவரோ நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன், பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே என்கிறார் (சங் 50:12). சிட்சையை பகைத்து என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய் என்பதே அவர் சொல்லும் குற்றச்சாட்டு (சங் 50:17).

இன்னொரு கொடுமை இந்த நாட்களில் நடக்கிறது; அது என்ன? வேத வாக்கியங்களை தப்பாகப் புரிந்துகொண்டதனால் உண்டாகும் பிரசங்கங்கள் (மாற் 12:24). பரலோகத்தில் அநேகர் வீடு அற்றவர்களாய் திரிவார்கள் என்றார் ஒரு பிரபல தமிழ் பிரசங்கியார். தாவீது தன் மடியில் குளிருக்காகக் கொடுக்கப்பட்ட அபிஷாகை அறியவில்லை, காரணம் உணர்த்துதலின் ஆவியால் நிறைந்திருந்தார் என்றார் பிரபல தொலைக்காட்சிப் பிரசங்கியார். நீ கோடி கோடியாய் பணம் பெறுவது தேவ நோக்கம் என்றார் தீர்க்கதரிசி என்று ழைத்துக்கொள்ளும் பிரபல ஊழியர் ஒருவர். பவுலுக்கு திருமணத்திற்கு வெளியே பெற்ற ஒரு குமாரன் இருந்தான், அவன்தான் சரீரத்தில் முள்ளாய் விளங்கினான் என்றார் தன்னை பெரிதான வெளிப்பாடுள்ளவனைப் போல காண்பிக்க விரும்பும் மற்றும் ஒரு ஊழியர். ரெபேக்காள் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் காட்டினாள், ஆகையால் நீ எனக்கு மட்டுமல்லாமல் நான் ஏறும் வாகனத்திற்கும் பெட்ரோல் ஊற்று என்றார் ஒரு பழம் பெரும் போதகர். தசக பாகம் உன் ஆசாரியன் கையில் மாத்திரமே தரப்படவேண்டும் என்றார் பழைய உடன்படிக்கையைத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள விரும்பும் ஒரு போதகர். அசீரியனைக் குறித்து தேவன் குறிப்பிடும் வரிகளான 'இதோ திராணியும் வல்லமையுமுடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்" (ஏசா 28:2) என்பதனை பரிசுத்த ஆவி என்று போதிக்கும் பிரபல உலகப் புகழ் ஊழியர் ஒருவரும் உண்டு. ஏதேனில் பாய்ந்த முதலாம் ஆறு பைசோன் ஆவிலா தேசம் முழுவதும் சுற்றி ஓடும் என்பதனை 'ஆவியில்லா" தேசம் என்று ஆராய்ச்சி செய்து வெளிப்பாடு பெற்றதுபோல பேசும் வேதாகமக் கல்லூரி பேராசிரியரும் இதில் அடங்குவர். எத்தனை எத்தனை அபத்தங்கள் ஆவிக்குரிய உலகில் இதனையும் கேட்டு 'அல்லேலூயா" என்று ஆர்ப்பரிப்பவர்களும் உண்டு. இவரைப்போல பேசுபவர்கள் இல்லை என புகழ் பாடுவோரும் உண்டு. ஆசாரியர் உதடுகளில் வேதத்தை தேடுவார்கள் என்பதை மறக்கலாகாது (மல் 2:7). 

என் ஜனம் அறிவில்லாமற் சங்காரமாகிறார்கள் என்று தேவன் உரைப்பது (ஓசி 4:6) இதனைத்தானோ?

இன்று கிறிஸ்துவை அறியாதோர் நம்மிடத்தில் ஓடி வருவதற்கு வேதம் உயர்த்தப்படவேண்டுமே. எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடி வருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள். அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள். ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும் எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும் (ஏசா 2:2,3) என்பது வாக்குத்தத்தம் அல்லவா!

வேதம் போற்றப்படாத, மதிக்கப்படாத, விரும்பப்படாத இடங்களில் தீர்க்கதரிசிகளுக்கு தரிசனம் கிடைப்பதில்லை என்பதனை மறக்கலாகாது (புல 2:9). நீதி 29:18 - ஆம் வசனமும் இதனைத்தான் வலியுறுத்துகிறது. தரிசனமற்ற அநேகருடைய வாழ்வுக்குக் காரணம் வேதம் போதிக்கும், உணர்த்துவிக்கும், உந்தித்தள்ளும் உண்மைதனையும், முழு வேதாகமம் அருளும் விளக்கத்தினையும் அவர்கள் காணக்கூடாதபடி கண் சொருகி இருப்பதினாலேயே, தரிசனம் அற்ற ஒரு வாழ்க்கையில் உத்வேகம் காணப்படாமல், உள் நோக்கத்தின் அடிப்படையில் சுயலாபம் தேடும் காரியங்கள் அதிகமாகக் காணப்பட ஏதுவாகும். அதுவும் தேவன் தராத தரிசனங்கள் ஜனத்தினை வேறு திசைக்கு கொண்போய்விடுமே!

எனவே வேதத்தின் அறிவைப் பெருக்குவோம், நேசிப்போம், அது என் மனமகிழ்ச்சி என்று முழங்குவோம், ஆராய்ந்து காலத்தினையும் புரிந்துகொண்ட வாழ்விற்கு ஒப்புக்கொடுப்போம். கடமைதனை செய்ய கர்த்தரின் பெலத்தினையும் பெற்றுக்கொள்வோம். வருங்கால சந்ததிக்கும் கற்றுத் தருவோம் நாமும் கற்றுத் தேறுவோம். நாம் தேறுகிறது மற்றவர்களுக்கு விளங்குவதாக (1தீமோ 4:15) அது தேசத்தினை அசைக்கப் போதுமான பெலனுள்ளது. 

தேவன் அருளிய வேதம் நம் இருதயத்தில் இருந்தால் நம்முடைய நடைகள் பிசகுவதில்லை (சங் 37:31).

அவருடைய வசனம் நம்மை நிரப்பினால் அவருடைய சித்தத்தினை அறிந்துகொள்வதும் அவருக்குப் பிரியமானதைச் செய்வதும் மிகவும் எளிதாகிவிடும் (சங் 40:8).

தேவ வார்த்தைகளைக் கற்று அதில் நடக்க முயற்சி செய்வோர் கறையற்ற பழுதற்ற வாழ்க்கை வாழ்வதனை அனுதினமும் அனுபவிப்பார்கள் (சங் 119:1).

வேதத்தினை நேசித்து அதன்படி நடக்க ஒப்புக்கொடுத்தோர் மாயையான வழிகளுக்குத் தங்களை ஒப்புக்கொடாமல், ஏமாற்றும் பாதைகளில் நடவாமல் காப்பாற்றப்படுவார்கள் (சங் 119:29).

தேவ வார்த்தைகள் நமக்கு மனமகிழ்ச்சியானால், நாம் அமிழ்ந்து மாண்டு போகாமல், அது துக்கத்தினாலேயோ, உபத்திரவத்தினாலேயோ ஏற்பட்டாலும் காக்கப்படுவர் (சங் 119:92).

