அவைகளைக் குறித்து தியானித்தால், சில உண்மைகளைக் கற்றுக்கொள்வதோடு, அவைகளைத் தாண்டி முன்னேறவும் நமக்கு வழிகள் புலப்படலாம். எனவே, இந்த மடலை அந்த நோக்கத்தில் எழுதுகிறேன்.
D. L. மூடி என்ற தேவ மனிதர் சொன்னார்: 'எனக்கு நானே முதல் எதிரி" என்று. நமக்குள் ஏற்படும் போராட்டங்களும், சோதனைகளும், தர்க்கங்களும், நினைவுகளுமே அநேக நேரங்களில் நம்முடைய ஓட்டத்தைத் தடைசெய்யப் போதுமான பெலமுள்ளதாய் இருக்கின்றன. சாத்தானால் விதைக்கப்படும் சந்தேகங்கள் (மத். 13:25), பயங்கள், எதிர்காலத்தினைக் குறித்த நிச்சயமற்ற எண்ணங்கள், நமக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களைக் குறித்த தடுமாற்றங்கள், தனிமை போன்றவற்றை மேற்கொள்ளக் கூடாமல் திகைக்கும் சமயங்கள், பற்றாக் குறைகள், தேவையற்ற எதிர்ப்புகள், சிநேகிதரானாலும் நம்பக்கூடாமற்போகும் சந்தர்ப்பங்கள், உடனிருப்போரில் காணப்படும் தொய்வுகள் நம்முடைய வேகத்தினைக் குறைக்கப் போதுமானவைகள்.
அவைகள் நம்மை உட்காரச் செய்து, எதிர்மறையான காரியங்களைச் சிந்திக்கவைத்து, விசுவாசத்தினைத் தளரச் செய்பவை; கூடவே, துன்மார்க்கத்தார் செழிப்பதனையும், தேவ வேஷம் தரித்தவர்கள் வேகமாகச் செயல்படுவதனையும் கண்டு, நமக்கு ஏன் இப்பபடி நடக்கிறது? என்ற கேள்விகளையே சுற்றி சுற்றி வரச்செய்து, முன்னோக்கிப் பார்க்கவிடாமல் செய்துவிடுமே (சங். 73).
வெளியின் போராட்டங்கள், உள்ளே பயத்தினை உருவாக்கிவிடுமே (2 கொரி. 7:5).
நம்மை நாமே ஜெயிக்காவிட்டால், ஜெபத்தினையும் சந்தேகிக்கத் தோன்றும் (1 யோவான் 3:21,22). இது மன அழுத்தத்தினை அதிகமாக்கி, கால்களைக் கட்டிவைத்துவிடும்.
இவைகளை மேற்கொள்ள ஒரே வழி, வேத வார்த்தைகளால் நம்மை நிரப்புவதும், அதின் ஊடாக தேவனையும், நம்மையும் கண்டுகொள்வதுமே. நம்மைக் குறித்து தேவன் என்ன நினைக்கிறார் என்று அவருடைய வார்த்தையின் மூலமாகக் கற்றுத்தருவதற்கு ஆவியானவரும் உதவுகிறார்.
ஆவியினால் உரமேறிய தேவ வார்த்தைகளை இந்த சமயத்தில் உபயோகிப்பதே, இதன் மேல் நாம் எடுக்கும் ஆயுதம். இளைத்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தைகள் (ஏசா. 50:4) செய்யும் விந்தைதான் என்னே!
16 வருடமாய் செயலற்றுப்போயிருந்த செருபாபேலும், யோசுவாவும் தீர்க்கர்களின் வார்த்தையால் செயல்படத் தொடங்கினார்கள் அல்லவா! (எஸ்றா 5:12).
குடும்ப உறவுகளில் ஏற்படும் விரிசல்கள் நம்மை செயலற்றுப்போகப்பண்ணும் என்பதனை அறிந்த பவுலும், உங்கள் ஜெபங்களுக்குத் தடை உண்டாகாத வண்ணம், கூடிவாழுங்கள் என்கிறார் (1 கொரி. 7:5). இதைத்தானே பேதுருவும் தன்னுடைய நிருபத்தில் குறிப்பிடுகிறார் (1 பேதுரு 3:7).
அநேக வேளைகளில், குடும்ப வாழ்வில் சத்துரு நுழைந்து செயல்படவேண்டியவர்களைக் கட்டிவைத்துவிடுகிறான். அவைகள் இருதயத்தில் நுகமாக மாறிவிடுகிறது. அதனையும் ஒழிப்பதற்கு தேவனுடைய ஆலோசனை, 'ஆவியினால் நுகத்தடி உடைக்கப்படும்" என்பதே (ஏசாயா 10:27). அபிஷேகத்தின் அளவை அதிகப்படுத்துவதே இதற்குப் பதில் (யோவான் 3:34).
