கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,
என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன் (யோவான் 14:2,3) என்று சொன்னவரும், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன் (யோவான் 17:24) என்று பிதாவினிடத்தில் வேண்டிக்கொண்டவருமாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துதல்கள்.
உயிர்த்தெழுதலே கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆணி வேர் என்றும், உயிர்த்தெழுதலின் செய்தியே உயர்த்திக் கூறப்படவேண்டும் என்றும், உயிர்த்தெழுதலின் செய்தியை நம்மை இயக்குவிக்கும் சக்தி என்றும் உங்களோடு பகிர்ந்துகொண்டதோடு, பாவத்தில் வாழும் மக்கள் உயிரோடிருந்தாலும் மரித்தவர்களே என்றும், பரிசுத்தவான்களுக்கோ மரமும் நித்திரைதான் என்றும், உயிர்த்தெழுதலின் செய்தி சத்துருவினால் சகிக்கக்கூடாதது என்றும் கடந்த இதழில் உங்களோடு பகிர்ந்துகொண்டேன். இந்த இதழில், உயிர்த்தெழுதலின் மேலும் சில உண்மைகளை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்; வேத வாக்கியங்களைப் புரிந்துகொள்ளவும், மேன்மையானவைகளையே வாழ்க்கையில் வாஞ்சிக்கவும் தேவன் நமக்கு உதவிச் செய்வாராக!
பழைய ஏற்பாட்டுக் காலத்தில், கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்த மனிதர்களுக்கு, அதாவது, வேதவசனத்தை அறியாதவர்களுக்கு, உயிர்த்தெழுதலைக் குறித்த அறிவு இல்லாதிருந்தது. ஆனால், கிறிஸ்துவைப் பின்பற்றுகின்ற, வேதவார்த்தைகள் தேவனால் அருளப்பட்டது என்று விசுவாசிக்கின்ற, அவைகள் தேவ ஆவியினால் எழுதப்பட்டது என்ற நம்புகின்ற நாம், சில காரியங்களை பழைய ஏற்பாட்டில் தெளிவாகக் காணமுடியும். ஏனென்றால், பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த யூதர்களுக்கு, தேவன் தன்னுடைய வார்த்தையை தன்னுடைய விரலினால் எழுதிக் கொடுத்தார். எனவேதான், அவர்களைப் பார்த்து, இவ்விதமாய்ச் சீரைப் பெற்ற ஜனம் எது? என்றும், பாக்கியம் பெற்ற ஜனம் எது? என்றும், தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்ற ஜாதி எது? என்று ஆண்டவரே கேள்வி எழுப்புகின்றார். இதற்குள், புறஜாதியாயிருந்தவர்கள் உட்படவில்லை. ஆனால், ஆண்டவர் எழுதிக் கொடுத்த வார்த்தைகளுக்குத் தன்னை விட்டுக் கொடுத்த தேவ மனிதர்களுக்கு, வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் காரியங்களை தேவன் சொல்லாமலில்லை. விசேஷமாக ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான ஏனோக்கு, 300 வருடங்கள் குடும்பஸ்தனாக, பிள்ளைகளையும் மற்றும் பேரப் பிள்ளைகளையும் கண்டவனாக வாழ்ந்து, தேவ வெளிப்பாடையும் பெற்றான்.
ஆனால், அந்நாட்களில் வாழ்ந்த மனிதர்களைக் குறித்தோ, 'இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள்; புத்தியில்லாத மிருகங்களைப்போலச் சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள். இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச்செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள். இவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக்கூட விருந்துண்டு, தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்ளுகிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ் செத்து வேரற்றுப்போன மரங்களும், தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது" (யூதா 1:10-13) என்று எழுதுகிறார் யூதா.
