April 2026

 

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே, 

சத்திய வசனத்தினால் நம்மை ஜநிப்பித்தவரும் (யாக். 1:18), சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பவரும் (ஏசா. 66:2), வசனத்தை அனுப்பி நம்மை குணமாக்குகிறவர் மாத்திரமல்ல, அழிவுக்கும் நம்மைத் தப்புவிக்கிறவரும் (சங். 107:20), வசனத்தினால் நமது வாழ்க்கையைச் சுத்தம்பண்ணுகிறவரும் (சங். 119:9), சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவரும் (எபி. 1:3), தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தை நமது கரங்களில் கொடுத்தவருமாகிய (எபே. 6:17) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  

இன்றைக்கு தேவ மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக நடக்கவேண்டிய அவசியமுண்டு. அநேக காரியங்கள் ஆவிக்குரியவை போலக் காட்சி அளிக்கலாம்; ஆனால், அவைகள் ஆராய்ந்து அறியவேண்டியவை என்பதனை மறக்க இயலாது. 

ஏவாளை வஞ்சித்த வஞ்சகன் சாத்தான். அவளைப் பார்த்து, 'நீங்கள் தேவன் விலக்கின கனியைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள்.... தேவர்களைப்போல் இருப்பீர்கள்" என்றும் கூறினபோது (ஆதி 3:5), அது அவர்களுடைய ஆவிக்குரிய நிலைதனை உயர்த்தும் என்றுதானே அவள் நினைத்திருக்கவேண்டும். நாம் உண்டாக்கப்பட்டதே 'அவர் சாயலில்தானே" என்பதனை அவள் ஒரு கணம் யோசித்திருந்தால், அவனுடைய வஞ்சக யோசனைக்குக் கீழ்ப்படிந்திருக்கமாட்டாளே. தேவனை நித்தமும் நேருக்கு நேர் சந்திக்கும் பாக்கியத்தினை விட இன்னமும் கண் திறக்கப்பட்டு எனக்கு நிகழப்போவது என்ன? என்று கேட்டிருந்தால் விழுகை ஏற்பட்டிருக்காதே.

பிரபல ஊழியர் ஒருவர் தன்னுடைய கூட்டத்தில், இனி இயேசு சரீரப் பிரகாரமாகத் தோன்றுவார் எனக் கூறினபோது, ஜனங்கள் 'அல்லேலூயா" என்று ஆர்ப்பரித்தனர். கேட்பதற்கு அது ஆவிக்குரிய பெரிய அனுபவம் போலக் காணப்பட்டது. ஆனால், கேட்ட ஜனங்கள் 'நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்" (2கொரி 5:16) என்பதனை மறந்துவிட்டனரே. 

அதே ஊழியர் என்னுடைய ஊழியத்தினை எதிர்க்கிறவர்கள் சபிக்கப்படுவார்கள். அவர்களை கர்த்தரின் நாமத்தில் சபிக்கிறேன் என்று முழங்கினார். (அநேக கேள்விக்குரிய காரியங்களை அவருடைய ஊழியத்தில் காணலாம் அதனை வசன ஆதாரத்தில் எதிர்ப்பவர்களைத்தான் அவர் அப்படிச் சபித்தார்). அதனைக் கேட்ட ஜனங்கள் பயந்தார்கள், நடுங்கினார்கள், ஆமேன் என்று அலறினார்கள்; ஆனால் ஊழியரும், அவரைக் கேட்ட  ஜனங்களும், 

'நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து ஆசீர்வதியுங்கள்" என்ற அன்புக் கட்டளைதனை (1பேது 3:9), பிசாசையும் சபிக்க அதிகாரமில்லை என்பதனை (யூதா 9) மறந்துபோய்விட்டார்கள் அல்லவா!

இதற்குக் காரணம் என்ன? தேவ வார்த்தைதனை புறக்கணித்த ஏவாளைப் போல தேவ வார்த்தையைக் காட்டிலும் தோற்றத்தின்படி ஆவிக்குரியதாய் தோன்றியவற்றினை ஏற்றுக்கொண்டதே.

இயேசுவை கவனியுங்கள்; பிசாசு அவரிடம் 'நீர் தேவனுடைய குமாரனேயானால் தேவாலயத்து உப்பரிக்கையின் மேலிருந்து தாழக் குதியும், ஏனெனில் உம்மைக் காக்கும்படிக்கு தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார் என்றும் உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்றும் எழுதியிருக்கிறது" என்று சொன்னான். வேத வாக்கியங்களை இணைத்து ஆவிக்குரிய தோரணையில் பேசுகிறான். ஆனால், அவனுடைய உள்ளான எண்ணங்களை அறிந்த நம் ஆண்டவர், தான் தேவ குமாரன் என்று சில நாட்களுக்கு முன் பிதா கொடுத்த அறிக்கைதனை  நன்றாக அறிந்தவராய், தன்னைச் சோதித்துப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என்பதனைப் புரிந்தவராய் அவனை மடங்கடித்தார். நான் இப்படிச் (குதித்து) செய்துதான் தேவகுமாரன் என்பதனை நரூபிக்கவேண்டிய அவசியமில்லை. தேவன் என்னைக் குறித்து சொன்ன சாட்சி வசனமே போதும் என்பதனை தெளிவாக்குகிறார்.

இன்றைக்கு அநேக ஊழியங்களில் காணப்படும் வேதனை இதுதான். வேத வசனங்களில் தங்களுக்குச் சாதகமானவைகளை மாத்திரம் தெரிந்தெடுத்து அதனை ஆதாரமாகக் கொண்டு உபதேசங்களையும், ஊழிய முறைகளையும் தெரிந்துகொள்ளும்போது சத்துரு இதனை தனக்குச் சாதகமாக மாற்றி இவர்களை உபயோகிக்க ஆரம்பித்துவிடுகிறான். வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும். இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால் அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை" அவர்கள் அண்ணாந்து பார்ப்பார்கள் பூமியையும் நோக்கிப் பார்ப்பார்கள்; ஆனாலும், இதோ இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும். இடுக்கத்தால் இருளடைந்து அந்தகாரத்திலே தள்ளுண்டு அலைவார்கள் (ஏசா 8:20,22) என்பதுதானே தேவனின் நீதி. 

கிழட்டு தீர்க்கதரிசியின் பொய் வாக்கினை துடிப்பான வைராக்கியமான இளம் தீர்க்கதரிசி அடையாளம் காண முடியாமற்போனதற்கும் காரணம் இதுவல்லவோ! போன வழியாய் திரும்பாமலும் இருவென்று கர்த்தர் தம்முடைய வார்த்தையால் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்று அவன் கூறியதில் தெளிவு இருந்தது. அது கட்டளை எனவும் அறிந்திருந்தான் (1இராஜா 13:9), ஆனால் எனக்கு ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று பொய் சொன்ன கிழட்டு தீர்க்கதரிசியின் வார்த்தையில் காணப்பட்ட கபடமான 'தூதன் சொன்னான்" என்ற வார்த்தையை சோதித்திருந்தானேயானால் தன் ஜீவனை இழக்க நேரிட்டிருக்காதே! (1இராஜா 13:18,24). இன்றைக்கும் அநேக ஊழியர்கள் தேவ வார்த்தையை மீறி தூதன் சொன்னான் என்றே கூறி ஜனத்தினை திருப்பிவிட்டிருப்பது நாம் அறிந்ததே. பார்வைக்கு ஆவிக்குரிய கோலம் போட்ட அனைத்து திட்டங்களும், ஆலோசனைகளும், ஊழியங்களும் இந்த வகையைச் சார்ந்ததே; விழிப்பாயிருப்போம். 

சில வேளைகளில் கர்த்தரின் வார்த்தைக்குக் காத்திராமல், நம்முடைய அனுபவங்களை மாத்திரம் சார்ந்து, நம்முடைய கருத்தினை வெளிப்படுத்தி ஆலோசனை சொல்லவும் சோதனை உண்டாகலாம். நாத்தான் தீர்க்கன் செய்தது அதுதானே, 'தாவீது ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும் கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம் பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறது" என்றார். அப்பொழுது நாத்தான் இராஜாவை நோக்கி 'நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்hம் செய்யும், கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே"என்றான் (2சாமு 7:2,3). ஆனால், அது அவனுடைய அனுபவத்தையும், எண்ணத்தையும் சார்ந்ததே. தேவன் இடைப்பட்டு தம்முடைய திட்டத்தைத் தெளிவாக்குகிறார். இந்த ஆபத்தினையும் அடையாளம் கொண்டு செயல்படுவது நல்லது.

அனுதாபம், பற்று இவைகளும் சில வேளைகளில் ஆவிக்குரிய உடையினைத் தரித்து நம்மைச் சந்திக்கலாம். பவுலின் வாழ்வினை உற்றுப் பாருங்கள். அகபு தீர்க்கன் மூலம் பவுல் எருசலேமில் கட்டப்பட்டு புறஜாதிகள் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாரென்று தீர்க்கதரிசனம் உண்டாகிறது. அதனைக் கேட்டவர்கள் பவுலின் மேல் கொண்ட பாசத்தின் மிகுதியினால், எருசலேமுக்குப் போகவேண்டாமென வேண்டி, கெஞ்சி நிற்கின்றனர் (அப் 21:10-12). ஆனால் பட்டணங்கள் தோறும் ஆவியானவர் சொல்கிறதனை தெளிவாகக் கேட்டு தனக்குள் உறுதியான தீர்மானமாக, 'அவைகளில் ஒன்றையும் குறித்துக் கவலைப்படேன், என் பிராணனையும் நான் அருமையாக எண்ணன். என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோட முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்" என்ற முழக்கம் இன்றைக்கும் கேட்கப்பட்டால் நலமாயிருக்குமே. அனுதாபம், பாசம், பற்று சொந்த பந்தமல்ல தேவ வார்த்தையின் நிறைவேறுதலே நமக்கு முக்கியம் என்பதனை வாழ்ந்து காட்ட தேவ மனிதர்கள் தேவை. 

ஆபத்தினைச் சந்திக்கும் வேளைகளில் ஆவிக்குரிய கவசம் அணிந்த ஆலோசனைகள்  ஆபிரகாமிடத்திலிருந்து சாராளுக்கு வந்ததுபோல வரலாம். 'உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும் நீ உன்னை சகோதரி என்று சொல்" என்ற ஆலோசனை (ஆதி 12:13).தேவன் எகிப்திலும் கேராரிலும் அவனைக் காப்பாற்ற இடைப்பட்டிருக்காவிடில் இந்த தேசத்தாரை அழிவுக்கு நேராக வழிநடத்தியிருக்குமே (ஆதி 12:17, 20:9). என்னைக் காத்துக்கொள்ள, நான் மேற்கொள்ளும் ஆவிக்குரிய வேஷம் என்னைச் சுற்றியிருப்போரின் அழிவுக்குக் காரணமாக மாறிவிட்டால் அது எத்தனை பெரிய துக்ககரமானது. என் மூலம் ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படவேண்டுமே ஒழிய, என் மூலம் அவர்கள் அழிக்கப்பட்டுவிடக்கூடாதே. 

    சத்துருவினிடத்தில் கூலி பெற்றிருந்த செமாயா என்பவன் நெகேமியாவை நோக்கி, 'நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளே போய் தேவாலயத்தின் கதவுகளை பூட்டுவோம் வாரும், உம்மைக் கொன்றுபோட வருவார்கள். இரவிலே உம்மைக் கொன்று போட வருவார்கள்" என்றான் (நெகே 6:10). எத்தனையான ஆவிக்குரிய முலாம் பூசப்பட்ட பொய், ஆனால் ஜெபத்தினால் தேவனோடு ஒன்றிப் போய்விட்டவனும், தேவ காரியத்தில் கண்ணும் கருத்துமாய் இருந்தவனும், தேவனுக்குப் பயந்து நன்மை செய்பவனுமாகிய நெகேமியாவை அது அசைக்கவோ, ஏமாற்றவோ முடியவில்லை. மாறாக அவன் சொல்வதனைப் பாருங்கள்! என்னைப் போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய் பதுங்குவானோ? என்ற இடி முழக்கக்  குரல் (நெகே 6:11). அந்தப் பொய்யை அடையாளம் கண்டுகொள்ள நேரம் எடுக்கவில்லை. 