தெளிந்த புத்தியும் நல் உணர்வும் கொண்ட வாழ்க்கைதனை வாழச் சிறந்த வழி வேதத்தினை இதயத்தில் காத்துக்கொள்வதே (சங் 119:34). வீண் சிந்தைக்கும் பேச்சுக்கும் நம்மை விலக்கி இருமனம் கொண்ட வாழ்வில் இருந்து தற்காக்க வேத வார்த்தைகளுக்கே வல்லமை உண்டு (சங் 119:113).

என்னை பெரியவனாக்கி முதியோர்களையும் விட ஞானமுள்ளவனாக மாற்ற உதவுவது வேத தியானமே (சங் 119:99.100).

அடுக்கிக்கொண்டே போகலாம் இலையுதிரா வாழ்வு, செய்யும் காரியங்களில் வெற்றி, எத்திசையிலும் பயனுள்ள வாழ்வு, புத்தியுள்ள மேன்மையான வாழ்வு, தேவ பிரசன்னத்தை ஏந்திச் செல்லும் பாத்திரமாக மாற்றப்படும் பாக்கியம் (சங் 1:4; யோசுவா 1:7,8).

எனவே கர்த்தாவே உம் வேதத்தின் அதிசயங்களை நான் பார்க்கும்படி என் கண்களைத் திறந்தருளும் எனக் கெஞ்சுவோம் (சங் 119:18). 


ஆவிக்குரிய முலாம் பூசி ஆவிக்குரியவர்களையும் மூடராக்கி

ஆணையிலிருந்து விலகச்செய்து ஆண்டவருக்கும் தூரமாக்கி

சாயலில் இருப்போரையும் சடுதியாய் வந்து வஞ்சித்துவிடுவான்

சத்துருவின் தந்திரமிது சந்ததி நாம் எச்சரிக்கையோடிருப்போம் 


அனுபவம் அனுதாபமென ஆடைகள் பல போர்த்திக்கொண்டு

அனுப்பப்பட்டோரின் வாழ்க்கையில் அவர்களாகப் புகுந்துகொண்டு

இளைய தீர்க்கரின் பயணத்தை இவர்களாகவே இடைமறிக்கும்

கிழவர்கள் வார்த்தைகளுக்கும் நாம் கவனமாயிருக்கவேண்டுமே!


சத்தியத்தை மறைத்துவிட்டு சாதகமாயதைச் சாய்துக்கொண்டு

சத்துருவுக்குச் சகோதரராய் சத்தியத்திற்கோ துரோகிதராய்

சந்தியில் செய்தி சொல்லி ஆத்துமாக்களின் உயிர்க் கொல்லியாய்

சுற்றுவோரின் சுருக்கு மடியில் சிக்கிக்கொண்டால் பரிதாபமே!


கன்னிகையாம் சபை தினம் கறைபடாமல் காக்கப்படட்டும்

வார்த்தையாம் ஆயுதம் வாளாய் நம் கையிலிருக்கட்டும் 

ஒளியாம் வேதம் ஒவ்வொரு நாளும் உயர்த்தப்படட்டும்

வழிகள் பிசகாதிருக்க இதயம் அதால் நிறைந்திருக்கட்டும்


பிதாவுக்குப் பிரியமாயிருக்க நம்மைப் பயிற்றுவிப்பது அதுதானே

கறையற்ற வாழ்வுக்கு நம்மை வழிநடத்துவதும் அதுதானே 

மாயையான வாழ்க்கைக்கும் அதுதான் நம்மை விலக்கிக் காக்கும்

மறுவுலக வாழ்விற்கும் அதுதான் நம்மை வழிநடத்திச் செல்லும்



                                                                       அன்பரின் அறுவடைப் பணியில்

                                                                   அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

March 2026

 


   நம்முடைய கன்மலையும், கோட்டையும், இரட்சகரும், தேவனும், நாம் நம்பியிருக்கிற துருகமும், கேடகமும், இரட்சண்யக் கொம்பும், உயர்ந்த அடைக்லமுமாயிருக்கிற நம்முடைய ஆண்டவரின் நாமத்தில் வாழ்த்துகள் (சங். 18:2). இப்படிப்பட்ட ஆண்டவரைக் கொண்டிருக்கும் நமக்கு, வாழ்விலும் ஊழியத்திலும் தடைகள் வராமல் இருப்பதில்லை. 'இடறல்கள் வருவது அவசியம்" என்று இயேசுவும் சொன்னாரே (மத். 18:7). 

அவைகளைக் குறித்து தியானித்தால், சில உண்மைகளைக் கற்றுக்கொள்வதோடு, அவைகளைத் தாண்டி முன்னேறவும் நமக்கு வழிகள் புலப்படலாம். எனவே, இந்த மடலை அந்த நோக்கத்தில் எழுதுகிறேன். 

D. L. மூடி என்ற தேவ மனிதர் சொன்னார்: 'எனக்கு நானே முதல் எதிரி" என்று. நமக்குள் ஏற்படும் போராட்டங்களும், சோதனைகளும், தர்க்கங்களும், நினைவுகளுமே அநேக நேரங்களில் நம்முடைய ஓட்டத்தைத் தடைசெய்யப் போதுமான பெலமுள்ளதாய் இருக்கின்றன. சாத்தானால் விதைக்கப்படும் சந்தேகங்கள் (மத். 13:25), பயங்கள், எதிர்காலத்தினைக் குறித்த நிச்சயமற்ற எண்ணங்கள், நமக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களைக் குறித்த தடுமாற்றங்கள், தனிமை போன்றவற்றை மேற்கொள்ளக் கூடாமல் திகைக்கும் சமயங்கள், பற்றாக் குறைகள், தேவையற்ற எதிர்ப்புகள், சிநேகிதரானாலும் நம்பக்கூடாமற்போகும் சந்தர்ப்பங்கள், உடனிருப்போரில் காணப்படும் தொய்வுகள் நம்முடைய வேகத்தினைக் குறைக்கப் போதுமானவைகள். 

அவைகள் நம்மை உட்காரச் செய்து, எதிர்மறையான காரியங்களைச் சிந்திக்கவைத்து, விசுவாசத்தினைத் தளரச் செய்பவை; கூடவே, துன்மார்க்கத்தார் செழிப்பதனையும், தேவ வேம் தரித்தவர்கள் வேகமாகச் செயல்படுவதனையும் கண்டு, நமக்கு ஏன் இப்பபடி நடக்கிறது?  என்ற கேள்விகளையே சுற்றி சுற்றி வரச்செய்து, முன்னோக்கிப் பார்க்கவிடாமல் செய்துவிடுமே (சங். 73). 

வெளியின் போராட்டங்கள், உள்ளே பயத்தினை உருவாக்கிவிடுமே          (2 கொரி. 7:5). 