ஆபேல் காயினால் கொல்லப்பட்டான். காயீன் பொல்லாங்கனுக்குத் தன் வாழ்க்கையில் இடங்கொடுத்தபடியினால், 'பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீன்" (1யோவான் 3:12) என்றே அவனைக் குறித்து வேதம் சொல்லுகிறது. காயின் ஆண்டவரின் சமுகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டவன். ஆனால், தண்டனை பெற்ற காயீனோ, 'எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது. இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே" (ஆதி. 4:13,14) என்று ஆண்டவரிடத்திலேயே அவர் கொடுத்த தண்டனையைக் குறித்துக் கேள்வி எழுப்புகின்றான். இன்றைய நாட்களிலும், தேவன் இல்லை என்று சொல்லுகிறவர்களும் மற்றும் தேவனை தேவனாக ஆறியாதவர்களின் இருதயத்திலும் இதைப்போன்ற பலவிதமான கேள்விகள் எழும்புகின்றன. ஆம், அவர்கள் காயீனின் வழிகளில் நடக்கிற மனிதர்கள்.
ஆதாம் கீழ்ப்படியாமற்போனபோது, 'பூமி சபிக்கப்பட்டிருக்கும்" (ஆதி. 3:17) என்று சொன்ன ஆண்டவர், காயீன் பாவம் செய்தபோதோ, 'பூமி இனி பலன் கொடுக்காது" (ஆதி. 4:12) என்று சொல்லுகிறார். பூமி சபிக்கப்பட்டதற்குக் காரணம் ஆதாம்; ஆனால், பூமி பலன் கொடாமலிருப்பதற்குக் காரணம் பகை. சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆண்டவர் அருவருக்கிற காரியம் (நீதி. 6 அதி.) என்று சொல்லுகிறது வேதம். எனது சட்டையில் தூசி பட்டுவிட்டதென்றால், அதைத் துடைத்துவிடலாம்; ஆனால், என்னுடைய சட்டையில் அசிங்கம் பட்டுவிட்டதென்றால், சொந்த பிள்ளையில் மலம் பட்டுவிட்டதென்றால், இருந்துவிட்டுப்போகட்டும் என்று சொல்லிவிட முடியுமா? சீ..... என்று சொல்லுகிறோமே; அதுவே அருவருப்பு. சகோதரர்களுக்குள் விரோதத்தை உண்டாக்குவதும் இப்படிப்பட்டதே! சில பாஸ்டர்கள் மற்ற பாஸ்டர்களுக்கு ‘Pசயளைந வாந டுழசன” என்றுகூட சொல்லமாட்டார்கள். ஏன்? என்று கேட்டால், என்னிடத்திலிருந்து ஜனங்களைப் பிரித்துக்கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுவார்கள். இன்றைய நாட்களில், காயீனுடைய வழிகளில் வாழும் மனிதர்கள் அநேகர் இந்தியாவிலும் மற்றும் உலகமெங்கிலும் பரவியிருக்கிறார்கள்.
அதுமாத்திரமல்ல, 'பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி" (யூதா 1:11) என்றும் இவர்களைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. பிலேயாமினிடத்தில் இரண்டு ஆவிகள் கிரியை செய்தன. 'கண் திறக்கப்பட்டவன்" என்றும் தன்னைச் சொல்லிக்கொள்ளுவான், நிமித்தமும் பார்ப்பான். இப்படிப்பட்ட இரட்டை ஆவியைக் கொண்ட பிலேயாமைப் போன்ற மனிதர்களும் இந்நாட்களில் உண்டு.
ஒரு சகோதரர் தெருவில் நின்றவாறு மற்றொருவருடன் கெட்ட வார்த்தையில் சண்டையிட்டுக்கொண்டிருந்தார். அவரது வெள்ளை நிற காலர் இல்லாத ஜிப்பா உடையைப் பார்த்த நான், அவர் ஒரு பெந்தேகோஸ்தேகாரர் என்று புரிந்துகொண்டவனாக அருகில் சென்று, 'சகோதரனே" என்று சொன்னபோது, 'எனக்கு மனுஷர் பாஷையும் பேசத் தெரியும் தூதர் பாஷையும் பேசத் தெரியும்" என்று என்னிடத்தில் சொன்னார். அவர் பேசியது தூதர் பாஷை அல்ல, தூஷணப் பாஷை. துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது (யாக். 3:10) என்று எழுதுகிறார் யாக்கோபு. பிலேயாமுக்கு காசுதான் முக்கியம். மேலும், 'கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்" (யூதா 1:11) என்றும் எழுதுகிறார் யூதா. இப்படிப்பட்ட பிலேயாமைப் போன்ற கோராகைப் போன்ற மனிதர்கள் இன்றைய நாட்களிலும் உண்டு.