தன்னுடைய ஊழியத்தினால் (குறுகிய காலத்தில் உண்டாக்கப்பட்டது அப். 17 அதி.) உருவாக்கப்பட்ட தெசலோனிக்கேய விசுவாசிகளுக்கு உபத்திரவங்கள் வந்தபோது, அவர்களின் விசுவாசத்தினை உறுதிப்படுத்தவும், ஊன்றக் கட்டவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் பவுல் அங்கே போக விரும்பியபோது, சாத்தானே பவுலின் பிரயாணத்தினைத் தடைசெய்கிறான் (1 தெச. 2:18). தன்னால் போகமுடியாதபோது, அவன் தீமோத்தேயுவை அவர்களைக் கண்டு நலம் விசாரிக்கவும், புத்திசொல்லவும் அனுப்பிவிடுகிறதனைக் காண்கிறோம்.
நாம் செய்யக்கூடாமல் தடுக்கப்படும்போது, நம்மோடு இணைக்கப்பட்டவர்களை அதே காரியத்தினைச் செய்துமுடிக்க உபயோகிப்பது ஞானம். அதற்குரிய அளவிற்கு அவர்களைப் பயிற்சித்து நடப்பிப்பது இங்கே காணக்கூடியது. நான்தான் எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்ற மனப்பான்மையிலிருந்து இது அநேகரை விடுதலையாக்கும். கூடவே, உடன் ஊழியர்களை ஆயத்தப்படுத்தவும் பிரயோஜனமானது.
உபத்திரவம் (persecution) என்ற ஆயுதத்தினை உபயோகிக்க சத்துரு இந்த நாட்களில் அதிகமாய் முயற்சிக்கிறான் (1 தெச. 12:14). சுவிசேஷத்தின் எதிரிகள் இன்றைக்கு நன்றாக தங்கள் தீயச் செயல்களைச் செய்வதற்குப் பழக்குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நல்ல இணைப்பை ஏற்படுத்தி, அதனை முறைப்படுத்தி செயல்படுத்திவருகிறார்கள். விசுவாசத்திற்குள் புதிதாக வந்தவர்களைப் பயமுறுத்தி அல்லது அவமானப்படுத்தி அல்லது அப்புறப்படுத்தி அல்லது அடித்து, புதிய விசுவாசிகளை தேச துரோகிகளாகச் சித்தரித்து, சமுதாயத்திலே ஒரு வெறுப்புணர்ச்சியினை உருவாக்கி, ஊழியங்களைத் தடைசெய்கிறார்கள். பவுலைப் போல நாமும் புதிய உத்திகளைக் கையாள, நாமும் புதிய செயல்முறைகளைக் கையாளவேண்டிய அவசியம் உண்டு; அது இன்றியமையாததாக மாறியுள்ளது. அநேகர் பயிற்சிபெறவேண்டும். குறிப்பாக இளையவர்கள் இயக்குவிக்கப்படவேண்டும். 'இளங்கன்று பயமறியாது" என்பது பழமொழியல்லவா!
அநேக நேரங்களில் இயேசுவோடு நடந்த சீஷர்களே, சிறுபிள்ளைகள் இயேசுவிடத்தில் நெருங்கிவருவதனைத் தடுத்ததுபோல, தங்களை அறியாமலேயே தடுத்துவிடுகின்றனர் (மாற்கு 10:14). அவர்கள் இயேசுவோடு இணைந்து ஊழியம் செய்தது உண்மை; ஆனால், இயேசுவின் மனநிலையை அறியவில்லை; அவருடைய உள்ளான விருப்பத்தினை அறியவில்லை. ஒருவேளை, தங்களின் தலைவர் தொந்தரவு செய்யப்படக்கூடாது என்பதில் அதிகக் கவனம் செலுத்தியதினால் இருக்கலாம். ஆயினும், இயேசுவின் வாஞ்சையை அறிந்தார்கள் இல்லையே!