நம்மை நாமே ஜெயிக்காவிட்டால், ஜெபத்தினையும் சந்தேகிக்கத் தோன்றும் (1 யோவான் 3:21,22). இது மன அழுத்தத்தினை அதிகமாக்கி, கால்களைக் கட்டிவைத்துவிடும். 

இவைகளை மேற்கொள்ள ஒரே வழி, வேத வார்த்தைகளால் நம்மை நிரப்புவதும், அதின் ஊடாக தேவனையும், நம்மையும் கண்டுகொள்வதுமே. நம்மைக் குறித்து தேவன் என்ன நினைக்கிறார் என்று அவருடைய வார்த்தையின் மூலமாகக் கற்றுத்தருவதற்கு ஆவியானவரும் உதவுகிறார். 

ஆவியினால் உரமேறிய தேவ வார்த்தைகளை இந்த சமயத்தில் உபயோகிப்பதே, இதன் மேல் நாம் எடுக்கும் ஆயுதம். இளைத்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தைகள் (ஏசா. 50:4) செய்யும் விந்தைதான் என்னே! 

16 வருடமாய் செயலற்றுப்போயிருந்த செருபாபேலும், யோசுவாவும் தீர்க்கர்களின் வார்த்தையால் செயல்படத் தொடங்கினார்கள் அல்லவா! (எஸ்றா 5:12).

குடும்ப உறவுகளில் ஏற்படும் விரிசல்கள் நம்மை செயலற்றுப்போகப்பண்ணும் என்பதனை அறிந்த பவுலும், உங்கள் ஜெபங்களுக்குத் தடை உண்டாகாத வண்ணம், கூடிவாழுங்கள் என்கிறார்   (1 கொரி. 7:5). இதைத்தானே பேதுருவும் தன்னுடைய நிருபத்தில் குறிப்பிடுகிறார் (1 பேதுரு 3:7).

அநேக வேளைகளில், குடும்ப வாழ்வில் சத்துரு நுழைந்து செயல்படவேண்டியவர்களைக் கட்டிவைத்துவிடுகிறான். அவைகள் இருதயத்தில் நுகமாக மாறிவிடுகிறது. அதனையும் ஒழிப்பதற்கு தேவனுடைய ஆலோசனை, 'ஆவியினால் நுகத்தடி உடைக்கப்படும்" என்பதே (ஏசாயா 10:27). அபிஷேகத்தின் அளவை அதிகப்படுத்துவதே இதற்குப் பதில் (யோவான் 3:34). 

தன்னுடைய ஊழியத்தினால் (குறுகிய காலத்தில் உண்டாக்கப்பட்டது அப். 17 அதி.) உருவாக்கப்பட்ட தெசலோனிக்கேய விசுவாசிகளுக்கு உபத்திரவங்கள் வந்தபோது, அவர்களின் விசுவாசத்தினை உறுதிப்படுத்தவும், ஊன்றக் கட்டவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் பவுல் அங்கே போக விரும்பியபோது, சாத்தானே பவுலின் பிரயாணத்தினைத் தடைசெய்கிறான் (1 தெச. 2:18). தன்னால் போகமுடியாதபோது, அவன் தீமோத்தேயுவை அவர்களைக் கண்டு நலம் விசாரிக்கவும், புத்திசொல்லவும் அனுப்பிவிடுகிறதனைக் காண்கிறோம். 

நாம் செய்யக்கூடாமல் தடுக்கப்படும்போது, நம்மோடு இணைக்கப்பட்டவர்களை அதே காரியத்தினைச் செய்துமுடிக்க உபயோகிப்பது ஞானம். அதற்குரிய அளவிற்கு அவர்களைப் பயிற்சித்து நடப்பிப்பது இங்கே காணக்கூடியது. நான்தான் எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்ற மனப்பான்மையிலிருந்து இது அநேகரை விடுதலையாக்கும். கூடவே, உடன் ஊழியர்களை ஆயத்தப்படுத்தவும் பிரயோஜனமானது. 

உபத்திரவம் (persecution) என்ற ஆயுதத்தினை உபயோகிக்க சத்துரு இந்த நாட்களில் அதிகமாய் முயற்சிக்கிறான் (1 தெச. 12:14). சுவிசேஷத்தின் எதிரிகள் இன்றைக்கு நன்றாக தங்கள் தீயச் செயல்களைச் செய்வதற்குப் பழக்குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நல்ல இணைப்பை ஏற்படுத்தி, அதனை முறைப்படுத்தி செயல்படுத்திவருகிறார்கள். விசுவாசத்திற்குள் புதிதாக வந்தவர்களைப் பயமுறுத்தி அல்லது அவமானப்படுத்தி அல்லது அப்புறப்படுத்தி அல்லது அடித்து, புதிய விசுவாசிகளை தேச துரோகிகளாகச் சித்தரித்து, சமுதாயத்திலே ஒரு வெறுப்புணர்ச்சியினை உருவாக்கி, ஊழியங்களைத் தடைசெய்கிறார்கள். பவுலைப் போல நாமும் புதிய உத்திகளைக் கையாள, நாமும் புதிய செயல்முறைகளைக் கையாளவேண்டிய அவசியம் உண்டு; அது இன்றியமையாததாக மாறியுள்ளது. அநேகர் பயிற்சிபெறவேண்டும். குறிப்பாக இளையவர்கள் இயக்குவிக்கப்படவேண்டும். 'இளங்கன்று பயமறியாது" என்பது பழமொழியல்லவா!

    அநேக நேரங்களில் இயேசுவோடு நடந்த சீஷர்களே, சிறுபிள்ளைகள் இயேசுவிடத்தில் நெருங்கிவருவதனைத் தடுத்ததுபோல, தங்களை அறியாமலேயே தடுத்துவிடுகின்றனர் (மாற்கு 10:14). அவர்கள் இயேசுவோடு இணைந்து ஊழியம் செய்தது உண்மை; ஆனால், இயேசுவின் மனநிலையை அறியவில்லை; அவருடைய உள்ளான விருப்பத்தினை அறியவில்லை. ஒருவேளை, தங்களின் தலைவர் தொந்தரவு செய்யப்படக்கூடாது என்பதில் அதிகக் கவனம் செலுத்தியதினால் இருக்கலாம். ஆயினும், இயேசுவின் வாஞ்சையை அறிந்தார்கள் இல்லையே!

மார்க்க நெறிகளை அதிகம் வலியுறுத்துகிறவர்களைக் குறித்து இயேசு சொல்லும்போது, 'மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை" (மத்தேயு 23:13) என்று சொல்லுகின்றார். வசனம் பேசுகிறவர்களே, 'வார்த்தையாம்" இயேசுவிடம் நெருங்கவிடாதபடிச் செய்ய வாய்ப்புகளுண்டு. அதனால்தான், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள் என்றார் (மத்தேயு 23:3). நம்முடைய போதனையும், நடக்கையும் அநேகருக்கு இடறுதலாக இல்லாதவாறு பார்த்து, சீராய் நடப்பது நமக்கு ஏற்றது. 