இப்படிப்பட்ட தேவனற்ற தேவபக்தியற்ற சந்தியாரின் மத்தியிலும், இப்படிப்பட்ட ஆவியினால் நிறைந்த மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருந்தபோதிலும், உலகத்தின் மனிதர்கள் தேவனுக்குத் தூரமாக வாழ்ந்துகொண்டிருந்த காலத்திலும், ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான ஏனோக்கு தேவனோடு நடந்தான். பிரியமானவர்களே! யார் தேவனோடு நடக்கவில்லையென்றாலும், நாம் தேவனோடு நடக்கமுடியும். ஒரு குடும்பம் என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள், 'ஊரார் எங்களை ஒதுக்கிவைத்துவிட்டார்கள்; எங்களுக்கு நன்கு பெண் பிள்ளைகள், நாங்கள் மட்டும் தான் தேவனுக்காக நின்றோம்; அந்த நேரத்தில், சாத்ராக் Nமுஷாக் ஆபேத்நேகோ என்பவர்களைக் குறித்து நீங்கள் பேசிய செய்தியைக் கேட்டோம்; என்ன வந்தாலும் பரவாயில்லை என்று தைரியமாக நின்றோம்" என்று சொன்னார்கள். அநேக நேரங்களில், பக்கத்து வீட்டார் சரியில்லை, எதிர்த்த வீட்டார் சரியில்லை என்று மட்டுமே நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம், உடன் பணிசெய்கிறவர்கள் சரியில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம், சபைக்கு வருகிறவர்களே சரியில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்; பரவாயில்லை; ஆனால், நாம் தேவனோடுகூட நடக்க அழைக்கப்பட்டவர்கள்.
எனவே,
கர்த்தரோடிசைந்தே நடந்தேன்
கிருபை சமாதானம் ஈந்தார்
விசுவாசத்தால் நானும் பிழைத்ததால்
விரும்பி என்னை அணைத்தார்
எனக்கேன் இனி பயமே
எந்தன் இயேசு என் துணையே
என் துன்ப நேரத்திலே
இயேசுவே என்னோடிருப்பார்
என்று பாடுகிறார் சகோதரி சாராள் நௌரோஜி
ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: 'இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும். தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார்" என்று முன்னறிவித்தான் (யூதா 1:14,15).
ஒருமுறை தூத்துக்குடியில் கூட்டங்களில் பேசிக்கொண்டிருந்தேன், இரண்டாம் நாள் கூட்டத்தில் பேசும்படியாக நான் சென்றிருந்தபோது, அங்கே சிலர் நோட்டீஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அதில், இயேசு கிறிஸ்துவுக்கு உடலெல்லாம் சீலைப்பேன் இருந்தது; இயேசு கிறிஸ்து குளிக்கிறதே இல்லை; இயேசு கிறிஸ்து பயங்கர நாற்றமுடையவர் என்று நோட்டீஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். என்னுடைய கைகளில் அந்த நோட்டீஸ் கிடைத்தது. அவர்களுக்கு நான் பதிலாக, 'இயேசு கிறிஸ்துவுக்கு உடலில் பேன் இருந்தது என்று எந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறது என்று எனக்கு காட்டினால், நான் உனது வீட்டிற்கு வந்து மண்டியிடுவதற்கு ஆயத்தம்" என்று அவர்களுக்குச் சொன்னதோடு, 'சீலைப்பேனை எடுத்துத் தின்கிறதைக் கும்பிடுகிற நீ அதைச் சொல்லக்கூடாது" என்றும் அவர்களுக்குச் சொன்னேன்; அடுத்த நாள் அவர்கள் வரவில்லை.