மார்க்க நெறிகளை அதிகம் வலியுறுத்துகிறவர்களைக் குறித்து இயேசு சொல்லும்போது, 'மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை" (மத்தேயு 23:13) என்று சொல்லுகின்றார். வசனம் பேசுகிறவர்களே, 'வார்த்தையாம்" இயேசுவிடம் நெருங்கவிடாதபடிச் செய்ய வாய்ப்புகளுண்டு. அதனால்தான், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள் என்றார் (மத்தேயு 23:3). நம்முடைய போதனையும், நடக்கையும் அநேகருக்கு இடறுதலாக இல்லாதவாறு பார்த்து, சீராய் நடப்பது நமக்கு ஏற்றது.
'சுவிசேஷ எதிரிகள்" எக்காலத்திலும் ஆண்டவரை அறியாதோர் இரட்சிக்கப்படுவதற்குத் ததைடயாகவே செயல்பட்டார்கள் என்பதனை நாம் அறிவோம் (1 தெச. 2:16). அவர்களின் எண்ணிக்கை இன்று மதவெறியாக உருவெடுத்து, இந்தியா முழுவதும் குறிப்பாக வடஇந்தியாவில் பெருகி இருப்பது நாம் அறிந்ததே. சிறுபிள்ளைகள் முதல் முதியவர் வரை அவர்களால் கெடுக்கப்பட்டு, மனதளவிலே மக்கள் சுவிசேஷத்தினைக் கேட்கக்கூடாதபடி 'கலாட்டா" செய்யவும் ஏன் தாக்கவும் முற்பட்டு, ஒரு பீதியை உருவாக்கி சட்டத்தினைத் தங்கள் கைகளிலேயே எடுத்து, அதனை தங்களுக்கு ஏற்றாற்போல் வளைத்து, போலீஸின் துணையோடு அநேக நேரங்களில் அரங்கேற்றி, சமூக வலைதளங்களை நிரப்பி, தாங்கள் ஏதோ சாதித்துவிட்டதுபோல் தங்களைக் காண்பித்து, சமாதான உறவுகளைக் கெடுத்து, பிளவுபடுத்தி மனித சமுதாயத்திற்கு சாவுமணி அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு சமூகத்திற்கு உதவ அறியாதவர்கள், அழிக்கத்தான் அறிந்தவர்கள். நன்மைகளைத் தூஷிக்கிறார்கள். கிறிஸ்துவின் நாமத்தில் செய்யப்படும் எந்த நற்கிரியையையும் ஆலோசனைகளையும், உதவிகளையும், உற்சாகத்தினையையும் கொச்சைப்படுத்தி, தேவ கோபாக்கினையை தங்கள் மேல் திணித்துக்கொள்ளுகிறார்கள். இடறல் உண்டாக்குகிறவர்களைக் குறித்து இயேசு பேசின வார்த்தைகள் கடினமானவைகள் அல்லவா! இவைகளை முறியடிக்க அவர்களை இயக்குவிக்கும் ஆவிகளைக் கட்டி ஜெபிப்பதனையே நாம் அதிகமாக மேற்கொள்ளவேண்டியுள்ளது (எபே. 2:2). சத்துருவின் கையில் தங்களை ஒப்புக்கொடுத்தோர் எண்ணிக்கை பெருகுகிறதே!
சில வேளைகளில், அன்றைய நியாயசாஸ்திரிகளைப் போலவே (லூக். 11:52) அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டவர்கள், தாங்களும் பரலோகத்தில் பிரவேசிப்பதில்லை, உட்பிரவேசிப்பவர்களையும் தடைபண்ணுகிறார்கள். உபதேசத்தின் உச்சகட்டம் என்று கூறி, அநேகர் அழிந்துபோகிறவர்களைக் குறித்து கரிசனையற்றவர்களாகவே மாறிவிட்டக் கொடுமையும் உண்டு. நரகம் நிரந்தரமானது அல்ல, நியாயத்தீர்ப்பு இயேசுவிலேயே நிறைவேறிவிட்டது என்றெல்லாம் தங்களுடைய கிரேக்க, எபிரேய ஞானத்தினால் ஜனங்களை திசைதிருப்புவோர் உண்டு அல்லவா!
சில வேளைகளில், மற்றவர்கள் போட்ட அஸ்திபாரத்தில் தாங்கள் ஊழியம் செய்ய விருப்பமற்று, பவுலைப் போல புதிய புதிய இடங்களுக்குச் செல்லவே ஆர்வம்கொண்ட கூட்டத்தார், பிற ஊழியங்கள் நடக்கும் இடத்திற்குச் செல்வதனை பெரிய இதயத்தோடு தவிர்த்துவிடுவது உண்டு. தேவன் தங்களுக்குக் கொடுத்திருக்கும் கிருபைகளைப் பகிர்ந்துகொடுக்கிறவர்களாக அவர்கள் செயல்பட்டால், பவுலைப்போல, 'நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேன்" என்ற உறுதியோடும் கரிசனையோடும் தங்களால் இயன்றதனை நிறைவேற்ற வாய்ப்புகள் எங்கும் உண்டு.