'சுவிசேஷ எதிரிகள்" எக்காலத்திலும் ஆண்டவரை அறியாதோர் இரட்சிக்கப்படுவதற்குத் ததைடயாகவே செயல்பட்டார்கள் என்பதனை நாம் அறிவோம் (1 தெச. 2:16). அவர்களின் எண்ணிக்கை இன்று மதவெறியாக உருவெடுத்து, இந்தியா முழுவதும் குறிப்பாக வடஇந்தியாவில் பெருகி இருப்பது நாம் அறிந்ததே. சிறுபிள்ளைகள் முதல் முதியவர் வரை அவர்களால் கெடுக்கப்பட்டு, மனதளவிலே மக்கள் சுவிசேஷத்தினைக் கேட்கக்கூடாதபடி 'கலாட்டா" செய்யவும் ஏன் தாக்கவும் முற்பட்டு, ஒரு பீதியை உருவாக்கி சட்டத்தினைத் தங்கள் கைகளிலேயே எடுத்து, அதனை தங்களுக்கு ஏற்றாற்போல் வளைத்து, போலீஸின் துணையோடு அநேக நேரங்களில் அரங்கேற்றி, சமூக வலைதளங்களை நிரப்பி, தாங்கள் ஏதோ சாதித்துவிட்டதுபோல் தங்களைக் காண்பித்து, சமாதான உறவுகளைக் கெடுத்து, பிளவுபடுத்தி மனித சமுதாயத்திற்கு சாவுமணி அடித்துக்கொண்டிருக்கிறார்கள். 

அப்படிப்பட்டவர்களுக்கு சமூகத்திற்கு உதவ அறியாதவர்கள், அழிக்கத்தான் அறிந்தவர்கள். நன்மைகளைத் தூஷிக்கிறார்கள். கிறிஸ்துவின் நாமத்தில் செய்யப்படும் எந்த நற்கிரியையையும் ஆலோசனைகளையும், உதவிகளையும், உற்சாகத்தினையையும் கொச்சைப்படுத்தி, தேவ கோபாக்கினையை தங்கள் மேல் திணித்துக்கொள்ளுகிறார்கள். இடறல் உண்டாக்குகிறவர்களைக் குறித்து இயேசு பேசின வார்த்தைகள் கடினமானவைகள் அல்லவா! இவைகளை முறியடிக்க அவர்களை இயக்குவிக்கும் ஆவிகளைக் கட்டி ஜெபிப்பதனையே நாம் அதிகமாக மேற்கொள்ளவேண்டியுள்ளது (எபே. 2:2). சத்துருவின் கையில் தங்களை ஒப்புக்கொடுத்தோர் எண்ணிக்கை பெருகுகிறதே!

சில வேளைகளில், அன்றைய நியாயசாஸ்திரிகளைப் போலவே (லூக். 11:52) அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டவர்கள், தாங்களும் பரலோகத்தில் பிரவேசிப்பதில்லை, உட்பிரவேசிப்பவர்களையும் தடைபண்ணுகிறார்கள். உபதேசத்தின் உச்சகட்டம் என்று கூறி, அநேகர் அழிந்துபோகிறவர்களைக் குறித்து கரிசனையற்றவர்களாகவே மாறிவிட்டக் கொடுமையும் உண்டு. நரகம் நிரந்தரமானது அல்ல, நியாயத்தீர்ப்பு இயேசுவிலேயே நிறைவேறிவிட்டது என்றெல்லாம் தங்களுடைய கிரேக்க, எபிரேய ஞானத்தினால் ஜனங்களை திசைதிருப்புவோர் உண்டு அல்லவா!

சில வேளைகளில், மற்றவர்கள் போட்ட அஸ்திபாரத்தில் தாங்கள் ஊழியம் செய்ய விருப்பமற்று, பவுலைப் போல புதிய புதிய இடங்களுக்குச் செல்லவே ஆர்வம்கொண்ட கூட்டத்தார், பிற ஊழியங்கள் நடக்கும் இடத்திற்குச் செல்வதனை பெரிய இதயத்தோடு தவிர்த்துவிடுவது உண்டு. தேவன் தங்களுக்குக் கொடுத்திருக்கும் கிருபைகளைப் பகிர்ந்துகொடுக்கிறவர்களாக அவர்கள் செயல்பட்டால், பவுலைப்போல, 'நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேன்" என்ற உறுதியோடும் கரிசனையோடும் தங்களால் இயன்றதனை நிறைவேற்ற வாய்ப்புகள் எங்கும் உண்டு. 

தேவன் தந்திருக்கும் கிருபைகள் வித்தியாசமானதாக இருப்பதனை உணர்ந்து ஒருவருக்கொருவர் அதனை பறிமாறிக்கொள்ள வாஞ்சித்தால், இந்த தடையும் நீங்கும் (ரோமர் 15:21-29). கிறிஸ்துவுக்குள் அனைவரும் தேறினவர்களாக இருப்பதும் தேவனுடைய சித்தமல்லவா! (கொலோ. 1: 28,29). உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; தடை செய்யாதே (ஏசா. 54:2) என்பது எல்லாருக்கும் உரியதே. 

எல்லாவற்றிற்கும் மேலாக, அநேக நேரங்களில் ஆவியானவரும் சில இடங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்வதனைத் தடுத்து, புதிய பிரதேசங்களுக்குச் செல்ல தம்முடையவர்களை ஏவுகிறார் அல்லவா! அப். 16:6-12 ல் காண்பது போன்று, ஆவியானவரின் மெல்லிய சத்தத்தினையும் உணர்ந்து, அவருடைய வழிநடத்துதலையும் புரிந்துகொண்டு முன்னேறினால், அநேக தடைகள் அவரால் உண்டாக்கப்பட்டதினைக் காணலாம். ஐரோப்பாவிலும் பிரசங்கம் செய்யவேண்டும் என்பதனை பவுலுக்கும் அவனோடே இருந்தவர்களுக்கும் வலியுறுத்தவே தேவன் அவ்வாறு செயல்படுகிறார். இதனைப் புரிந்துகொள்ள ஆவியின் நிறைவும், கீழ்ப்படிதலும் நம்மனைவருக்கும் தேவை. 

ஆவியிலே நடத்தப்படுகிறவர்களைத்தான் வேதம் 'புத்திரர்கள்" என்று அழைக்கிறது (ரோமர் 8:14). தேர்ச்சிபெற்றவர்கள் என்பதும் இதனால் புலப்படும். லோத்தைப் போல பசுமையாய் இருக்கிறவைகளை மாத்திரம் காணும் கண்கள் உடையவர்களுக்கு இந்த அனுபவம் ஆகாததாகவே காணப்படும். 'கரம்பற்றி நடத்தும் கர்த்தர் நீர் அல்லோ!" என்று முழங்குபவர்களில் அநேகர், கீழ்ப்படிய கஷ்டப்படுகின்றனர். ஏனெனில், அதில் விலைக்கிரயம் செலுத்தப்படவேண்டியுள்ளது. அது அவர்களுக்கு ஒருவேளை வேதனையைக் கொடுக்கலாம். ஆனால், ஆவியானவரின் சிந்தையைத் தனதாக்கிக்கொண்டால், தேசம் தேவனை அறிவதிலும், அறியப்படாதோர் சத்தியத்தை அறிவதிலும் ஒருபோதும் தேக்கநிலை உண்டாகாது என நான் நம்புகிறேன். 