ஆதி சபைகளில் விசுவாசிகள் 'மாரநாதா" என்றே ஒருவரையொருவர் வாழ்த்தினார்கள். நாம் இப்போது, 'அல்லேலூயா அல்லது ''Praise The Lord" என்று சொல்லுகிறோம். பீஹாரில், சிலர், அவர்களுக்கும் ஆண்டவருக்கும் சம்மந்தமே இருக்காது; என்றபோதிலும், ''Praise The Lord" என்று சொல்லுவார்கள். முதலில், 'அல்லேலூயா" என்றே சொல்லிக்கொடுத்தோம்; ஆனால், வயதான பாட்டிமாரெல்லாம் 'ஆலுகொய்யா" என்று சொல்லத்தொடங்கிவிட்டார்கள்; ஹிந்தியில் 'ஆலு" என்றால் உருளைக் கிழங்கு. எனவே, பின்னர், ''Praise The Lord" என்று சொல்லிக்கொடுத்தோம். ஆதி சபை விசுவாசிகளும், உபத்திரவத்தில், நெருக்கத்தில், அவமானத்தில் இருந்தபோதும், ஒருவரையொருவர் சந்திக்கும்போதும், 'மாரநாதா" 'இயேசு வருகிறார்" என்றே சொன்னார்கள். இச்செய்தி அவர்களைத் உற்சாகப்படுத்துவதாகவும், தட்டியெழுப்புவதாயிருந்தது. ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கே இதனைச் சொன்னார். பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள், 'தேவன் நியாயம் தீர்க்க வருகிறார்" என்பதை அறிந்திருந்தார்கள்.
எனவே, 'ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்" (தானி 12:12) என்பதைக் கேட்டதும், தானியேலின் மனதில், 'நீர் எப்போது வருவீர்?" என்ற கேள்வி உண்டாயிற்று. அப்பொழுது, விசேஷித்த ஆவியைப் பெற்ற தானியேலைப் பார்த்து, 'நீயோவென்றால் முடிவுவருமட்டும் போயிரு; நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய்" என்கிறார் ஆண்டவர் (தானி 12:13). பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களுக்கு, 'நான் மறுபடியும் எழுந்திருப்பேன்; சுதந்தர வீதத்திற்காக எழுந்திருப்பேன்" என்ற நம்பிக்கை இருந்தது; தேவ ஆவியைப் பெற்ற தானியேலுக்கு இது வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
எனவே, யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப்போகிறேன்; ஆனாலும், தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தைவிட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப்பண்ணுவார் என்று சொன்னதுமன்றி; தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான் (ஆதி. 50:24,25) என்று வாசிக்கின்றோம். இதன் காரணம் என்ன? இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது. கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள் (மத். 27:50-53) என்று வாசிக்கின்றோமே; இதனை, ஆவியில் யோசேப்பு முன்னறிந்திருந்ததினாலேயே தன்னுடைய எலும்புகளை எடுத்துக்கொண்டுபோங்கள் என்று சொல்லுகின்றான். தான் மரித்து உலர்ந்த எலும்பாக மாறியிருந்தாலும், அவருடைய சத்தத்தைக் கேட்கவேண்டும் என்ற வாஞ்சை அவனுக்குள் காணப்பட்டது. யோசேப்பு ஆவியில் நிறைந்தவனல்லவா, வரும் பஞ்சங்களையும் அழிவையும் காணக்கூடியவனல்லவா, அவனுக்கு, 'இயேசு வருவார், அவரை கல்வாரிச் சிலுவையில் அடிப்பார்கள், அவர் சத்தமிடுவார், அப்பொழுது கல்லறைகள் திறக்கும்; அப்பொழுது நான் பரிசுத்த நகரத்தில் பிரவேசிக்கவேண்டும்" என்ற தன்னைக் குறித்த வெளிப்பாடு இருந்தது.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில், தேவ ஆவியினால் நடத்தப்பட்ட பரிசுத்தவான்கள் அனைவருக்கும் இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. 'என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்" (சங். 23:6) என்று முடிவில்லாத வாழ்க்கையைக் குறித்தும், நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன் (சங் 27:13) என்று தன்னுடைய விசுவாசத்தையும் தாவீது சொல்லுகின்றானே! பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் ஆவியில் நடத்தப்பட்டார்கள், ஆவியில் நிறைந்துமிருந்தார்கள். எனவே, நேபுகாத்நேச்சார் தானியேலைப் பார்த்து, 'தேவ ஆவியைப் பெற்ற மனுஷன்" என்றும், பார்வோன் யோசேப்பைப் பார்த்து, 'தேவ ஆவியைப் பெற்ற மனுஷன்" என்றும் சொல்லுகின்றார்கள்.