வெளி வேத்தில் மேன்மை பாராட்ட விரும்பும் ஒரு கூட்டம் எப்போதும் உண்டு; அது இருதயத்தில் அல்ல. அது தங்களையே மெச்சிக்கொள்ளும், தங்களுக்கே புகழ் தேடும். அதற்காக யாரையும் பலிகொடுக்கவும் தயங்காது (2கொரி 5:12). வெளித்தோற்றத்தின்படி மாத்திரம் பார்த்து ஏமாந்து போகாமல் தேவன் நம்மைக் காப்பாராக (2கொரி 10:7). பொல்லாங்கானதாகத் தோற்றமளிக்கிறவைகள் அநேக வேளைகளில் ஆவிக்குரிய தோற்றம் போலக் காட்சி தர ஏராளமான வாய்ப்புகள் உண்டு. இது கடைசி காலம் கன்னியாக வாழவேண்டிய சபைதனை கறைப்படுத்திவிட சத்துருவாகிய சாத்தான் பலவித சாகசங்களை கையாளும் வேளையிது (2கொரி 11:3).

கவனமாக வாழ்வோம் கர்த்தரின் ஆலோசனையாம் கர்த்தரின் வார்த்தைதனை நன்கறிவோம். காலத்தின் கோலத்தினைப் புரிந்துகொள்வோம். கருத்தாய் ஜீவிப்போம், கிருபைதனைச் சார்ந்த வாழ்வு பெற்றிடுவோம், கண்களில் தெளிவு உண்டாக்கும் கர்த்தரின் நியாயங்களால் எச்சரிக்கப்பட்டவர்களாய் வாழ்வோம் (சங் 19:8-11). எல்லா ஆவிகளையும் நம்பாமல் அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறிவோம் (1யோவா 4:1). தேவனால் உண்டானவைகள் தேவ வார்த்தையால் முத்தரிக்கப்பட்டு தேவனால் அங்கீகாரம் பெற்றிருக்கும். கலப்பு அதிலே காணப்படாது. தேவனால் உண்டானவைகள் அல்லாமல் தேவ நாமத்தைத் தரித்துக் கொள்பவை அந்திக்கிறிஸ்துவின் அடைக்கலத்தால் உண்டானவை என்பதனை மறந்துவிடாதீர்கள்.  

பல வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய பாடல் வரிகள்...

வேதமே எந்தன் வெளிச்சமே

வழிகாட்டியும் அதுவே

இரவுல் பகலும் தியானிப்பேன்

இடறிடேன் என்றென்றுமே

பிழைப்பது தேவ வார்த்தையினால்

மாத்திரம் என்றறிவேன்

குழந்தையைப் போல வாஞ்சிப்பேன்

பதறிடேன் என்றென்றுமே

இன்று அநேகருடைய வாழ்விலும், ஊழியத்திலும் வேதத்தின் முக்கியத்துவம் அசட்டை செய்யப்படுவதனையும், மறக்கப்படுவதனையும் காணுங்கால் உள்ளம் வேதனை அடைகிறது. வேத புத்தகம் மந்திர புத்தகம் போல் மட்டுமே பாவிக்கப்படுவதனையும் கண்டு மனம் புழுங்குகிறது.

'நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்" (ஓசி 4:6) என்று தேவன் கூறாதபடி பார்த்துக்கொள்ளவேண்டியது நம் கடமை. 

'என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன், அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்" (ஓசியா 8:12) என்று அங்கலாய்க்கும் தேவனைக் கண்டவர்கள் எத்தனை பேர், மற்ற மதங்களைப் போல நம் கையில் தேவன் அருளிய புத்தகமாகிய வேதம், ஏதோ ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், சடங்குகளில், விழாக்களில் ஓதுவதற்கு அருளப்பட்டது அல்ல. 

மாறாக அன்றாடக வாழ்வில் அதனை ருசித்து அவருக்குள் தேறினவனாக மாறி, நற்கிரியைகளைச் செய்யத் தகுதி பெற்றவர்களாகி, தேவனுக்கு உகந்தவர்களாக மாற்றுவதற்காகவே தரப்பட்டுள்ளது (2தீமோ 3:16,17) என்பதனை நாம் மறக்கலாகாது.

ஆயிரம் ஸ்தோத்திரபலிகளைச் சொன்னால் போதும் என்ற நிலைக்கு இன்று அநேகர் மாற்றப்பட்டிருப்பது நமது அவல நிலையையே சுட்டிக்காட்டுகிறது. வேதத்தினை ஆராய்ந்து அறியவும், தேடி வாசிக்கவும் (ஏசா 34:16) இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாகக் கற்றுக்கொள்வதும் (2தீமோ 3:15) அதன் அடிப்படையில் மற்றவர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்துவதும் நம்முடைய கடமைகளில் ஒன்றாகும்

அநேக நேரங்களில் வேதம் புறக்கணிக்கப்பட்டு, ஜெபங்கள் மணிக் கணக்கில் ஏறெடுக்கப்படுகிறது. விண்ணப்பங்கள் பரலோகத்தை நோக்கி தான் செய்யப்படுகிறது. தன்னுடைய செவிதனை வேதத்திற்கு விலக்கும் எந்த ஜெபமும் பரலோகம் அங்கிகரிக்காதவை என்பதனை அறியுங்கால் அந்த பிரயாசம் எத்தனை வீணாக செலவழிக்கப்படுகிறது என்பது உண்மை (நீதி 28:9).வேதத்தினை தியானித்து தன் வாழ்வினை ஆராய்ந்து அதன் அடிப்படையில் தேவ சமூகத்தில் சேரும்போது, நம் வாயில் வார்த்தை பிறக்கும் முன்னமே தேவன் பதில் அளிக்கிறார் என்ற உண்மையினை அறிந்தவர்கள் எத்தனை பேர்?

அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன். அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன் (ஏசா 65:24) என்ற வாக்கு அவரின் இராஜ்யத்தின் பிள்ளைகளுக்குச் சொந்தமல்லவா!

வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும். இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால் அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை (ஏசா 8:20) என்பது மாறாத பிரமாணம். 

அநேகர் வேதத்தினைக் கேட்க விரும்பாததற்குக் காரணம், அது அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்ற தடை செய்துவிடும் என்பது. அழுதாகிலும் அவரிடம் பெற்றுக்கொள்ளலாம் என்பதும், யாராகிலும் ஜெபித்தாகிலும் வாங்கித் தந்துவிடுவார்கள் என்பதும் போன்ற விநோத எண்ணங்களை உள்ளடக்கி வாழ்வதாலேயே சிலர் கர்த்தருக்குக் காணிக்கைச் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாமென தப்புக்கணக்குப் போடுகின்றனர். அவரோ நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன், பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே என்கிறார் (சங் 50:12). சிட்சையை பகைத்து என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய் என்பதே அவர் சொல்லும் குற்றச்சாட்டு (சங் 50:17).

இன்னொரு கொடுமை இந்த நாட்களில் நடக்கிறது; அது என்ன? வேத வாக்கியங்களை தப்பாகப் புரிந்துகொண்டதனால் உண்டாகும் பிரசங்கங்கள் (மாற் 12:24). பரலோகத்தில் அநேகர் வீடு அற்றவர்களாய் திரிவார்கள் என்றார் ஒரு பிரபல தமிழ் பிரசங்கியார். தாவீது தன் மடியில் குளிருக்காகக் கொடுக்கப்பட்ட அபிஷாகை அறியவில்லை, காரணம் உணர்த்துதலின் ஆவியால் நிறைந்திருந்தார் என்றார் பிரபல தொலைக்காட்சிப் பிரசங்கியார். நீ கோடி கோடியாய் பணம் பெறுவது தேவ நோக்கம் என்றார் தீர்க்கதரிசி என்று ழைத்துக்கொள்ளும் பிரபல ஊழியர் ஒருவர். பவுலுக்கு திருமணத்திற்கு வெளியே பெற்ற ஒரு குமாரன் இருந்தான், அவன்தான் சரீரத்தில் முள்ளாய் விளங்கினான் என்றார் தன்னை பெரிதான வெளிப்பாடுள்ளவனைப் போல காண்பிக்க விரும்பும் மற்றும் ஒரு ஊழியர். ரெபேக்காள் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் காட்டினாள், ஆகையால் நீ எனக்கு மட்டுமல்லாமல் நான் ஏறும் வாகனத்திற்கும் பெட்ரோல் ஊற்று என்றார் ஒரு பழம் பெரும் போதகர். தசக பாகம் உன் ஆசாரியன் கையில் மாத்திரமே தரப்படவேண்டும் என்றார் பழைய உடன்படிக்கையைத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள விரும்பும் ஒரு போதகர். அசீரியனைக் குறித்து தேவன் குறிப்பிடும் வரிகளான 'இதோ திராணியும் வல்லமையுமுடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்" (ஏசா 28:2) என்பதனை பரிசுத்த ஆவி என்று போதிக்கும் பிரபல உலகப் புகழ் ஊழியர் ஒருவரும் உண்டு. ஏதேனில் பாய்ந்த முதலாம் ஆறு பைசோன் ஆவிலா தேசம் முழுவதும் சுற்றி ஓடும் என்பதனை 'ஆவியில்லா" தேசம் என்று ஆராய்ச்சி செய்து வெளிப்பாடு பெற்றதுபோல பேசும் வேதாகமக் கல்லூரி பேராசிரியரும் இதில் அடங்குவர். எத்தனை எத்தனை அபத்தங்கள் ஆவிக்குரிய உலகில் இதனையும் கேட்டு 'அல்லேலூயா" என்று ஆர்ப்பரிப்பவர்களும் உண்டு. இவரைப்போல பேசுபவர்கள் இல்லை என புகழ் பாடுவோரும் உண்டு. ஆசாரியர் உதடுகளில் வேதத்தை தேடுவார்கள் என்பதை மறக்கலாகாது (மல் 2:7). 

என் ஜனம் அறிவில்லாமற் சங்காரமாகிறார்கள் என்று தேவன் உரைப்பது (ஓசி 4:6) இதனைத்தானோ?

இன்று கிறிஸ்துவை அறியாதோர் நம்மிடத்தில் ஓடி வருவதற்கு வேதம் உயர்த்தப்படவேண்டுமே. எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடி வருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள். அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள். ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும் எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும் (ஏசா 2:2,3) என்பது வாக்குத்தத்தம் அல்லவா!

வேதம் போற்றப்படாத, மதிக்கப்படாத, விரும்பப்படாத இடங்களில் தீர்க்கதரிசிகளுக்கு தரிசனம் கிடைப்பதில்லை என்பதனை மறக்கலாகாது (புல 2:9). நீதி 29:18 - ஆம் வசனமும் இதனைத்தான் வலியுறுத்துகிறது. தரிசனமற்ற அநேகருடைய வாழ்வுக்குக் காரணம் வேதம் போதிக்கும், உணர்த்துவிக்கும், உந்தித்தள்ளும் உண்மைதனையும், முழு வேதாகமம் அருளும் விளக்கத்தினையும் அவர்கள் காணக்கூடாதபடி கண் சொருகி இருப்பதினாலேயே, தரிசனம் அற்ற ஒரு வாழ்க்கையில் உத்வேகம் காணப்படாமல், உள் நோக்கத்தின் அடிப்படையில் சுயலாபம் தேடும் காரியங்கள் அதிகமாகக் காணப்பட ஏதுவாகும். அதுவும் தேவன் தராத தரிசனங்கள் ஜனத்தினை வேறு திசைக்கு கொண்போய்விடுமே!