இறுதியாக, 'தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப்போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்" (மீகா 2:13). என்பது நமக்கு வாக்குத்தத்தம் அல்லவா! எனவே, எதனைக் கண்டும் துவண்டுவிடாமல், 'பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்" (சக. 4:7) என்று முழங்க 'பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தினாலும் அல்ல" ஆவியினாலே ஆகும் (சக. 4:6) என்று முழங்குவோம். தேசம் தேவனை அறியும்வரை ஓயாமல் ஓட தேவ பலன் நம்மை நிரப்புவதாக. 


தடைகள் என்று தயங்கிவிடாதே

தாங்கும் கர்த்தரின் தயவு இரக்கம்

தாராளமாய் உன் பக்கம்


சத்துருவின் சூழ்ச்சிகளில் மாட்டிக்கொள்ளாதே

சந்ததம் உன்னை நடத்திடும் சத்திய தேவன்

சாத்தானை ஜெயித்தவர் உன் பக்கம்


உபத்திரவம் உன்னை உருவழிக்க விட்டுவிடாதே

உன்னால்தான் இதனைச் செய்யமுடியும்

உனக்குள்ள கிரீடம் உனக்கே சொந்தம். 


 

                                                                                   அன்பரின் அறுவடைப் பணியில்

                                                                            அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

Feb 2026

 



    சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கி, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்தி, அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறவரும் (சங். 113:7,8),  ஞானிகளை வெட்கப்படுத்தும்படி உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொள்பவரும், பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொள்பவரும், உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தெரிந்துகொள்பவருமாகிய (1 கொரி. 1:27,28) ஆண்டவரின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். 

தேவன் ஒரு மனிதனைத் தெரிந்துகொள்ளும்போது, அவனை ஆசீர்வதிப்பது மாத்திரமல்ல, அந்த மனிதனைச் சுற்றியிருக்கிற பிற ஜனங்களுக்கும் அவனை ஆசீர்வாதமாக மாற்ற விரும்புகிறார்; தேசம், சபை மற்றும் குடும்பம் அவன் மூலம் ஆசீர்வதிக்கப்படுகிறது. அத்தோடு நிறுத்திவிடாத தேவன், அவனது வாழ்வில் அற்புதமாக இடைபட்டு, அவனை பூமியின் உயர்ந்த ஸ்தானங்களிலும் நிறுத்துகின்றார். அதற்கு, யாக்கோபின் வாழ்வில், தேவன் ஏல்பெத்தேலிலிருந்து எகிப்து வரை (ஆதி. 32: 31-50:14) செயல்பட்ட விதம் நல்லதோர் அத்தாட்சி. யாக்கோபின் வாழ்க்கையுடனான தேவனது இந்த இடைபடுதல், அவனை பூரணமான மாறுதலுக்குள் வழிநடத்தியது.

பின்பு, யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக்கொண்டுவந்து, அவனை பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினபோது,  யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான் (ஆதி. 47:7) என்று வாசிக்கின்றோம். இங்கே, யார் யாரை ஆசீர்வதிக்கிறார் என்று பாருங்கள். 'மேய்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள்" (ஆதி. 46:34) என்று யோசேப்பு தன் தகப்பனையும், தன் சகோதரர்களையும் பார்த்துச் சொல்லுகிறான். ஆகையினாலேயே, 'கோசேன் நாட்டில் இருக்கும்படியாக பார்வோனிடத்தில் கேளுங்கள்" என்று தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் பார்த்துச் சொல்லுகிறான். ஆனால், இப்போதோ அருவருக்கப்பட்ட ஜாதியிலிருந்து வந்த யாக்கோபு பார்வோன் ராஜாவை ஆசீர்வதிக்கிறான். பிரியமானவர்களே! நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், தேவனை உங்கள் வாழ்க்கையில் உள்ளடக்கும்போது, பரிசுத்தத்தையும் மற்றும் அர்ப்பணத்தையும் ஒன்றாக்கும்போது, தேவன் இல்லாமல் என்னால் கூடாது என்று பூரணமாக ஒப்புக்கொடுக்கும்போது நிச்சயம் நீங்கள் எல்லாரைக் காட்டிலும் உயர்த்தப்படுவீர்கள்; இது நிச்சயம். 

ஒரு பெரிய ராஜாவுக்கு யாக்கோபு ஆசீர்வாதம் கூறுகிறான், ஆதி. 47:10-ல் மீண்டும் பார்வோனை யாக்கோபு ஆசீர்வதிக்கிறான். இப்போது பார்வோனுக்குத் தெரிந்துவிட்டது. இந்த மனிதன் என்னை ஆசீர்வதிப்பதற்காகப் படைக்கப்பட்டவன், அனுப்பப்பட்டவன் என்று; எனவே, ஆசீர்வதிக்கும் பாத்திரமாகவே யாக்கோபை பார்வோன் பார்க்கும் நிலைக்கு அவன் மாறிவிட்டான். பிரியமானவர்களே! நாம் எத்தனை தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்தாலும், நம்மை ஆண்டவருக்குப் பூரணமாக ஒப்புக்கொடுக்கும்போது, பயனற்றவனாயிருந்தாலும் புழுதியிலிருந்து தூக்கி எடுத்து பிரபுக்கள் மத்தியில் உட்கார வைக்கிறவர் நம் ஆண்டவர்.  

பீஹாரின் 'ஜப்லா" என்ற கிராமத்தில் ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டான். அவனுடைய வேலை, வயலில் கூலிக்கு அறுவடை செய்வது. மிகவும் தாழ்வான குடும்பத்தில் பிறந்த அவன், இயேசுவைப் பற்றி நமது ஊழியர் ஒருவர் மூலமாக அறிந்து, அவரை தனது வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டபோது, ஞாயிற்றுக்கிழமையில் எந்த வேலையும் செய்வதில்லை என்றும் ஆண்டவரை மட்டுமே ஆராதிப்பேன் என்றும் தன் மனதில் தீர்மானம் எடுத்தான். பீஹாரில், கோதுமை அறுவடை நாட்களில், தங்கள் ஊரை விட்டு விட்டு, மற்ற இடங்களிலிருக்கும் பண்ணையார்களுக்கு மற்றும் பண்ணைகளுக்கு வயலில் அறுவடைக்குச் சென்று சம்பாதிப்பது இங்குள்ள ஜனங்களின் வழக்கம். அவ்வாறு ஒருமுறை ஓரிடத்தில் அவன் அறுவடைக்குச் சென்று தங்கியிருந்த நாட்களில், ஒரு ஞாயிற்று கிழமை அன்று, 'இன்று ஆண்டவரை ஆராதிக்கவேண்டும்; எனவே, இன்று வயலிலே வேலை செய்ய முடியாது" என்று பண்ணையாரிடம் சொன்னபோது, பண்ணையார் பதிலாக, 'எல்லோரும் இரவு பகலாகக் கஷ்டப்பட்டு அறுக்கிறார்கள். நீ ஆண்டவரிடத்தில் ஜெபிக்கப்போகிறாயா" எனக் கூறி அவனை அனுப்பிவிட்டார். 