நம்மிடத்தில் இன்று இருப்பது எந்த ஆவி? ஒரு சகோதரியினிடத்தில், உங்கள் கணவர் சபையில் முழங்காலிலேயே துள்ளுகிறாரே! அவருக்கு என்ன ஆவி இருக்கிறது? என்று கண்டுபிடித்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு அந்த சகோதரி, அவர், வீட்டில் பருப்பு வேகிறதற்கு பத்து நிமிடம் பிந்திவிட்டாலே துள்ளுவார். நேற்று அவர் வாங்கிக்கொடுத்தது உடனே வெந்துவிட்டது; ஆனால், இன்று அவர் வாங்கிக்கொடுத்த பருப்பு குக்கரில் மூன்று விசில் வந்தபோதிலும் வேகவில்லை; அதற்காக இப்படித் துள்ளுகிறார். என்னுடைய மாமியாரிடத்தில் கேட்டபோது, 'இவன் இன்று அல்ல; வயிற்றில் இருக்கும்போதும் இப்படி குதித்துக்கொண்டுதான் இருந்தான்" என்று சொன்னார். ஆம், இன்றைய நாட்களிலும் அநேகருக்குள் இருக்கின்ற ஜென்ம சுபாவம் போகவில்லை. தாயின் வயிற்றில் குதித்துக்கொண்டிருந்தவர்கள் பலர், இன்றும் குதித்துக்கொண்டிருக்கிறார்கள்; ஆனால், அவர்கள் ஆவியில் குதிக்கிறார்கள் என்று நாம் ஏமாந்துவிடுகின்றோம். பிரியமானவர்களே! தேவ ஆவியினால் நிறைந்தவர்களாக எப்போதும் காணப்பட தேவன் நமக்கு துணைசெய்வாராக.
ஆனாலும், இயேசுவின் நாட்களில் காணப்பட்ட பரிசேயர்கள் உயிர்த்தெழுதலை விசுவாசித்தார்கள்; ஆனால், சதுசேயர்களுக்கு உயிர்த்தெழுதலில் விசுவாசமில்லாதிருந்தது. எனவே, அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, போதகரே, ஒருவனுடைய சகோதரன் சந்தானமில்லாமல் தன் மனைவியை விட்டு இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டுமென்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே. இப்படியிருக்க, ஏழுபேர் சகோதரர் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனான். இரண்டாம் சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் சந்தானமில்லாமல் இறந்துபோனான். மூன்றாம் சகோதரனும் அப்படியேயானான். ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள். ஆகையால், உயிர்த்தெழுதலில், அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? ஏழுபேரும் அவளை மனைவியாகக் கொண்டிருந்தார்களே என்று கேட்கிறார்கள். சில மதங்களில், 'நீ பரிசுத்த யுத்தம் செய்துவிட்டால், நேராக பரதீசுக்குச் செல்லுவாய்; அங்கே சென்றதும் உனக்கு 70 மனைவிகள் கிடைப்பார்கள்; கொஞ்ச நாட்களுக்குப் பின்பு 440 மனைவிகள் கிடைப்பார்கள்" என்று அவர்களது புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கிறதை நான் அறிவேன்.