எனவே வேதத்தின் அறிவைப் பெருக்குவோம், நேசிப்போம், அது என் மனமகிழ்ச்சி என்று முழங்குவோம், ஆராய்ந்து காலத்தினையும் புரிந்துகொண்ட வாழ்விற்கு ஒப்புக்கொடுப்போம். கடமைதனை செய்ய கர்த்தரின் பெலத்தினையும் பெற்றுக்கொள்வோம். வருங்கால சந்ததிக்கும் கற்றுத் தருவோம் நாமும் கற்றுத் தேறுவோம். நாம் தேறுகிறது மற்றவர்களுக்கு விளங்குவதாக (1தீமோ 4:15) அது தேசத்தினை அசைக்கப் போதுமான பெலனுள்ளது. 

தேவன் அருளிய வேதம் நம் இருதயத்தில் இருந்தால் நம்முடைய நடைகள் பிசகுவதில்லை (சங் 37:31).

அவருடைய வசனம் நம்மை நிரப்பினால் அவருடைய சித்தத்தினை அறிந்துகொள்வதும் அவருக்குப் பிரியமானதைச் செய்வதும் மிகவும் எளிதாகிவிடும் (சங் 40:8).

தேவ வார்த்தைகளைக் கற்று அதில் நடக்க முயற்சி செய்வோர் கறையற்ற பழுதற்ற வாழ்க்கை வாழ்வதனை அனுதினமும் அனுபவிப்பார்கள் (சங் 119:1).

வேதத்தினை நேசித்து அதன்படி நடக்க ஒப்புக்கொடுத்தோர் மாயையான வழிகளுக்குத் தங்களை ஒப்புக்கொடாமல், ஏமாற்றும் பாதைகளில் நடவாமல் காப்பாற்றப்படுவார்கள் (சங் 119:29).

தேவ வார்த்தைகள் நமக்கு மனமகிழ்ச்சியானால், நாம் அமிழ்ந்து மாண்டு போகாமல், அது துக்கத்தினாலேயோ, உபத்திரவத்தினாலேயோ ஏற்பட்டாலும் காக்கப்படுவர் (சங் 119:92).

தெளிந்த புத்தியும் நல் உணர்வும் கொண்ட வாழ்க்கைதனை வாழச் சிறந்த வழி வேதத்தினை இதயத்தில் காத்துக்கொள்வதே (சங் 119:34). வீண் சிந்தைக்கும் பேச்சுக்கும் நம்மை விலக்கி இருமனம் கொண்ட வாழ்வில் இருந்து தற்காக்க வேத வார்த்தைகளுக்கே வல்லமை உண்டு (சங் 119:113).

என்னை பெரியவனாக்கி முதியோர்களையும் விட ஞானமுள்ளவனாக மாற்ற உதவுவது வேத தியானமே (சங் 119:99.100).

அடுக்கிக்கொண்டே போகலாம் இலையுதிரா வாழ்வு, செய்யும் காரியங்களில் வெற்றி, எத்திசையிலும் பயனுள்ள வாழ்வு, புத்தியுள்ள மேன்மையான வாழ்வு, தேவ பிரசன்னத்தை ஏந்திச் செல்லும் பாத்திரமாக மாற்றப்படும் பாக்கியம் (சங் 1:4; யோசுவா 1:7,8).

எனவே கர்த்தாவே உம் வேதத்தின் அதிசயங்களை நான் பார்க்கும்படி என் கண்களைத் திறந்தருளும் எனக் கெஞ்சுவோம் (சங் 119:18). 


ஆவிக்குரிய முலாம் பூசி ஆவிக்குரியவர்களையும் மூடராக்கி

ஆணையிலிருந்து விலகச்செய்து ஆண்டவருக்கும் தூரமாக்கி

சாயலில் இருப்போரையும் சடுதியாய் வந்து வஞ்சித்துவிடுவான்

சத்துருவின் தந்திரமிது சந்ததி நாம் எச்சரிக்கையோடிருப்போம் 


அனுபவம் அனுதாபமென ஆடைகள் பல போர்த்திக்கொண்டு

அனுப்பப்பட்டோரின் வாழ்க்கையில் அவர்களாகப் புகுந்துகொண்டு

இளைய தீர்க்கரின் பயணத்தை இவர்களாகவே இடைமறிக்கும்

கிழவர்கள் வார்த்தைகளுக்கும் நாம் கவனமாயிருக்கவேண்டுமே!


சத்தியத்தை மறைத்துவிட்டு சாதகமாயதைச் சாய்துக்கொண்டு

சத்துருவுக்குச் சகோதரராய் சத்தியத்திற்கோ துரோகிதராய்

சந்தியில் செய்தி சொல்லி ஆத்துமாக்களின் உயிர்க் கொல்லியாய்

சுற்றுவோரின் சுருக்கு மடியில் சிக்கிக்கொண்டால் பரிதாபமே!


கன்னிகையாம் சபை தினம் கறைபடாமல் காக்கப்படட்டும்

வார்த்தையாம் ஆயுதம் வாளாய் நம் கையிலிருக்கட்டும் 

ஒளியாம் வேதம் ஒவ்வொரு நாளும் உயர்த்தப்படட்டும்

வழிகள் பிசகாதிருக்க இதயம் அதால் நிறைந்திருக்கட்டும்


பிதாவுக்குப் பிரியமாயிருக்க நம்மைப் பயிற்றுவிப்பது அதுதானே

கறையற்ற வாழ்வுக்கு நம்மை வழிநடத்துவதும் அதுதானே 

மாயையான வாழ்க்கைக்கும் அதுதான் நம்மை விலக்கிக் காக்கும்

மறுவுலக வாழ்விற்கும் அதுதான் நம்மை வழிநடத்திச் செல்லும்



                                                                       அன்பரின் அறுவடைப் பணியில்

                                                                   அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

March 2026

 


   நம்முடைய கன்மலையும், கோட்டையும், இரட்சகரும், தேவனும், நாம் நம்பியிருக்கிற துருகமும், கேடகமும், இரட்சண்யக் கொம்பும், உயர்ந்த அடைக்லமுமாயிருக்கிற நம்முடைய ஆண்டவரின் நாமத்தில் வாழ்த்துகள் (சங். 18:2). இப்படிப்பட்ட ஆண்டவரைக் கொண்டிருக்கும் நமக்கு, வாழ்விலும் ஊழியத்திலும் தடைகள் வராமல் இருப்பதில்லை. 'இடறல்கள் வருவது அவசியம்" என்று இயேசுவும் சொன்னாரே (மத். 18:7). 

அவைகளைக் குறித்து தியானித்தால், சில உண்மைகளைக் கற்றுக்கொள்வதோடு, அவைகளைத் தாண்டி முன்னேறவும் நமக்கு வழிகள் புலப்படலாம். எனவே, இந்த மடலை அந்த நோக்கத்தில் எழுதுகிறேன். 

D. L. மூடி என்ற தேவ மனிதர் சொன்னார்: 'எனக்கு நானே முதல் எதிரி" என்று. நமக்குள் ஏற்படும் போராட்டங்களும், சோதனைகளும், தர்க்கங்களும், நினைவுகளுமே அநேக நேரங்களில் நம்முடைய ஓட்டத்தைத் தடைசெய்யப் போதுமான பெலமுள்ளதாய் இருக்கின்றன. சாத்தானால் விதைக்கப்படும் சந்தேகங்கள் (மத். 13:25), பயங்கள், எதிர்காலத்தினைக் குறித்த நிச்சயமற்ற எண்ணங்கள், நமக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களைக் குறித்த தடுமாற்றங்கள், தனிமை போன்றவற்றை மேற்கொள்ளக் கூடாமல் திகைக்கும் சமயங்கள், பற்றாக் குறைகள், தேவையற்ற எதிர்ப்புகள், சிநேகிதரானாலும் நம்பக்கூடாமற்போகும் சந்தர்ப்பங்கள், உடனிருப்போரில் காணப்படும் தொய்வுகள் நம்முடைய வேகத்தினைக் குறைக்கப் போதுமானவைகள். 

அவைகள் நம்மை உட்காரச் செய்து, எதிர்மறையான காரியங்களைச் சிந்திக்கவைத்து, விசுவாசத்தினைத் தளரச் செய்பவை; கூடவே, துன்மார்க்கத்தார் செழிப்பதனையும், தேவ வேம் தரித்தவர்கள் வேகமாகச் செயல்படுவதனையும் கண்டு, நமக்கு ஏன் இப்பபடி நடக்கிறது?  என்ற கேள்விகளையே சுற்றி சுற்றி வரச்செய்து, முன்னோக்கிப் பார்க்கவிடாமல் செய்துவிடுமே (சங். 73). 

வெளியின் போராட்டங்கள், உள்ளே பயத்தினை உருவாக்கிவிடுமே          (2 கொரி. 7:5). 

நம்மை நாமே ஜெயிக்காவிட்டால், ஜெபத்தினையும் சந்தேகிக்கத் தோன்றும் (1 யோவான் 3:21,22). இது மன அழுத்தத்தினை அதிகமாக்கி, கால்களைக் கட்டிவைத்துவிடும். 

இவைகளை மேற்கொள்ள ஒரே வழி, வேத வார்த்தைகளால் நம்மை நிரப்புவதும், அதின் ஊடாக தேவனையும், நம்மையும் கண்டுகொள்வதுமே. நம்மைக் குறித்து தேவன் என்ன நினைக்கிறார் என்று அவருடைய வார்த்தையின் மூலமாகக் கற்றுத்தருவதற்கு ஆவியானவரும் உதவுகிறார். 

ஆவியினால் உரமேறிய தேவ வார்த்தைகளை இந்த சமயத்தில் உபயோகிப்பதே, இதன் மேல் நாம் எடுக்கும் ஆயுதம். இளைத்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தைகள் (ஏசா. 50:4) செய்யும் விந்தைதான் என்னே! 

16 வருடமாய் செயலற்றுப்போயிருந்த செருபாபேலும், யோசுவாவும் தீர்க்கர்களின் வார்த்தையால் செயல்படத் தொடங்கினார்கள் அல்லவா! (எஸ்றா 5:12).

குடும்ப உறவுகளில் ஏற்படும் விரிசல்கள் நம்மை செயலற்றுப்போகப்பண்ணும் என்பதனை அறிந்த பவுலும், உங்கள் ஜெபங்களுக்குத் தடை உண்டாகாத வண்ணம், கூடிவாழுங்கள் என்கிறார்   (1 கொரி. 7:5). இதைத்தானே பேதுருவும் தன்னுடைய நிருபத்தில் குறிப்பிடுகிறார் (1 பேதுரு 3:7).

அநேக வேளைகளில், குடும்ப வாழ்வில் சத்துரு நுழைந்து செயல்படவேண்டியவர்களைக் கட்டிவைத்துவிடுகிறான். அவைகள் இருதயத்தில் நுகமாக மாறிவிடுகிறது. அதனையும் ஒழிப்பதற்கு தேவனுடைய ஆலோசனை, 'ஆவியினால் நுகத்தடி உடைக்கப்படும்" என்பதே (ஏசாயா 10:27). அபிஷேகத்தின் அளவை அதிகப்படுத்துவதே இதற்குப் பதில் (யோவான் 3:34). 

தன்னுடைய ஊழியத்தினால் (குறுகிய காலத்தில் உண்டாக்கப்பட்டது அப். 17 அதி.) உருவாக்கப்பட்ட தெசலோனிக்கேய விசுவாசிகளுக்கு உபத்திரவங்கள் வந்தபோது, அவர்களின் விசுவாசத்தினை உறுதிப்படுத்தவும், ஊன்றக் கட்டவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் பவுல் அங்கே போக விரும்பியபோது, சாத்தானே பவுலின் பிரயாணத்தினைத் தடைசெய்கிறான் (1 தெச. 2:18). தன்னால் போகமுடியாதபோது, அவன் தீமோத்தேயுவை அவர்களைக் கண்டு நலம் விசாரிக்கவும், புத்திசொல்லவும் அனுப்பிவிடுகிறதனைக் காண்கிறோம். 

நாம் செய்யக்கூடாமல் தடுக்கப்படும்போது, நம்மோடு இணைக்கப்பட்டவர்களை அதே காரியத்தினைச் செய்துமுடிக்க உபயோகிப்பது ஞானம். அதற்குரிய அளவிற்கு அவர்களைப் பயிற்சித்து நடப்பிப்பது இங்கே காணக்கூடியது. நான்தான் எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்ற மனப்பான்மையிலிருந்து இது அநேகரை விடுதலையாக்கும். கூடவே, உடன் ஊழியர்களை ஆயத்தப்படுத்தவும் பிரயோஜனமானது. 