அவனோ, ஞாயிற்றுக் கிழமை அன்று, தூரத்திலிருந்த ஒரு மரத்தின் கீழ் முழங்கால்படியிட்டு ஜெபிக்கத் தொடங்கினான். இந்நிலையில், பதினைந்து வருடங்களாக நீங்காத வியாதியினால், பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சுகம் பெறாத பண்ணையாரின் மனைவி இதைக் கவனித்து, என்ன செய்கிறாய்? என அவனிடத்தில் கேட்டபோது, 'நான் ஜீவனுள்ள ஆண்டவரை வணங்குகிறேன்" என்றான் அவன். அப்போது பண்ணையாரின் மனைவி, 'உங்கள் ஆண்டவர் உயிரோடு இருப்பாரானால், எனது பதினைந்து வருட நீங்காத வியாதி சுகமாகுமா? எனக்காக எனது கணவர் பல லட்சம் பணம் செலவழித்தும் சுகமாகாத நிலையில், இனி வெளிநாடு சென்று சிகிச்சை செய்வதா அல்லது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளலாமா என யோசிக்கிறார். எனவே, அந்த ஜீவனுள்ள தேவனிடத்தில் எனக்காக வேண்டுதல் செய்" என்று அவனிடத்தில் கேட்டுக்கொண்டாள். இதைக் கேட்ட அந்த மனிதன், உடனே அந்த பண்ணையாரின் மனைவியின் தலை மீது கைவைத்து ஜெபித்தபோது, ஒரு வாரத்தில் தன் சரீரத்தில் வித்தியாசத்தை உணர்ந்த அவள், தன் கணவனாகிய பண்ணையாரிடம் அறுவடைக்கு வந்த அந்த மனிதனிடத்தில் சக்தி இருப்பதாகக் கூறினாள். ஆனால், பண்ணையாரோ அவன் பன்றி மேய்க்கிறவன் என அலட்சியமாகப் பதிலளித்தார். அவளோ, அவன் பன்றி மேய்க்கிறவன் அல்ல எனக்கு மறுவாழ்வு கொடுக்க வந்தவன் எனக் கூறியதுடன், அவன் போகும் போது ஐந்து மூட்டை கோதுமையையும் இலவசமாகக் கொடுத்து அனுப்பினாள். அவன் மூலமாக இயேசு கிறிஸ்துவையும் அறிந்துகொண்டாள். எகிப்தியருக்கு யாக்கோபு அருவருப்பானவன்தான்! ஆனால், பார்வோனோ, 'நீ என்னை ஆசீர்வதிக்கவேண்டும்" என்று தலை குனிந்து நிற்கிறான். பிரியமானவர்களே! நாம் வித்தியாசமானவர்கள், நாம் பிரித்தெடுக்கப்பட்டவர்கள், நாம் வைராக்கியமானவர்கள், நாம் ஆண்டவருக்குச் சொந்தமானவர்கள்; இதனை இந்த உலகத்திற்குக் காண்பித்துவிடுவோம். கர்த்தர் நல்லவர் என்பதை உலக மக்களுக்குச் சொல்ல வைராக்கியம் காட்டுவோம் நாம். 
இதுவரை, மற்றவர்களின் ஆசீர்வாதத்தில் ஆசைகொண்டு வாழ்ந்தவன் யாக்கோபு; இப்போதோ,  ராஜாக்களுக்கு ஆசீர்வாதத்தைக் கொடுக்கும் மனிதனாக மாறிவிட்டான். இந்த சந்தர்ப்பத்திற்குப் பின் யாரிடத்திலும் யாக்கோபு ஆசீர்வாதத்தைக் கேட்கவே இல்லை; எல்லாருக்கும் ஆசீர்வாதத்தைக் கொடுக்கும் பாத்திரமாக அவன் மாறிவிட்டான்; எத்தனை பெரிய மாற்றம்! இதுவரை பெற்றுக்கொள்ளுகிற இடத்தில் இருந்தவன், தேவனுக்குத் தன்னை அர்ப்பணித்து, பரிசுத்தத்திற்கு முதலிடம் கொடுத்தபோது, அது அவனது வாழ்க்கையையே முற்றிலும் மாற்றிவிட்டது. ஆதி. 48:15-ல் யாக்கோபு யோசேப்பை ஆசீர்வதிக்கிறான், பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறான். எனக்கு ஆசீர்வாதம் வேண்டும் என்று கூறினவன், இப்பொழுது மற்றவர்களை ஆசீர்வதிக்கிறான்; ஆசீர்வாதத்தின் ஊற்றாகவும் மாறுகிறான். பிரியமானவர்களே! நமது அர்ப்பணம் சரியாக இருந்தால், ஒருக்காலும் நாம் நமக்கென்று வாழமாட்டோம். சபையே நீயும் நானும் ஆசீர்வாதத்திற்கென்றே அழைக்கப்பட்டிருக்கிறோம். தீமைக்குத் தீமையையும், உதாசீனத்திற்கு உதாசினத்தையும் சரிகட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அறிந்து, ஆசீர்வதியுங்கள் (1 பேதுரு 3:9). நாம் ஆசீர்வதிக்கப்படுவதோடு, மற்றவர்களையும் ஆசீர்வதிக்கும்படியாகவே தேவன் நம்மைத் தெரிந்துகொண்டார்.  

'நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்" (மத். 5:44) என்பதுதானே இயேசு கிறிஸ்துவின் போதனை. பிரியமானவர்களே! நாம் அழைக்கப்பட்ட அழைப்பு மற்றவர்களை ஆசீர்வாதமாக்குவதற்குத்தான். இந்திய நாட்டிற்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவந்தது கிறிஸ்தவ மிஷினரிமார்களே என்பதை ஒருவரும் மறுக்க முடியாது. நமது இந்தியாவில் முதன் முதல் ரயிலுக்காகப் பாதை அமைத்தபோது, 'வெள்ளைக்காரன் பெரிய பெரிய கம்பியைப் போட்டு நம்மை வெளிநாட்டுக்குக் கொண்டு போகப்போகிறான்" என்றுதான் அப்போது இந்தியாவிலிருந்த மக்கள் கூறினார்கள். இந்தியாவிற்கு முதன் முதலில் அச்சு இயந்திரத்தைக் கொண்டுவந்தது யார்? கிறிஸ்தவ மிஷனரியான வில்லியம் கேரியே! அதற்கான இருநூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டது; அப்போதையக் குடியரசுத் தலைவர் எஸ்.டி. சர்மா அவர்கள் கொடுத்த உரையை அறிந்தால் இது விளங்கும். 