இன்றைய நாட்களிலும், அநேக கள்ளப் பிரசங்கிகள், பொருளாசையைத் தூண்டிவிடுகின்ற பிரசங்கிகள், 'ஆபிரகாம் மிகுந்த சீமானாயிருந்தான்" என்று மாத்திரம் பிரசங்கிப்பது உண்டு. இவர்கள் அடிக்கடி தொலைக்காட்சிகளில் தோன்றுவார்கள். ஆபிரகாமைப் போல தேவன் உன்னை ஆசீர்வதிக்க விரும்புகிறார், அதற்காகத்தான் இயேசு சிலுவையில் சாபமானார் என்றும், ஆபிரகாமின் ஆசீர்வாதம் உனக்குத்தான் என்றும் பிரசங்கிப்பார்கள். இதனைக் கேட்கும் மக்களுக்கும், 'எங்களுக்கும் அப்படியே ஆகக்கடவது" என்று சொல்லத்தான் நோன்றும். ஆனால், ஆபிரகாமின் வீட்டிற்கு கர்த்தர் (இயேசு) இரண்டு தூதர்களோடு வந்தபோது, 'அவன் பகலிலே உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்திருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரை மட்டும் குனிந்து" (ஆதி 18:1,2) என்றே வாசிக்கின்றோம். ஆனால், ஆபிரகாம் கூடார வாசலில் உட்கார்ந்திருந்தான் என்பதை, பொருளாசையைத் தூண்டுகிற பிரசங்கிகள் சொல்லுவதில்லை. மேலும், 'ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம். கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள்" (ஆதி. 18:3,4) என்றே கூறுகின்றான் ஆபிரகாம். ஆபிரகாம் வீட்டின் வரவேற்பறை மரத்தடியே! இதனை மறைத்துவிட்டு, 'ஆபிரகாமைப் போல உங்களையும் தேவன் சீமானாக்குவார்" என்பதை மாத்திரமே பிரசங்கிக்கிறவர்கள் உண்டு.
ஆனால், 'இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலல்லவா தப்பான எண்ணங் கொள்ளுகிறீர்கள்? (மாற்கு 12:19-24) என்று பதில் கூறுகின்றார். இன்றைய நாட்களிலும், சதுசேயர்களைப் போல, வேத வாக்கியங்களைத் தவறாக எண்ணும் மனிதர்கள் உலகத்தில் உண்டு. நம்மிடத்தில் நல்ல வீடு, வாகனம் என அனைத்தும் இருக்கலாம்; ஆனால், அவைகளோடு நாம் ஓட்டிக்கொள்ளக்கூடாது; கூடாரவாசியாக வாழவேண்டும்; அதுவே தேவனுடைய சித்தம். என்னுடைய வீட்டின் முன் பகுதியில், 'நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது" (பிலி. 3:20) என்ற வசனத்தையே எழுதியிருக்கிறேன். நான் வசிக்கும் வீட்டிற்கு வாடகையும் கொடுக்கிறேன், மின்சாரக் கட்டனமும் செலுத்துகின்றேன்.
எனவேதான்,
கூடார வாசிகளாகும் நமக்கிங்கு
வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ?
கைவேலையில்லாத வீடொன்றை மேலேதான்
செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ
- ஆனந்தமே பரமானந்தமே
என்று பாடுகின்றோம்.
பிரியமானவர்களே! பழைய ஏற்பாட்டுக் காலத்தில் உயிர்த்தெழுதலைக் குறித்த வாஞ்சை இருந்தது; ஆனால், புதிய ஏற்பாட்டின் காலத்தில் வாழும் நமக்கோ, உயிர்த்தெழுதலைக் குறித்த நிச்சயம் உண்டு; அல்லேலூயா!
பொருளாசையைத் தூண்டி, போதனையைப் புரட்டி
ஐசுவரியமும் ஆஸ்தியுமே ஆசீர்வாதம் எனக் கூறி
சீமானாய் வாழுவதையே தங்கள் செய்தியாக மாற்றி
கூடாரவாசிகள் எனக் கூறுவதில்லை போதகர் பலர்
ஆனால், நாமோ,
'மாரநாதா" என்றே வாழ்த்துவோம் சகோதரரை
வருகையைச் சொல்லும் வார்த்தையது இத்தரையில்
விளங்காத மனிதர்க்கு இன்னும் அது விமர்சனந்தான்
விண்ணகம் செல்வோருக்கோ வாழ்த்துதலின் செய்தியது
அன்பரின் அறுவடைப் பணியில்
அன்பு சகோதரர் D. அகஸ்டின் ஜெபக்குமார்