உபத்திரவம் (persecution) என்ற ஆயுதத்தினை உபயோகிக்க சத்துரு இந்த நாட்களில் அதிகமாய் முயற்சிக்கிறான் (1 தெச. 12:14). சுவிசேஷத்தின் எதிரிகள் இன்றைக்கு நன்றாக தங்கள் தீயச் செயல்களைச் செய்வதற்குப் பழக்குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நல்ல இணைப்பை ஏற்படுத்தி, அதனை முறைப்படுத்தி செயல்படுத்திவருகிறார்கள். விசுவாசத்திற்குள் புதிதாக வந்தவர்களைப் பயமுறுத்தி அல்லது அவமானப்படுத்தி அல்லது அப்புறப்படுத்தி அல்லது அடித்து, புதிய விசுவாசிகளை தேச துரோகிகளாகச் சித்தரித்து, சமுதாயத்திலே ஒரு வெறுப்புணர்ச்சியினை உருவாக்கி, ஊழியங்களைத் தடைசெய்கிறார்கள். பவுலைப் போல நாமும் புதிய உத்திகளைக் கையாள, நாமும் புதிய செயல்முறைகளைக் கையாளவேண்டிய அவசியம் உண்டு; அது இன்றியமையாததாக மாறியுள்ளது. அநேகர் பயிற்சிபெறவேண்டும். குறிப்பாக இளையவர்கள் இயக்குவிக்கப்படவேண்டும். 'இளங்கன்று பயமறியாது" என்பது பழமொழியல்லவா!

    அநேக நேரங்களில் இயேசுவோடு நடந்த சீஷர்களே, சிறுபிள்ளைகள் இயேசுவிடத்தில் நெருங்கிவருவதனைத் தடுத்ததுபோல, தங்களை அறியாமலேயே தடுத்துவிடுகின்றனர் (மாற்கு 10:14). அவர்கள் இயேசுவோடு இணைந்து ஊழியம் செய்தது உண்மை; ஆனால், இயேசுவின் மனநிலையை அறியவில்லை; அவருடைய உள்ளான விருப்பத்தினை அறியவில்லை. ஒருவேளை, தங்களின் தலைவர் தொந்தரவு செய்யப்படக்கூடாது என்பதில் அதிகக் கவனம் செலுத்தியதினால் இருக்கலாம். ஆயினும், இயேசுவின் வாஞ்சையை அறிந்தார்கள் இல்லையே!

மார்க்க நெறிகளை அதிகம் வலியுறுத்துகிறவர்களைக் குறித்து இயேசு சொல்லும்போது, 'மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை" (மத்தேயு 23:13) என்று சொல்லுகின்றார். வசனம் பேசுகிறவர்களே, 'வார்த்தையாம்" இயேசுவிடம் நெருங்கவிடாதபடிச் செய்ய வாய்ப்புகளுண்டு. அதனால்தான், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள் என்றார் (மத்தேயு 23:3). நம்முடைய போதனையும், நடக்கையும் அநேகருக்கு இடறுதலாக இல்லாதவாறு பார்த்து, சீராய் நடப்பது நமக்கு ஏற்றது. 

'சுவிசேஷ எதிரிகள்" எக்காலத்திலும் ஆண்டவரை அறியாதோர் இரட்சிக்கப்படுவதற்குத் ததைடயாகவே செயல்பட்டார்கள் என்பதனை நாம் அறிவோம் (1 தெச. 2:16). அவர்களின் எண்ணிக்கை இன்று மதவெறியாக உருவெடுத்து, இந்தியா முழுவதும் குறிப்பாக வடஇந்தியாவில் பெருகி இருப்பது நாம் அறிந்ததே. சிறுபிள்ளைகள் முதல் முதியவர் வரை அவர்களால் கெடுக்கப்பட்டு, மனதளவிலே மக்கள் சுவிசேஷத்தினைக் கேட்கக்கூடாதபடி 'கலாட்டா" செய்யவும் ஏன் தாக்கவும் முற்பட்டு, ஒரு பீதியை உருவாக்கி சட்டத்தினைத் தங்கள் கைகளிலேயே எடுத்து, அதனை தங்களுக்கு ஏற்றாற்போல் வளைத்து, போலீஸின் துணையோடு அநேக நேரங்களில் அரங்கேற்றி, சமூக வலைதளங்களை நிரப்பி, தாங்கள் ஏதோ சாதித்துவிட்டதுபோல் தங்களைக் காண்பித்து, சமாதான உறவுகளைக் கெடுத்து, பிளவுபடுத்தி மனித சமுதாயத்திற்கு சாவுமணி அடித்துக்கொண்டிருக்கிறார்கள். 

அப்படிப்பட்டவர்களுக்கு சமூகத்திற்கு உதவ அறியாதவர்கள், அழிக்கத்தான் அறிந்தவர்கள். நன்மைகளைத் தூஷிக்கிறார்கள். கிறிஸ்துவின் நாமத்தில் செய்யப்படும் எந்த நற்கிரியையையும் ஆலோசனைகளையும், உதவிகளையும், உற்சாகத்தினையையும் கொச்சைப்படுத்தி, தேவ கோபாக்கினையை தங்கள் மேல் திணித்துக்கொள்ளுகிறார்கள். இடறல் உண்டாக்குகிறவர்களைக் குறித்து இயேசு பேசின வார்த்தைகள் கடினமானவைகள் அல்லவா! இவைகளை முறியடிக்க அவர்களை இயக்குவிக்கும் ஆவிகளைக் கட்டி ஜெபிப்பதனையே நாம் அதிகமாக மேற்கொள்ளவேண்டியுள்ளது (எபே. 2:2). சத்துருவின் கையில் தங்களை ஒப்புக்கொடுத்தோர் எண்ணிக்கை பெருகுகிறதே!

சில வேளைகளில், அன்றைய நியாயசாஸ்திரிகளைப் போலவே (லூக். 11:52) அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டவர்கள், தாங்களும் பரலோகத்தில் பிரவேசிப்பதில்லை, உட்பிரவேசிப்பவர்களையும் தடைபண்ணுகிறார்கள். உபதேசத்தின் உச்சகட்டம் என்று கூறி, அநேகர் அழிந்துபோகிறவர்களைக் குறித்து கரிசனையற்றவர்களாகவே மாறிவிட்டக் கொடுமையும் உண்டு. நரகம் நிரந்தரமானது அல்ல, நியாயத்தீர்ப்பு இயேசுவிலேயே நிறைவேறிவிட்டது என்றெல்லாம் தங்களுடைய கிரேக்க, எபிரேய ஞானத்தினால் ஜனங்களை திசைதிருப்புவோர் உண்டு அல்லவா!

சில வேளைகளில், மற்றவர்கள் போட்ட அஸ்திபாரத்தில் தாங்கள் ஊழியம் செய்ய விருப்பமற்று, பவுலைப் போல புதிய புதிய இடங்களுக்குச் செல்லவே ஆர்வம்கொண்ட கூட்டத்தார், பிற ஊழியங்கள் நடக்கும் இடத்திற்குச் செல்வதனை பெரிய இதயத்தோடு தவிர்த்துவிடுவது உண்டு. தேவன் தங்களுக்குக் கொடுத்திருக்கும் கிருபைகளைப் பகிர்ந்துகொடுக்கிறவர்களாக அவர்கள் செயல்பட்டால், பவுலைப்போல, 'நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேன்" என்ற உறுதியோடும் கரிசனையோடும் தங்களால் இயன்றதனை நிறைவேற்ற வாய்ப்புகள் எங்கும் உண்டு. 

தேவன் தந்திருக்கும் கிருபைகள் வித்தியாசமானதாக இருப்பதனை உணர்ந்து ஒருவருக்கொருவர் அதனை பறிமாறிக்கொள்ள வாஞ்சித்தால், இந்த தடையும் நீங்கும் (ரோமர் 15:21-29). கிறிஸ்துவுக்குள் அனைவரும் தேறினவர்களாக இருப்பதும் தேவனுடைய சித்தமல்லவா! (கொலோ. 1: 28,29). உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; தடை செய்யாதே (ஏசா. 54:2) என்பது எல்லாருக்கும் உரியதே. 

எல்லாவற்றிற்கும் மேலாக, அநேக நேரங்களில் ஆவியானவரும் சில இடங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்வதனைத் தடுத்து, புதிய பிரதேசங்களுக்குச் செல்ல தம்முடையவர்களை ஏவுகிறார் அல்லவா! அப். 16:6-12 ல் காண்பது போன்று, ஆவியானவரின் மெல்லிய சத்தத்தினையும் உணர்ந்து, அவருடைய வழிநடத்துதலையும் புரிந்துகொண்டு முன்னேறினால், அநேக தடைகள் அவரால் உண்டாக்கப்பட்டதினைக் காணலாம். ஐரோப்பாவிலும் பிரசங்கம் செய்யவேண்டும் என்பதனை பவுலுக்கும் அவனோடே இருந்தவர்களுக்கும் வலியுறுத்தவே தேவன் அவ்வாறு செயல்படுகிறார். இதனைப் புரிந்துகொள்ள ஆவியின் நிறைவும், கீழ்ப்படிதலும் நம்மனைவருக்கும் தேவை. 

ஆவியிலே நடத்தப்படுகிறவர்களைத்தான் வேதம் 'புத்திரர்கள்" என்று அழைக்கிறது (ரோமர் 8:14). தேர்ச்சிபெற்றவர்கள் என்பதும் இதனால் புலப்படும். லோத்தைப் போல பசுமையாய் இருக்கிறவைகளை மாத்திரம் காணும் கண்கள் உடையவர்களுக்கு இந்த அனுபவம் ஆகாததாகவே காணப்படும். 'கரம்பற்றி நடத்தும் கர்த்தர் நீர் அல்லோ!" என்று முழங்குபவர்களில் அநேகர், கீழ்ப்படிய கஷ்டப்படுகின்றனர். ஏனெனில், அதில் விலைக்கிரயம் செலுத்தப்படவேண்டியுள்ளது. அது அவர்களுக்கு ஒருவேளை வேதனையைக் கொடுக்கலாம். ஆனால், ஆவியானவரின் சிந்தையைத் தனதாக்கிக்கொண்டால், தேசம் தேவனை அறிவதிலும், அறியப்படாதோர் சத்தியத்தை அறிவதிலும் ஒருபோதும் தேக்கநிலை உண்டாகாது என நான் நம்புகிறேன். 

இறுதியாக, 'தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப்போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்" (மீகா 2:13). என்பது நமக்கு வாக்குத்தத்தம் அல்லவா! எனவே, எதனைக் கண்டும் துவண்டுவிடாமல், 'பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்" (சக. 4:7) என்று முழங்க 'பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தினாலும் அல்ல" ஆவியினாலே ஆகும் (சக. 4:6) என்று முழங்குவோம். தேசம் தேவனை அறியும்வரை ஓயாமல் ஓட தேவ பலன் நம்மை நிரப்புவதாக. 


தடைகள் என்று தயங்கிவிடாதே

தாங்கும் கர்த்தரின் தயவு இரக்கம்

தாராளமாய் உன் பக்கம்


சத்துருவின் சூழ்ச்சிகளில் மாட்டிக்கொள்ளாதே

சந்ததம் உன்னை நடத்திடும் சத்திய தேவன்

சாத்தானை ஜெயித்தவர் உன் பக்கம்


உபத்திரவம் உன்னை உருவழிக்க விட்டுவிடாதே

உன்னால்தான் இதனைச் செய்யமுடியும்

உனக்குள்ள கிரீடம் உனக்கே சொந்தம். 


 

                                                                                   அன்பரின் அறுவடைப் பணியில்

                                                                            அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

Feb 2026

 



    சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கி, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்தி, அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறவரும் (சங். 113:7,8),  ஞானிகளை வெட்கப்படுத்தும்படி உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொள்பவரும், பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொள்பவரும், உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தெரிந்துகொள்பவருமாகிய (1 கொரி. 1:27,28) ஆண்டவரின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். 