உடன்கட்டை (சதி) ஏறுதல் அதிகமாக இருந்த நாட்களில், உடன்கட்டை ஏறுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது மிஷனரிமாரே! மருத்துவத்தைக் கொண்டுவந்தது யார்? கிறிஸ்தவ மிஷனரிமாரே! ஏனென்றால், அவர்கள் போகிற இடத்திலெல்லாம் அவர்கள் ஆசீர்வாதத்தைக் கொண்டுபோய்தான் ஆகவேண்டும்! சாலை, பாதை, கூட இல்லாத ஆப்பிரிக்க கண்டத்துக்கு முதன்முதலாக சென்றவர் மிஷனரி டேவிட் லிவிங்ஸ்டன். ஒரு டாக்டராக அங்கே சென்று, தன் முழு முயற்சியோடும் பெலத்தோடும் காடுகளிலும் மற்றும் மலைகளிலும் நடந்து திரிந்தார். விடியற்காலத்திலே சூரியன் உதிக்கும் முன் தேவனைத் தரிசிக்கும் அந்த பக்தன், ஒவ்வொரு இடத்திற்கும் சென்று ஆப்பிரிக்கக் கண்டத்தின் அனைத்துக் காரியங்களையும் உலகிற்கு எடுத்துக் காட்டினது மாத்திரமல்ல, இன்றைக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தை முன்னுக்குக் கொண்டுவந்ததற்கும் மூல காரணமானவர். ஆடை இல்லாத, அரை மனிதனாக நின்றவனுக்கு ஆடை கொடுத்து நாகரீகம் சொல்லிக்கொடுத்தது யார்? கிறிஸ்தவ மிஷனரிகளே! 

சபையே இன்றைக்கு நீ பூமிக்கு உப்பாக இருக்கிறாய்! உப்பு பூமியிலிருந்து முற்றிலும் எடுக்கப்பட்டுவிட்டால் பூமி ஒன்றுக்கும் உதவாது! வெளியே கொட்டப்படுவதுதான் அதன் நிலையாயிருக்கும். ஆகையினால்தான், ஆண்டவர் வரும்போது அவருடையவர்கள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்! பூமியிலே பெரும் உபத்திரவம் உண்டாகும்! என்று வேதத்தில் வாசிக்கின்றோம். பிரியமானவர்களே! இந்நாட்டிற்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவர ஒரே ஒரு வழிதான் உண்டு; அது கிறிஸ்துவை அறிந்த கிறிஸ்தவப் பிள்ளைகளே! மற்றவர்களை ஆசீர்வதிப்பதற்காகவே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். நம் நிமித்தமாகத்தான் நமது நாட்டை அவர் ஆசீர்வதிக்கவேண்டும். ஆகவேதான், 'நீர் காட்டுகிற எந்த இடத்திற்கும் செல்ல தயார்" என்று, வசதி வாய்ப்புகள் இல்லாத இடத்திற்கும் புறப்பட்டுச் சென்று, ஆசீர்வாதத்தின் காரணர்களாக மாறினார்கள் மிஷனரிகள்; இதை ஒரு மனிதனும் மறுக்க இயலாது. நம் ஒவ்வொருவரையும் இத்தகைய ஆசீர்வாதத்தின் ஊற்றாக வரும் நாட்களில் தேவன் மாற்றுவாராக! 

ஒருமுறை, பதவுலா என்கிற இடத்திற்கு எனது மனைவியும் மற்றும் இரண்டு சகோதரிகளும் ஊழியத்திற்காகச் சென்றிருந்தபோது, அங்கே மூன்று வீடுகளில் இருந்த குறி சொல்லுகிற சகோதரிகள் வசனத்தை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டார்கள். ஒரு மாதத்தில் அப்பகுதியில் பெரும் காலரா வியாதி வந்தது; அநேகர் மரித்தார்கள்; ஒரே நாளில் ஐந்து பேர் மரித்தார்கள். ஒருபக்கம் சிலர் சபையிலே உபவாசித்து ஜெபித்துக்கொண்டிருந்தார்கள்; மறுபக்கமோ, ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டு, ஏன் இந்த வியாதி வந்தது என்று பேசிக்கொண்டிருந்தார்கள். இயேசுவை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினரே இதற்குக் காரணம்; எனவே, அவர்களை ஊரை விட்டே விரட்டவேண்டும் என்று கூறினார் அங்கிருந்தவர்களில் ஒருவர். மற்றொருவரோ, அவர்கள் இந்த கிராமத்திற்காக ஜெபிக்கிறார்கள், அவர்கள் வீட்டில் இந்த வியாதி வரவில்லையே என்றார். இந்நிலையில், உபவாசித்து ஜெபித்த மக்களை அவர்கள் பார்க்கவந்தபோது, அவர்கள், 'ஆண்டவரே எங்கள் கிராமத்தை அழிவிலிருந்து காப்பாற்றும்" என்று ஆண்டவரிடத்தில் அவர்கள் வேண்டிக்கொண்டிருப்பதைக் கேட்டார்கள்; அன்றே அந்த வியாதி நின்றது. அருகிலுள்ள மூன்று கிராமத்தினரும் இயேசுவை ஏற்றுக்கொண்டனர். சிறிய கூட்டம்தான், ஆனால், அவர்கள் திறப்பில் நின்று ஜெபித்தனர். வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த வீரமுள்ள திருநாமமது நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே. 

பிரியமானவர்களே! நாம் தேசத்திற்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவராவிட்டால் வேறு யாராலும் முடியாது! யாக்கோபைப் போல நமது வாழ்விலும் ஒரு பூரண மாறுதல் உருவாகி, நான் ஆசீர்வதிக்கப்படவேண்டும் என்று கூறுவதைவிட என்னையே ஆசீர்வாதத்தின் பாத்திரமாக மாற்றும் என்று சொல்லுவோமென்றால், நம்முடைய வாழ்க்கையிலும் நம்மைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையிலும் பெரும் மாற்றம் உண்டாகும், தேசம் ஆசீர்வதிக்கப்படும், ஜனங்கள் சந்திக்கப்படுவார்கள். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதிக்கிறான், தேசத்தை ஆசீர்வதிக்கிறான், யோசேப்பையும் தனது 12 கோத்திரங்களையும் ஆசீர்வதிக்கிறான். கிறிஸ்துவுக்குள் நாம் ஆசீர்வதிக்கப்படவேண்டும் என்பதற்காகவே கிறிஸ்துவின் மூலமாக தேவன் சபையை ஆசீர்வதிக்கிறார்.  