தேவன் தந்திருக்கும் கிருபைகள் வித்தியாசமானதாக இருப்பதனை உணர்ந்து ஒருவருக்கொருவர் அதனை பறிமாறிக்கொள்ள வாஞ்சித்தால், இந்த தடையும் நீங்கும் (ரோமர் 15:21-29). கிறிஸ்துவுக்குள் அனைவரும் தேறினவர்களாக இருப்பதும் தேவனுடைய சித்தமல்லவா! (கொலோ. 1: 28,29). உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; தடை செய்யாதே (ஏசா. 54:2) என்பது எல்லாருக்கும் உரியதே.
எல்லாவற்றிற்கும் மேலாக, அநேக நேரங்களில் ஆவியானவரும் சில இடங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்வதனைத் தடுத்து, புதிய பிரதேசங்களுக்குச் செல்ல தம்முடையவர்களை ஏவுகிறார் அல்லவா! அப். 16:6-12 ல் காண்பது போன்று, ஆவியானவரின் மெல்லிய சத்தத்தினையும் உணர்ந்து, அவருடைய வழிநடத்துதலையும் புரிந்துகொண்டு முன்னேறினால், அநேக தடைகள் அவரால் உண்டாக்கப்பட்டதினைக் காணலாம். ஐரோப்பாவிலும் பிரசங்கம் செய்யவேண்டும் என்பதனை பவுலுக்கும் அவனோடே இருந்தவர்களுக்கும் வலியுறுத்தவே தேவன் அவ்வாறு செயல்படுகிறார். இதனைப் புரிந்துகொள்ள ஆவியின் நிறைவும், கீழ்ப்படிதலும் நம்மனைவருக்கும் தேவை.
ஆவியிலே நடத்தப்படுகிறவர்களைத்தான் வேதம் 'புத்திரர்கள்" என்று அழைக்கிறது (ரோமர் 8:14). தேர்ச்சிபெற்றவர்கள் என்பதும் இதனால் புலப்படும். லோத்தைப் போல பசுமையாய் இருக்கிறவைகளை மாத்திரம் காணும் கண்கள் உடையவர்களுக்கு இந்த அனுபவம் ஆகாததாகவே காணப்படும். 'கரம்பற்றி நடத்தும் கர்த்தர் நீர் அல்லோ!" என்று முழங்குபவர்களில் அநேகர், கீழ்ப்படிய கஷ்டப்படுகின்றனர். ஏனெனில், அதில் விலைக்கிரயம் செலுத்தப்படவேண்டியுள்ளது. அது அவர்களுக்கு ஒருவேளை வேதனையைக் கொடுக்கலாம். ஆனால், ஆவியானவரின் சிந்தையைத் தனதாக்கிக்கொண்டால், தேசம் தேவனை அறிவதிலும், அறியப்படாதோர் சத்தியத்தை அறிவதிலும் ஒருபோதும் தேக்கநிலை உண்டாகாது என நான் நம்புகிறேன்.
இறுதியாக, 'தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப்போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்" (மீகா 2:13). என்பது நமக்கு வாக்குத்தத்தம் அல்லவா! எனவே, எதனைக் கண்டும் துவண்டுவிடாமல், 'பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்" (சக. 4:7) என்று முழங்க 'பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தினாலும் அல்ல" ஆவியினாலே ஆகும் (சக. 4:6) என்று முழங்குவோம். தேசம் தேவனை அறியும்வரை ஓயாமல் ஓட தேவ பலன் நம்மை நிரப்புவதாக.
தடைகள் என்று தயங்கிவிடாதே
தாங்கும் கர்த்தரின் தயவு இரக்கம்
தாராளமாய் உன் பக்கம்
சத்துருவின் சூழ்ச்சிகளில் மாட்டிக்கொள்ளாதே
சந்ததம் உன்னை நடத்திடும் சத்திய தேவன்
சாத்தானை ஜெயித்தவர் உன் பக்கம்
உபத்திரவம் உன்னை உருவழிக்க விட்டுவிடாதே
உன்னால்தான் இதனைச் செய்யமுடியும்
உனக்குள்ள கிரீடம் உனக்கே சொந்தம்.
அன்பரின் அறுவடைப் பணியில்
அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்