தேவன் ஒரு மனிதனைத் தெரிந்துகொள்ளும்போது, அவனை ஆசீர்வதிப்பது மாத்திரமல்ல, அந்த மனிதனைச் சுற்றியிருக்கிற பிற ஜனங்களுக்கும் அவனை ஆசீர்வாதமாக மாற்ற விரும்புகிறார்; தேசம், சபை மற்றும் குடும்பம் அவன் மூலம் ஆசீர்வதிக்கப்படுகிறது. அத்தோடு நிறுத்திவிடாத தேவன், அவனது வாழ்வில் அற்புதமாக இடைபட்டு, அவனை பூமியின் உயர்ந்த ஸ்தானங்களிலும் நிறுத்துகின்றார். அதற்கு, யாக்கோபின் வாழ்வில், தேவன் ஏல்பெத்தேலிலிருந்து எகிப்து வரை (ஆதி. 32: 31-50:14) செயல்பட்ட விதம் நல்லதோர் அத்தாட்சி. யாக்கோபின் வாழ்க்கையுடனான தேவனது இந்த இடைபடுதல், அவனை பூரணமான மாறுதலுக்குள் வழிநடத்தியது.

பின்பு, யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக்கொண்டுவந்து, அவனை பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினபோது,  யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான் (ஆதி. 47:7) என்று வாசிக்கின்றோம். இங்கே, யார் யாரை ஆசீர்வதிக்கிறார் என்று பாருங்கள். 'மேய்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள்" (ஆதி. 46:34) என்று யோசேப்பு தன் தகப்பனையும், தன் சகோதரர்களையும் பார்த்துச் சொல்லுகிறான். ஆகையினாலேயே, 'கோசேன் நாட்டில் இருக்கும்படியாக பார்வோனிடத்தில் கேளுங்கள்" என்று தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் பார்த்துச் சொல்லுகிறான். ஆனால், இப்போதோ அருவருக்கப்பட்ட ஜாதியிலிருந்து வந்த யாக்கோபு பார்வோன் ராஜாவை ஆசீர்வதிக்கிறான். பிரியமானவர்களே! நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், தேவனை உங்கள் வாழ்க்கையில் உள்ளடக்கும்போது, பரிசுத்தத்தையும் மற்றும் அர்ப்பணத்தையும் ஒன்றாக்கும்போது, தேவன் இல்லாமல் என்னால் கூடாது என்று பூரணமாக ஒப்புக்கொடுக்கும்போது நிச்சயம் நீங்கள் எல்லாரைக் காட்டிலும் உயர்த்தப்படுவீர்கள்; இது நிச்சயம். 

ஒரு பெரிய ராஜாவுக்கு யாக்கோபு ஆசீர்வாதம் கூறுகிறான், ஆதி. 47:10-ல் மீண்டும் பார்வோனை யாக்கோபு ஆசீர்வதிக்கிறான். இப்போது பார்வோனுக்குத் தெரிந்துவிட்டது. இந்த மனிதன் என்னை ஆசீர்வதிப்பதற்காகப் படைக்கப்பட்டவன், அனுப்பப்பட்டவன் என்று; எனவே, ஆசீர்வதிக்கும் பாத்திரமாகவே யாக்கோபை பார்வோன் பார்க்கும் நிலைக்கு அவன் மாறிவிட்டான். பிரியமானவர்களே! நாம் எத்தனை தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்தாலும், நம்மை ஆண்டவருக்குப் பூரணமாக ஒப்புக்கொடுக்கும்போது, பயனற்றவனாயிருந்தாலும் புழுதியிலிருந்து தூக்கி எடுத்து பிரபுக்கள் மத்தியில் உட்கார வைக்கிறவர் நம் ஆண்டவர்.  

பீஹாரின் 'ஜப்லா" என்ற கிராமத்தில் ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டான். அவனுடைய வேலை, வயலில் கூலிக்கு அறுவடை செய்வது. மிகவும் தாழ்வான குடும்பத்தில் பிறந்த அவன், இயேசுவைப் பற்றி நமது ஊழியர் ஒருவர் மூலமாக அறிந்து, அவரை தனது வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டபோது, ஞாயிற்றுக்கிழமையில் எந்த வேலையும் செய்வதில்லை என்றும் ஆண்டவரை மட்டுமே ஆராதிப்பேன் என்றும் தன் மனதில் தீர்மானம் எடுத்தான். பீஹாரில், கோதுமை அறுவடை நாட்களில், தங்கள் ஊரை விட்டு விட்டு, மற்ற இடங்களிலிருக்கும் பண்ணையார்களுக்கு மற்றும் பண்ணைகளுக்கு வயலில் அறுவடைக்குச் சென்று சம்பாதிப்பது இங்குள்ள ஜனங்களின் வழக்கம். அவ்வாறு ஒருமுறை ஓரிடத்தில் அவன் அறுவடைக்குச் சென்று தங்கியிருந்த நாட்களில், ஒரு ஞாயிற்று கிழமை அன்று, 'இன்று ஆண்டவரை ஆராதிக்கவேண்டும்; எனவே, இன்று வயலிலே வேலை செய்ய முடியாது" என்று பண்ணையாரிடம் சொன்னபோது, பண்ணையார் பதிலாக, 'எல்லோரும் இரவு பகலாகக் கஷ்டப்பட்டு அறுக்கிறார்கள். நீ ஆண்டவரிடத்தில் ஜெபிக்கப்போகிறாயா" எனக் கூறி அவனை அனுப்பிவிட்டார். 

அவனோ, ஞாயிற்றுக் கிழமை அன்று, தூரத்திலிருந்த ஒரு மரத்தின் கீழ் முழங்கால்படியிட்டு ஜெபிக்கத் தொடங்கினான். இந்நிலையில், பதினைந்து வருடங்களாக நீங்காத வியாதியினால், பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சுகம் பெறாத பண்ணையாரின் மனைவி இதைக் கவனித்து, என்ன செய்கிறாய்? என அவனிடத்தில் கேட்டபோது, 'நான் ஜீவனுள்ள ஆண்டவரை வணங்குகிறேன்" என்றான் அவன். அப்போது பண்ணையாரின் மனைவி, 'உங்கள் ஆண்டவர் உயிரோடு இருப்பாரானால், எனது பதினைந்து வருட நீங்காத வியாதி சுகமாகுமா? எனக்காக எனது கணவர் பல லட்சம் பணம் செலவழித்தும் சுகமாகாத நிலையில், இனி வெளிநாடு சென்று சிகிச்சை செய்வதா அல்லது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளலாமா என யோசிக்கிறார். எனவே, அந்த ஜீவனுள்ள தேவனிடத்தில் எனக்காக வேண்டுதல் செய்" என்று அவனிடத்தில் கேட்டுக்கொண்டாள். இதைக் கேட்ட அந்த மனிதன், உடனே அந்த பண்ணையாரின் மனைவியின் தலை மீது கைவைத்து ஜெபித்தபோது, ஒரு வாரத்தில் தன் சரீரத்தில் வித்தியாசத்தை உணர்ந்த அவள், தன் கணவனாகிய பண்ணையாரிடம் அறுவடைக்கு வந்த அந்த மனிதனிடத்தில் சக்தி இருப்பதாகக் கூறினாள். ஆனால், பண்ணையாரோ அவன் பன்றி மேய்க்கிறவன் என அலட்சியமாகப் பதிலளித்தார். அவளோ, அவன் பன்றி மேய்க்கிறவன் அல்ல எனக்கு மறுவாழ்வு கொடுக்க வந்தவன் எனக் கூறியதுடன், அவன் போகும் போது ஐந்து மூட்டை கோதுமையையும் இலவசமாகக் கொடுத்து அனுப்பினாள். அவன் மூலமாக இயேசு கிறிஸ்துவையும் அறிந்துகொண்டாள். எகிப்தியருக்கு யாக்கோபு அருவருப்பானவன்தான்! ஆனால், பார்வோனோ, 'நீ என்னை ஆசீர்வதிக்கவேண்டும்" என்று தலை குனிந்து நிற்கிறான். பிரியமானவர்களே! நாம் வித்தியாசமானவர்கள், நாம் பிரித்தெடுக்கப்பட்டவர்கள், நாம் வைராக்கியமானவர்கள், நாம் ஆண்டவருக்குச் சொந்தமானவர்கள்; இதனை இந்த உலகத்திற்குக் காண்பித்துவிடுவோம். கர்த்தர் நல்லவர் என்பதை உலக மக்களுக்குச் சொல்ல வைராக்கியம் காட்டுவோம் நாம். 
இதுவரை, மற்றவர்களின் ஆசீர்வாதத்தில் ஆசைகொண்டு வாழ்ந்தவன் யாக்கோபு; இப்போதோ,  ராஜாக்களுக்கு ஆசீர்வாதத்தைக் கொடுக்கும் மனிதனாக மாறிவிட்டான். இந்த சந்தர்ப்பத்திற்குப் பின் யாரிடத்திலும் யாக்கோபு ஆசீர்வாதத்தைக் கேட்கவே இல்லை; எல்லாருக்கும் ஆசீர்வாதத்தைக் கொடுக்கும் பாத்திரமாக அவன் மாறிவிட்டான்; எத்தனை பெரிய மாற்றம்! இதுவரை பெற்றுக்கொள்ளுகிற இடத்தில் இருந்தவன், தேவனுக்குத் தன்னை அர்ப்பணித்து, பரிசுத்தத்திற்கு முதலிடம் கொடுத்தபோது, அது அவனது வாழ்க்கையையே முற்றிலும் மாற்றிவிட்டது. ஆதி. 48:15-ல் யாக்கோபு யோசேப்பை ஆசீர்வதிக்கிறான், பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறான். எனக்கு ஆசீர்வாதம் வேண்டும் என்று கூறினவன், இப்பொழுது மற்றவர்களை ஆசீர்வதிக்கிறான்; ஆசீர்வாதத்தின் ஊற்றாகவும் மாறுகிறான். பிரியமானவர்களே! நமது அர்ப்பணம் சரியாக இருந்தால், ஒருக்காலும் நாம் நமக்கென்று வாழமாட்டோம். சபையே நீயும் நானும் ஆசீர்வாதத்திற்கென்றே அழைக்கப்பட்டிருக்கிறோம். தீமைக்குத் தீமையையும், உதாசீனத்திற்கு உதாசினத்தையும் சரிகட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அறிந்து, ஆசீர்வதியுங்கள் (1 பேதுரு 3:9). நாம் ஆசீர்வதிக்கப்படுவதோடு, மற்றவர்களையும் ஆசீர்வதிக்கும்படியாகவே தேவன் நம்மைத் தெரிந்துகொண்டார்.  

'நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்" (மத். 5:44) என்பதுதானே இயேசு கிறிஸ்துவின் போதனை. பிரியமானவர்களே! நாம் அழைக்கப்பட்ட அழைப்பு மற்றவர்களை ஆசீர்வாதமாக்குவதற்குத்தான். இந்திய நாட்டிற்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவந்தது கிறிஸ்தவ மிஷினரிமார்களே என்பதை ஒருவரும் மறுக்க முடியாது. நமது இந்தியாவில் முதன் முதல் ரயிலுக்காகப் பாதை அமைத்தபோது, 'வெள்ளைக்காரன் பெரிய பெரிய கம்பியைப் போட்டு நம்மை வெளிநாட்டுக்குக் கொண்டு போகப்போகிறான்" என்றுதான் அப்போது இந்தியாவிலிருந்த மக்கள் கூறினார்கள். இந்தியாவிற்கு முதன் முதலில் அச்சு இயந்திரத்தைக் கொண்டுவந்தது யார்? கிறிஸ்தவ மிஷனரியான வில்லியம் கேரியே! அதற்கான இருநூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டது; அப்போதையக் குடியரசுத் தலைவர் எஸ்.டி. சர்மா அவர்கள் கொடுத்த உரையை அறிந்தால் இது விளங்கும். 