யோசேப்பு கிறிஸ்துவுக்கு முன் அடையாளமானவன், அவனுடைய வாழ்க்கையை நாம் கவனித்துப் பார்த்தால், கிறிஸ்துவுக்கு முன் அடையாளமான காரியங்கள் நிகழ்ந்ததை நாம் அறிந்துகொள்ள முடியும். அதுமாத்திரமல்ல, பன்னிரெண்டு கோத்திரங்களையும் குறித்து தெளிவாகவும் திட்டமாகவும் கடைசி நாட்களில் வருவதை அறிவிக்கும் தீர்க்கதரிசியாகவும் அவன் மாறிவிட்டான்; அல்லேலுயா! தேவனை தனக்காக மாத்திரமல்ல. தனது குடும்பத்திற்காகவும் மாற்றிவிட்டான்; தேவனுக்கென்று எதையும் செய்வதற்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டான். ஆண்டவருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தவுடன் தேசங்களைக் குறித்து, ஜனங்களைக் குறித்து, தன் பிள்ளைகளைக் குறித்து, கடைசி நாட்களைக் குறித்தும் அவன் வெளிப்பாட்டினைப் பெறுகிறான்; அல்லேலூயா! அவனுடைய கண்கள் திறக்கப்படுகின்றன, வெகு தூரத்திலிருக்கிறவர்களையும் தெளிவாகப் பார்க்கும் கண்களை உடையவனாக மாறுகிறான் அவன். அருமையானவர்களே, 'ஆண்டவரே! தீர்க்கதரிசன வரத்தை எனக்குத் தாரும்" என்று அநேகர் ஜெபிப்பது உண்டு. ஆனால், 'முழுவதும் என் ஆண்டவருக்கே" 'பரிசுத்தத்திற்கே முதலிடம்" 'எனக்கென்று வாழ்ந்ததெல்லாம் போதும்; இனி வாழ்வது என் ஆண்டவருக்கே" என்று நாம் சொல்லுவோமென்றால், நமது கண்கள் திறக்கப்பட்டு, நம்முடைய வார்த்தைகளும் தீர்க்கதரிசனங்களாக மாறிவிடும். தேசங்களுக்காகக் கண்ணீர் விடுவோம், ஜாதிகளுக்காகக் கண்ணீர் விடுவோம், ஆத்துமாக்களை எப்படியாகிலும் தரவேண்டும் என்று தேவசமூகத்தில் போராடி ஜெபிப்போம்; நம்முடைய வார்த்தைகளும் தீர்க்கதரிசனங்களாக மாறும். 'கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்" (ஆமோஸ் 3:7) என்று எழுதப்பட்டிருக்கின்றதே; அப்படியிருக்க, இந்த தேசத்தைக் குறித்த உம்முடைய தீர்மானங்கள் என்ன? என்று கேட்போம். 'தீர்க்கதரிசன வரம் வேண்டும்" என்று கேட்பதைக் காட்டிலும், நாம் தேசத்திற்காகக் கண்ணீர் விட்டு அழுவோமென்றால், நாம் சிறுபிள்ளை என்று நம்மைச் சொன்னாலும் அவர் நம்மைத் தூக்கியெடுத்து 'இதோ தேசத்திற்கு உன்னை தீர்க்கதரிசியாக மாற்றுகிறேன்" என்று சொல்லுவார். இந்த இரகசியம் இன்று அநேகருக்குப் புரிவதில்லை.  யாக்கோபு ஒரு சாதாரண மேய்ப்பன்தான், அவனது சொப்பனங்களெல்லாம் சாதாரணமானவைகள்தான். ஆனால், ஒரு நாளிலே, தனது பன்னிரெண்டு குமாரர்களையும் அழைத்து, 'கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன்" என்று ஒவ்வொருவருக்கும் சொன்னபோது, யூதாவைக் குறித்து, 'சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்" (ஆதி. 49:10) என்று தீர்க்கதரிசனமாகக் கூறுகின்றான். 

இறுதியாக, யாக்கோபு மரித்தபோது, எகிப்திலே எழுபது நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. உலகத்தில் எந்த மனிதனுக்கும் இத்தனை நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படவில்லை; எங்கு அருவருத்தார்களோ! அங்கு 70 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. டேவிட் லிவிங்ஸ்டன் இங்கிலாந்தின் பெரிய பல்கலைக்கழகத்தில் பயின்றவர். ஒரு மிஷனரி அறைகூவல் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டபோது, அங்கு சொல்லப்பட்ட ஆப்பிரிக்க மக்களின் நிலை அவரது இதயத்தை உருக்கிற்று. ஆப்பிரிக்காவிற்கு மிஷனரியாகச் சென்றார். பெரிய பெரிய கொசுக்கள் மத்தியில், வசதிகள் இல்லாத இடத்தில் முழங்காலில் நின்று ஜெபித்து, காடுகளிலும் மலையிலும் ஊழியம் செய்தார்.  ஒரு நாளில் ஜெபிக்கும்போதே இவ்வுலகினை விட்டுப் பிரிந்துசென்றார். அப்போது, அங்குள்ள மக்கள், எங்கள் நாட்டுக்காக உயிர் நீத்த இவரை எங்கள் நாட்டில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், அவரது இதயத்தை மட்டும் ஆப்பிரிக்காவில் அடக்கம் செய்துவிட்டு, உடலை இங்கிலாந்திற்குக் கொண்டு சென்று ராஜமரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது. கல்லை தலையணையாக வைத்திருந்தது யாக்கோபின் ஆரம்பம்; ஆனால், எல்லா ராஜாக்களைக் காட்டிலும் எழுபது நாட்கள் அரச மரியாதையோடு அவனது அடக்கம் நடந்தது! பிரியமானவர்களே! நம்முடைய முடிவைக் குறித்து என்ன? சம்பூரணமாய் இருக்கவேண்டுமென்றால், 'இனி நம்முடைய வாழ்க்கையின் ஆசீர்வாதத்தைக் கூட்டினது போதும்; என்னையே ஆசீர்வாதத்தின் வாய்க்காலாக மாற்றும்" என்று ஆண்டவரிடம் கேட்போம். இந்த உலகத்திற்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவருகிறவர்களாக, மற்றும் அறியாத, சாபங்கள் மிகுந்த, தீட்டு மிகுந்த, அந்தகாரம் மிகுந்த இடங்களுக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும் ஊற்றாக நாம் மாற்றுவதற்கு நம்மை அவர் கரத்தில் ஒப்படைப்போம். ஆசீர்வாதத்தை அற்புதமாக மாற்ற அனைத்தும் கிறிஸ்துவுக்கே என்று நம்மை அர்ப்பணிப்போம்.

அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற 
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா 
நான் சிறுகவும் நீர் பெருகவும் 
தீபத்தின் திரியாய் எடுத்தாற் கொள்ளும் 
கல்வாரியின் சிநேகம் கரைத்திடும் என்றும் 
கல்மணம் மாற்றி கரைந்தோடச் செய்யும் 
 
                                                                                அன்பரின் அறுவடைப் பணியில்
                                                        அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்