உடன்கட்டை (சதி) ஏறுதல் அதிகமாக இருந்த நாட்களில், உடன்கட்டை ஏறுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது மிஷனரிமாரே! மருத்துவத்தைக் கொண்டுவந்தது யார்? கிறிஸ்தவ மிஷனரிமாரே! ஏனென்றால், அவர்கள் போகிற இடத்திலெல்லாம் அவர்கள் ஆசீர்வாதத்தைக் கொண்டுபோய்தான் ஆகவேண்டும்! சாலை, பாதை, கூட இல்லாத ஆப்பிரிக்க கண்டத்துக்கு முதன்முதலாக சென்றவர் மிஷனரி டேவிட் லிவிங்ஸ்டன். ஒரு டாக்டராக அங்கே சென்று, தன் முழு முயற்சியோடும் பெலத்தோடும் காடுகளிலும் மற்றும் மலைகளிலும் நடந்து திரிந்தார். விடியற்காலத்திலே சூரியன் உதிக்கும் முன் தேவனைத் தரிசிக்கும் அந்த பக்தன், ஒவ்வொரு இடத்திற்கும் சென்று ஆப்பிரிக்கக் கண்டத்தின் அனைத்துக் காரியங்களையும் உலகிற்கு எடுத்துக் காட்டினது மாத்திரமல்ல, இன்றைக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தை முன்னுக்குக் கொண்டுவந்ததற்கும் மூல காரணமானவர். ஆடை இல்லாத, அரை மனிதனாக நின்றவனுக்கு ஆடை கொடுத்து நாகரீகம் சொல்லிக்கொடுத்தது யார்? கிறிஸ்தவ மிஷனரிகளே! 

சபையே இன்றைக்கு நீ பூமிக்கு உப்பாக இருக்கிறாய்! உப்பு பூமியிலிருந்து முற்றிலும் எடுக்கப்பட்டுவிட்டால் பூமி ஒன்றுக்கும் உதவாது! வெளியே கொட்டப்படுவதுதான் அதன் நிலையாயிருக்கும். ஆகையினால்தான், ஆண்டவர் வரும்போது அவருடையவர்கள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்! பூமியிலே பெரும் உபத்திரவம் உண்டாகும்! என்று வேதத்தில் வாசிக்கின்றோம். பிரியமானவர்களே! இந்நாட்டிற்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவர ஒரே ஒரு வழிதான் உண்டு; அது கிறிஸ்துவை அறிந்த கிறிஸ்தவப் பிள்ளைகளே! மற்றவர்களை ஆசீர்வதிப்பதற்காகவே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். நம் நிமித்தமாகத்தான் நமது நாட்டை அவர் ஆசீர்வதிக்கவேண்டும். ஆகவேதான், 'நீர் காட்டுகிற எந்த இடத்திற்கும் செல்ல தயார்" என்று, வசதி வாய்ப்புகள் இல்லாத இடத்திற்கும் புறப்பட்டுச் சென்று, ஆசீர்வாதத்தின் காரணர்களாக மாறினார்கள் மிஷனரிகள்; இதை ஒரு மனிதனும் மறுக்க இயலாது. நம் ஒவ்வொருவரையும் இத்தகைய ஆசீர்வாதத்தின் ஊற்றாக வரும் நாட்களில் தேவன் மாற்றுவாராக! 

ஒருமுறை, பதவுலா என்கிற இடத்திற்கு எனது மனைவியும் மற்றும் இரண்டு சகோதரிகளும் ஊழியத்திற்காகச் சென்றிருந்தபோது, அங்கே மூன்று வீடுகளில் இருந்த குறி சொல்லுகிற சகோதரிகள் வசனத்தை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டார்கள். ஒரு மாதத்தில் அப்பகுதியில் பெரும் காலரா வியாதி வந்தது; அநேகர் மரித்தார்கள்; ஒரே நாளில் ஐந்து பேர் மரித்தார்கள். ஒருபக்கம் சிலர் சபையிலே உபவாசித்து ஜெபித்துக்கொண்டிருந்தார்கள்; மறுபக்கமோ, ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டு, ஏன் இந்த வியாதி வந்தது என்று பேசிக்கொண்டிருந்தார்கள். இயேசுவை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினரே இதற்குக் காரணம்; எனவே, அவர்களை ஊரை விட்டே விரட்டவேண்டும் என்று கூறினார் அங்கிருந்தவர்களில் ஒருவர். மற்றொருவரோ, அவர்கள் இந்த கிராமத்திற்காக ஜெபிக்கிறார்கள், அவர்கள் வீட்டில் இந்த வியாதி வரவில்லையே என்றார். இந்நிலையில், உபவாசித்து ஜெபித்த மக்களை அவர்கள் பார்க்கவந்தபோது, அவர்கள், 'ஆண்டவரே எங்கள் கிராமத்தை அழிவிலிருந்து காப்பாற்றும்" என்று ஆண்டவரிடத்தில் அவர்கள் வேண்டிக்கொண்டிருப்பதைக் கேட்டார்கள்; அன்றே அந்த வியாதி நின்றது. அருகிலுள்ள மூன்று கிராமத்தினரும் இயேசுவை ஏற்றுக்கொண்டனர். சிறிய கூட்டம்தான், ஆனால், அவர்கள் திறப்பில் நின்று ஜெபித்தனர். வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த வீரமுள்ள திருநாமமது நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே. 

பிரியமானவர்களே! நாம் தேசத்திற்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவராவிட்டால் வேறு யாராலும் முடியாது! யாக்கோபைப் போல நமது வாழ்விலும் ஒரு பூரண மாறுதல் உருவாகி, நான் ஆசீர்வதிக்கப்படவேண்டும் என்று கூறுவதைவிட என்னையே ஆசீர்வாதத்தின் பாத்திரமாக மாற்றும் என்று சொல்லுவோமென்றால், நம்முடைய வாழ்க்கையிலும் நம்மைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையிலும் பெரும் மாற்றம் உண்டாகும், தேசம் ஆசீர்வதிக்கப்படும், ஜனங்கள் சந்திக்கப்படுவார்கள். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதிக்கிறான், தேசத்தை ஆசீர்வதிக்கிறான், யோசேப்பையும் தனது 12 கோத்திரங்களையும் ஆசீர்வதிக்கிறான். கிறிஸ்துவுக்குள் நாம் ஆசீர்வதிக்கப்படவேண்டும் என்பதற்காகவே கிறிஸ்துவின் மூலமாக தேவன் சபையை ஆசீர்வதிக்கிறார்.  

யோசேப்பு கிறிஸ்துவுக்கு முன் அடையாளமானவன், அவனுடைய வாழ்க்கையை நாம் கவனித்துப் பார்த்தால், கிறிஸ்துவுக்கு முன் அடையாளமான காரியங்கள் நிகழ்ந்ததை நாம் அறிந்துகொள்ள முடியும். அதுமாத்திரமல்ல, பன்னிரெண்டு கோத்திரங்களையும் குறித்து தெளிவாகவும் திட்டமாகவும் கடைசி நாட்களில் வருவதை அறிவிக்கும் தீர்க்கதரிசியாகவும் அவன் மாறிவிட்டான்; அல்லேலுயா! தேவனை தனக்காக மாத்திரமல்ல. தனது குடும்பத்திற்காகவும் மாற்றிவிட்டான்; தேவனுக்கென்று எதையும் செய்வதற்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டான். ஆண்டவருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தவுடன் தேசங்களைக் குறித்து, ஜனங்களைக் குறித்து, தன் பிள்ளைகளைக் குறித்து, கடைசி நாட்களைக் குறித்தும் அவன் வெளிப்பாட்டினைப் பெறுகிறான்; அல்லேலூயா! அவனுடைய கண்கள் திறக்கப்படுகின்றன, வெகு தூரத்திலிருக்கிறவர்களையும் தெளிவாகப் பார்க்கும் கண்களை உடையவனாக மாறுகிறான் அவன். அருமையானவர்களே, 'ஆண்டவரே! தீர்க்கதரிசன வரத்தை எனக்குத் தாரும்" என்று அநேகர் ஜெபிப்பது உண்டு. ஆனால், 'முழுவதும் என் ஆண்டவருக்கே" 'பரிசுத்தத்திற்கே முதலிடம்" 'எனக்கென்று வாழ்ந்ததெல்லாம் போதும்; இனி வாழ்வது என் ஆண்டவருக்கே" என்று நாம் சொல்லுவோமென்றால், நமது கண்கள் திறக்கப்பட்டு, நம்முடைய வார்த்தைகளும் தீர்க்கதரிசனங்களாக மாறிவிடும். தேசங்களுக்காகக் கண்ணீர் விடுவோம், ஜாதிகளுக்காகக் கண்ணீர் விடுவோம், ஆத்துமாக்களை எப்படியாகிலும் தரவேண்டும் என்று தேவசமூகத்தில் போராடி ஜெபிப்போம்; நம்முடைய வார்த்தைகளும் தீர்க்கதரிசனங்களாக மாறும். 'கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்" (ஆமோஸ் 3:7) என்று எழுதப்பட்டிருக்கின்றதே; அப்படியிருக்க, இந்த தேசத்தைக் குறித்த உம்முடைய தீர்மானங்கள் என்ன? என்று கேட்போம். 'தீர்க்கதரிசன வரம் வேண்டும்" என்று கேட்பதைக் காட்டிலும், நாம் தேசத்திற்காகக் கண்ணீர் விட்டு அழுவோமென்றால், நாம் சிறுபிள்ளை என்று நம்மைச் சொன்னாலும் அவர் நம்மைத் தூக்கியெடுத்து 'இதோ தேசத்திற்கு உன்னை தீர்க்கதரிசியாக மாற்றுகிறேன்" என்று சொல்லுவார். இந்த இரகசியம் இன்று அநேகருக்குப் புரிவதில்லை.  யாக்கோபு ஒரு சாதாரண மேய்ப்பன்தான், அவனது சொப்பனங்களெல்லாம் சாதாரணமானவைகள்தான். ஆனால், ஒரு நாளிலே, தனது பன்னிரெண்டு குமாரர்களையும் அழைத்து, 'கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன்" என்று ஒவ்வொருவருக்கும் சொன்னபோது, யூதாவைக் குறித்து, 'சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்" (ஆதி. 49:10) என்று தீர்க்கதரிசனமாகக் கூறுகின்றான். 

இறுதியாக, யாக்கோபு மரித்தபோது, எகிப்திலே எழுபது நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. உலகத்தில் எந்த மனிதனுக்கும் இத்தனை நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படவில்லை; எங்கு அருவருத்தார்களோ! அங்கு 70 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. டேவிட் லிவிங்ஸ்டன் இங்கிலாந்தின் பெரிய பல்கலைக்கழகத்தில் பயின்றவர். ஒரு மிஷனரி அறைகூவல் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டபோது, அங்கு சொல்லப்பட்ட ஆப்பிரிக்க மக்களின் நிலை அவரது இதயத்தை உருக்கிற்று. ஆப்பிரிக்காவிற்கு மிஷனரியாகச் சென்றார். பெரிய பெரிய கொசுக்கள் மத்தியில், வசதிகள் இல்லாத இடத்தில் முழங்காலில் நின்று ஜெபித்து, காடுகளிலும் மலையிலும் ஊழியம் செய்தார்.  ஒரு நாளில் ஜெபிக்கும்போதே இவ்வுலகினை விட்டுப் பிரிந்துசென்றார். அப்போது, அங்குள்ள மக்கள், எங்கள் நாட்டுக்காக உயிர் நீத்த இவரை எங்கள் நாட்டில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், அவரது இதயத்தை மட்டும் ஆப்பிரிக்காவில் அடக்கம் செய்துவிட்டு, உடலை இங்கிலாந்திற்குக் கொண்டு சென்று ராஜமரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது. கல்லை தலையணையாக வைத்திருந்தது யாக்கோபின் ஆரம்பம்; ஆனால், எல்லா ராஜாக்களைக் காட்டிலும் எழுபது நாட்கள் அரச மரியாதையோடு அவனது அடக்கம் நடந்தது! பிரியமானவர்களே! நம்முடைய முடிவைக் குறித்து என்ன? சம்பூரணமாய் இருக்கவேண்டுமென்றால், 'இனி நம்முடைய வாழ்க்கையின் ஆசீர்வாதத்தைக் கூட்டினது போதும்; என்னையே ஆசீர்வாதத்தின் வாய்க்காலாக மாற்றும்" என்று ஆண்டவரிடம் கேட்போம். இந்த உலகத்திற்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவருகிறவர்களாக, மற்றும் அறியாத, சாபங்கள் மிகுந்த, தீட்டு மிகுந்த, அந்தகாரம் மிகுந்த இடங்களுக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும் ஊற்றாக நாம் மாற்றுவதற்கு நம்மை அவர் கரத்தில் ஒப்படைப்போம். ஆசீர்வாதத்தை அற்புதமாக மாற்ற அனைத்தும் கிறிஸ்துவுக்கே என்று நம்மை அர்ப்பணிப்போம்.

அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற 
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா 
நான் சிறுகவும் நீர் பெருகவும் 
தீபத்தின் திரியாய் எடுத்தாற் கொள்ளும் 
கல்வாரியின் சிநேகம் கரைத்திடும் என்றும் 
கல்மணம் மாற்றி கரைந்தோடச் செய்யும் 
 
                                                                                அன்பரின் அறுவடைப் பணியில்
                                                        அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

Jan 2026

 


கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே, 

நம் காலங்களைத் தன் கையில் வைத்திருப்பவரும் (சங். 31:15), சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாகச் செய்கிறவருமாகிய ஆண்டவருடைய ஒப்பற்ற நாமத்தில் புத்தாண்டு வாழ்த்துகள் (பிர. 3:11). அவரை பின்பற்றிச் செல்வதற்கு ஒப்புக்கொடுத்திருக்கிற நம்மை அவரே நடத்திச்செல்வார் (ஏசா. 58:11). சவால்களை மேற்கொள்ள அதுவே சாலச் சிறந்தது என்பது நாமறிந்ததே. ஆகையினால், குழப்பங்களையும், ஐயங்களையும், அச்சங்களையும் தவிர்ப்போம்; ஜெயகிறிஸ்துவாக அவர் நம்முன் செல்ல ஆயத்தமல்லவா! 

     குருடரைக்கூட அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குகிறவர் (ஏசா. 42:16). 

         நம்முடைய நம்பிக்கை நம் மீதிலோ (2 கொரி. 1:9) அல்லது நம்முடைய சொந்த பெலத்தின் மேலோ (சங். 20:7), ஐசுவரியத்தின் மேலோ (1 தீமோ. 6:17) இல்லாமல், ஜீவனுள்ள தேவன் மேலேயே எப்பொழுதும் இருப்பதாக. அவர் நமக்கென்று உண்டாக்கிவைத்திருக்கிறவைகள் நம்முடைய நினைவுகளைக் காட்டிலும் மேலானவை (ஏசா. 55:9). 

            உலகத்திற்கு வெளிச்சமாகக் கொடுக்கப்பட்ட தேவ மக்களால் நிரம்பிய சபை, இன்று அநேக நேரங்களில் மங்கி எரிகிறது; தேவ தயவுதான் அதனை அணைந்துபோகாமல் காத்துவருகிறது. இந்த வெளிச்சம் மங்கிப்போனதற்கான காரணங்களை உற்று நோக்குங்கால் பல உண்மைகள் தெரியவருவதோடு அதனை மீண்டும் ஒளி பெறச் செய்யவேண்டிய காரணங்களும் நமக்கு நன்றாக விளங்கக்கூடும். கொழுந்துவிட்டு எரியச் செய்கிற ஆவியானவர் சபையில் கிரியை செய்யக்கூடாதபடி, வேறு ஆவிகள் கிரியை செய்ய இடம் கொடுக்கப்படும்போது, அது ஆவியின் கிரியைகளையும், கிருபைகளையும் அழித்துப்போட வல்லதாக இருக்கிறது என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. 

  எனவே, தேவப் பிள்ளைகள் இன்றைக்கு ஆவிதனை பகுத்து அறியத்தக்கவர்களாகி, ஜாக்கிரதையாய் சபையின் ஒளியை அணைக்க வல்ல சக்திகளை அடையாளம் கண்டு, அதில் அகப்பட்டுக்கொண்டோரை விடுவிக்கவேண்டிய அவசியம் அனைவருக்கும் உண்டு; தேவ ஒத்தாசையோடு செயல்படுங்கள்; ஜெபித்து முன்னேறுங்கள்; மற்றவர்களுக்குக் கற்றுத்தாருங்கள். 

        சபையில் நடமாடும் பொல்லாத ஆவிதனையோ, அசுத்த ஆவிதனையோ அடையாளம் கண்டுகொள்வது அநேக வேளைகளில் எளிது. ஏனெனில், அது பொல்லாப்பை உண்டுபண்ணி விரோதங்களை எழுப்பிவிடும் (நியா 9:23), பிரிவினை தலைவிரித்து ஆடும், கோள் சொல்லுதலும், புறங்கூறுதலும் எல்லா இடங்களிலும் செழித்தோங்கும் (நீதி 17:9, 11:13). கொலைவெறியும் சண்டையும், சச்சரவும், ஒத்துப்போகாமையும், எதற்கெடுத்தாலும் எதிர்த்து நிற்கும் சுபாவமும் தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படும். ஒருவர் முகத்தை மற்றவர் பார்ப்பதனையே பாவம் என்ற உணர்வைத் தூண்டிவிட்டு, இல்லாத பொல்லாதவைகளை ஏவிவிட்டு பகையென்னும் தீயை எரியச்செய்து அது அணையாதபடிக்கு எண்ணெய் ஊற்றிக்கொண்டேயிருக்கும். எனவே, அப்படிப்பட்ட ஆவி சபையில் கிரியை செய்யும்போது ஆண்டவரின் பேரில் அன்பு கொண்டவரும், அவருடைய சரீரமான சபையை நேசிப்போரும், தேவ இராஜ்யத்தினைக் குறித்து அக்கறை கொண்டோரும் இதனை எளிதாகக் கண்டுகொள்வார்கள். 

    அசுத்த ஆவியின் சுபாவங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்ல. நிர்வாணமாக்குதல், சுத்தமாக இருக்கவிடாமல் கட்டிப்போடுதல், தன்னையும் மற்றவர்களையும் காயப்படுத்துதல், அசுத்தத்தை நடப்பிப்பதற்கு அசுசிப்படாதிருத்தல், கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசுதல், மற்றவர்களின் மனதில் அசுத்த எண்ணங்களைத் தூண்டிவிடும் காரியங்களைப் பகிர்ந்துகொள்ளுதல், மற்றவர்கள் அசுத்தத்தில் விழும்போது ஆனந்தம் கொண்டு 'சபா~;" போடுதல், பாவத்தை விட்டு ஓயாத அவயவங்களாக தன்னுடைய அவயவங்களை (கண், காது, நாக்கு போன்றவை) மாற்றிக்கொள்ளுதல் போன்றவை இந்த அசுத்த ஆவியினை அடையாளம் கண்டுகொள்ளப் போதுமானவை.

        ஆனால், வஞ்சிக்கிற ஆவியின் நடமாட்டத்தையோ, செயல்பாடுகளையோ புரிந்துகொள்வது ஆவிக்குரிய பழக்கமில்லாதவர்களுக்கோ, தேவனோடு நெருங்கி நடக்காதவர்களுக்கோ, தேவப் பிரசன்னத்தை நாடுவதற்குத் தன்னை விட்டுக்கொடுக்காதவர்களுக்கோ எளிதல்ல. 

  உலகத்தின் ஆவியும் இன்று சபைகளை நிரப்பிவருகிறது. அது பிதாவினிடத்திலிருந்து வரவில்லை; ஆகையால், (1யோ 2:15,16) சில வேளைகளில் அதன் இழுப்பு அதிகமாக இருந்தபோதிலும் எதிர் நீச்சல் அடிக்கக் கற்றுக்கொண்டோருக்கு அதனை மேற்கொள்வது எளிதானதே. உலகின் வழியில் சென்றுதான் உலக மக்களை கிறிஸ்துவுக்குள் கொண்டுவரமுடியும் என்ற வாதம் உலக இன்பங்களை அனுபவிக்கத் துடிக்க முயல்வோரின் சாக்குப் போக்கே. இயேசுவும் 'நான் உலகத்தான் அல்லாததுபோல நீங்களும் உலகத்தார்கள் அல்ல" (யோ 17:16). உலகம் உங்களைப் பகைக்கிறதற்கு முன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால் உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும் (யோ 16:1, 19) என்று கூறி தம்முடைய நிலையையும், நம்முடைய நிலையையும் ஆணித்தரமாகக் கூறி தெளிவுபடுத்தியதோடு நம்மைக் காக்க உலகத்தின் ஆவியைத் தராமல் தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியையே தந்தருளியிருக்கிறார் (1 கொரி 2:12). பவுலும் இதனைக் காண்பிக்க எண்ணி, நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம் (1 கொரி 4:9) என்றதோடு நில்லாமல், 'அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்" (கலா 6:14) என்று கூறுகிறார். எனவே உலகத்தின் ஆவி எத்தனைதான் ஆவிக்குரிய வேடம் அணிந்தாலும் அது பட்சிக்கிற ஓநாய் ஆட்டுத் தோலைப் போர்த்தியதற்குச் சமானம். அதனுடைய பசியினையும் ஆகாரத்தையும் கவனித்தாலே அது ஆட்டுக்குட்டியா? ஓநாயா? என்பது விளங்கிவிடும். அது புல் போன்ற மென்மையானவைகளை வாஞ்சிக்காமல் மாம்சத்தையே தேடும் அல்லவா? அது இரவிலேயோ அல்லது மற்றவர்கள் கவனிக்காமல் இருக்கும்போதுதானே கிரியை செய்யும். அது மந்தையின் பெருக்கத்தினை அல்ல அழிவையேதான் நாடும். அப்படியே மந்தை பெருகினாலும் அதின் இரை அந்த மந்தையின் இரத்தத்தினை உறிஞ்சிக் குடிப்பதில் தான் கவனமாக இருக்கும். அதனுடைய பற்களும் கோரமானவைகள் அல்லவா. 

       அது சில நேரங்களில் நன்றாக நடந்து நீதியின் வழியில் நடந்தோரையும் பற்றிக்கொள்ளும் (அப் 20:29-30). இதற்கு இரையாகிப் போனவர்களின் எண்ணிக்கைக்கு அளவில்லை. இப்பிரபஞ்சத்திற்கு ஒத்த வேடம் தரிக்காமல் இருக்க புதிதாக்கப்பட்ட மனமும் மறுரூபமாகவேண்டும் என்ற வாஞ்சையும்தான் காரணம். தேவன் அதனை உங்களுக்கு அருளிச்செய்வாராக. 

   அன்று ஏதேன் தோட்டத்தில் இந்த வஞ்சக ஆவியின் செயல்பாடு வெளிப்பட்டது. 'ஆகிலும் சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல..." (2 கொரி 11:3). கடைசி காலத்தில் இதனுடைய நடப்புகள் மிகுதியாகும் என்பதனையும் வேதம் சொல்லுகிறது. 'ஆவியானவர் வெளிப்படையாகச் சொல்லுகிறபடி பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்டவருடைய மாயத்தினால் சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து விசுவாசத்தை விட்டு விலகிப் போவார்கள்" (1 தீமோ 4:1). ஏனென்றால், இரட்சிக்கப்படத்தக்கதாய் சத்தியத்தின் மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால்... அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்;தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார் (2 தெச 2:10,12). அது அந்திக்கிறிஸ்துவின் வருகைக்குச் சாதகமாக சகல வல்லமைகளோடும் அடையாளங்களோடும் அற்புதங்களோடும் கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும்" (2 தெச 2:9,10).

    அந்திக்கிறிஸ்துவுக்கு உறுதுணையாக வரப்போகும் கள்ளத் தீர்க்கதரிசியும் பூமியின் குடிகளை மோசம்போக்குவதையே குறியாகக் கொண்டு செயல்படும்; அதற்காக அற்புதங்களை நடப்பிக்கும் (வெளி 13:13,14). அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள் ராஜாக்களையும் வஞ்சிக்கும் வல்லமை பெற்றவை, அவை குறிப்பாக வாயிலிருந்து புறப்படுபவைகளே (வெளி 16:13,14).

     எப்படி பொய்யுரையாத தேவன் பொய்யை விசுவாசிக்கத்தக்க வஞ்சகத்தை அனுப்புவார் (2 தெச 2:12) என்பது விளங்கவில்லையே என அங்கலாய்ப்போருக்காக தேவன் பழைய ஏற்பாட்டில் ஒரு சம்பவத்தை எழுதிவைத்துள்ளார். தேவன் அனுமதிக்கிறார் என்பது தெளிவு. 

     1 இராஜா 22-ம் அதிகாரத்தில் ஆகாபின் மரணத்திற்கு காரணமான யுத்தத்தையும் தீர்க்கதரிசனங்களையும் உற்று நோக்குங்கால் இதனைப் புரிந்துகொள்வது எளிது. விக்கிரக ஆராதனைக்குத் தன்னை விற்றுப்போட்டு, தேவனுக்கு விரோதமாக ஜனங்களைத் திரும்பப் பண்ணின அவனுடைய முடிவை தேவன் தீர்மானித்து அதனை நிறைவேற்றுவதற்கு அவனாகத் தேடிப்போன ஓர் யுத்தத்தின் செய்தி இந்த அதிகாரத்தை நிரப்புகிறது. 

     அதிலே வஞ்சக ஆவி எப்படி கிரியை செய்கிறது என்பதனை உண்மை தீர்க்கதரிசியாகிய மிகாயா விளக்குகிறான் வச 19-28 வரை படித்துப்பாருங்கள். ஆகாபை வழி தடுமாறச் செய்ய உதவினவர்கள் கள்ளத் தீர்க்கதரிசிகளே. ஒரு ஆவி (பொய்யின் ஆவி) 400 பேர் மூலமாக செயல்படமுடியும் என்பதும், அதுவும் தாங்கள்தான் ஆவியானவருக்குச் சொந்தக்காரர்கள் மற்றவர்களிடம் கிரியை நடப்பிப்பதற்கு தங்களைக் கேட்டுக்கொண்டுதான் அவர் செயல்படுவார் என்பது போல பேசும் கள்ளத் தீர்க்கதரிசிகளின் தலைவன் சிதேக்கியாவும் (வச. 24) இன்றைய சூழ்நிலைக்கு எத்தனையாய்ப் பொருந்துகின்றனர். 

     சாத்தான் தான் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமானவன் என்பதும், தன் சொந்தத்தில் எடுத்துப்பேசுகிறான் என்பதும் நாம் அறிந்ததே (யோவா 8:44) அவன் விட்டுக்கொடுக்கும் எவனையும் எளிதான நிரப்பிவிடுகிறான் என்பது ஆதி விசுவாசிகளான அனனியா சப்பீராளுடைய வாழ்வில் நடைபெற்றதும் நமக்குத் தெரிந்ததே (அப் 5:1-3). தனக்குப் பெயர் வரவேண்டும், தன்னை மற்றவர்கள் பாராட்டவேண்டும் என்பதனையே குறிக்கோளாகக் கொண்டு வாழும் எவரும் சத்துருவுக்கு தன்னை விட்டுக்கொடுத்து வாழ்வது வெட்டவெளிச்சம். 

     'வஞ்சகம்" என்பதனை 'பொல்லாப்பு செய்ய இணங்கப் பண்ணுதல்" எனவும் கூறலாம். அதனை ஆங்கிலத்தில் ‘enticing’ என்கிறோம். நியமிக்கப்படடாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம் போக்கி ‘enticing’ அவளோடே சயனித்தால்... என்று கூறும் வேதம் (யாத் 22:16) ஒருவளின் கற்பை சூரையாடுவதனை 'வஞ்சகமான செய்கை" என்கிறது. இன்று அநேக தேவ மக்கள் ‘தீட்டுப்படக் காரணமாக வாழும், பேசும், தீர்க்கதரிசனங்களை கூறும் ஊழியங்களும், ஊழியர்களும் எந்த விதத்திலும் இவர்களுக்குக் குறைந்தவர்கள் அல்லவே; அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். 

     உபா 13:1-10 வசனங்களில், உன்னை ஜீவ தேவனை விட்டு திசை திருப்பும் (வச 10) எந்த மனிதனும் சாக வேண்டும் என்று கடுமையாக உரைக்கும் ஆண்டவர் ‘enticing’ என்ற வார்த்தையே உபயோகிக்கிறார். கூடவே, தண்டிக்கபடவேண்டியதினை வெளிப்படுத்துகிறார். ஒருவேளை இன்றைய புதிய ஏற்பாட்டு யுகத்தில் நாம் கொலை செய்ய அல்ல, அவர்களை ஓரம் கட்டுவதற்குக் கற்றிருக்கவேண்டும். அவர்களை ஒதுக்கிவைப்பதற்குப் பதிலாக மாலை போட்டு வரவேற்று, வாழ்த்துப்பாடி புகழாரம் சூட்டி அவர்களை நீதிமான்களாகக் காண்பிக்க சபை உந்தப்படுமாயின் வெளிச்சம் மங்கத்தானே செய்யும்.

     'துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவன்... கர்த்தருக்கு அருவருப்பானவன்" என்று வேதம் சொல்லுகிறதே (நீதி 17:15). அருவருப்பு உள்ள இடத்தில் தேவன் அசைவாட முடியாதே ஒத்துக்கொள்வோம்; சபையின் பிரகாசம் பெருக பாடுபடுவோம். 'உன் ஒளி வந்தது கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. உன் வெளிச்சத்தினிடத்திற்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியிடத்திற்கு இராஜாக்களும் நடந்து வருவார்கள். கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாகத் திரும்பும். ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்திற்கு வரும் (ஏசா 60:1,3,5)." சபை பெருகட்டும், தேசம் அசையட்டும்;; வெற்றி வேந்தர் இயேசு மங்கி எரிகிற திரியை அணையாதவர் மாத்திரம் அல்ல பொங்கி எரிய எண்ணெய் ஊற்றுபவர். எழுந்து பிரகாசியுங்கள், மற்றவர்களையும் எரியப்பண்ணுங்கள். சபைகள் எரிந்து பிரகாசிக்கட்டும், தேசத்தில் இருள் நீங்கி வெளிச்சம் உதிக்கட்டும்; செயல்படுவோம்!. 

                                                                     அன்பரின் அறுவடைப் பணியில்                                                                                         அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


Dec 2025

 கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே, 

உலகம் உண்டாகிறதற்கு முன்னே பிதாவோடு மகிமையிலிருந்தவரும் (யோவான் 17:5), அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தவரும் (நீதி. 8:30),  முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தவரும் (1யோவான் 4:19), நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன் (யோவான் 15:16) என்று நம்மேலிருக்கும் பாசத்தையும் நேசத்தையும் வெளிப்படுத்தினவரும், இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது (சங். 40:7) என்ற தாவீதின் வார்த்தைகளின்படி பிதாவின் சித்தம் செய்ய இப்பூமியில் மனிதனாக அவதரித்தவரும், நமக்காக தன்னையே தந்தவருமாகிய உலக இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். ஆளுபவர்கள் ஏரோதுவாயிருந்தாலும், எவராயிருந்தாலும், அவர்களைக் குறித்து பயப்படாமல், பாவத்திலிருக்கும் மனுக்குலத்தை மீட்கும் பணியினை மட்டுமே தனது மனதில் கொண்டு, இத்தரணியில் தன் பணியினைத் தொடங்கிய இயேசு கிறிஸ்துவின் பணியினையே தொடர்ந்து செய்துவரும் அவருடைய சீடர்கள் நாம் என்பதில் இன்றுமென்றும் ஆனந்தமே!! பயங்களோ அல்லது பாடுகளோ இப்பரலோகப் பணியிலிருந்து ஒருக்காலும் நம்மைப் பிரித்துவிடாதபடி கர்த்தர் காப்பாராக! 

பிரியமானவர்களே! பாவத்தின் அடிமைத்தனத்தில் சிக்குண்டு, பிதாவை விட்டுப் பிரிந்து, பரலோக வாழ்க்கையினை இழந்து நின்ற மனிதர்களாகிய நம்மை மீட்டெடுக்கும்படியாக, தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பி, அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்து (யோவான் 1:12), அவருடைய பிள்ளைகளென்று அழைக்கும் 'பிதாவின் அன்பு எவ்வளவு பெரிதானது" (1யோவான் 3:1). இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை பண்டிகையாகக் கொண்டாடுவோர், தாங்கள் அதைக் கொண்டாடுவதைக் காட்டிலும், தங்களுடைய மறுபிறப்பு பரலோகத்தில் கொண்டாடப்பட்டதா? என்ற கேள்விக்கு விடைகாண விழைவது முக்கியமானது. மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோ~ம் உண்டாயிருக்கும் (லூக். 15:7) என்று வாசிக்கின்றோமே, நம்முடைய வாழ்க்கையின் இந்த மகிழ்ச்சியை பரலோகம் அனுபவித்திருக்குமா? அப்படியில்லையென்றால், பண்டிகை நாட்களில் காணப்படும் நம்முடைய கொண்டாட்டங்கள் மற்றும் கோஷங்கள் அனைத்தும் பரலோகத்தின் பார்வையில் வெற்று வேஷமாகவே காட்சியளிக்கும்; வெடிகளுக்காகச் செலவழித்தாலும் பரலோகத்தின் பார்வையிலோ அது வேடிக்கையாகத்தான் காட்சியளிக்கும்; விலைமதிப்பான புத்தாடைகளை அணிந்திருந்தாலும், வெளிப்புறத் தோற்றத்தில் பிறர் கண்முன் பொலிவுறத் தோற்றமளித்தாலும், பரலோகத்தின் பார்வையிலோ இரட்சிப்பின் வஸ்திரமற்ற நிர்வாணிகளாகவே நாம் நின்றுகொண்டிருப்போம்.  

பண்டிகைகளானாலும், ஆராதனைகளானாலும், ஐக்கியமானாலும், ஆடல் பாடல்களானாலும், கூடுகைகளானாலும், கொண்டாட்டங்களானாலும், வேறெந்த பிற நிகழ்ச்சிகளானாலும், நம்மை முன்னிறுத்துகின்றோமா  அல்லது ஆண்டவரை அடையாளப்படுத்த முயற்சிக்கின்றோமா? என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டியது மிக மிக அவசியம். ஆவிக்குரிய வாழ்க்கையில் மேலோட்டமாய் இருக்கவேண்டியவைகளெல்லாம் மாம்சீக வாழ்க்கையில் மேலோங்கி நிற்க, ஆண்டவரும் மற்றும் அவரது வார்த்தைகளும் அடிமட்டத்திற்குத் தள்ளப்படுமென்றால், அவ்விடத்தை விட்டு நாம் அகன்று அப்புறம் சென்றுவிடுவதே ஆண்டவருக்குப் பிரியமானவர்களாகநம்மை மாற்றும் செயலாயிருக்கும். நம்மையும், நம்முடைய வீட்டையும் மற்றும் ஆலயத்தையும் அலங்காரப்படுத்தி மாம்சீகக் கண்களினால் மகிழ்வதல்ல; மாறாக, அகத்திலிருக்கும் ஆண்டவரோடு களிகூருவதே உண்மையான மகிழ்ச்சியை நம்முடைய வாழ்க்கையில் கொண்டுவரும்.    

மனு உருவில் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்தபோதிலும், மனிதர்களில் உயர்ந்தவர் அவர்; 'என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?" (யோவான் 8:46) என்று தனது பரிசுத்தத்தைப் பிறர் கேட்கப் பிரகடனப்படுத்தினவர். 'இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை" (யோவான் 14:30) என்று உறுதியாக உரக்கச் சொன்னவர். 'நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" (யோவான் 14:6) என்றும், 'நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்" (யோவான் 10:9) என்றும் வழிகளுள் ஒன்றாக அல்ல  'ஒரே வழியாக" ஜனங்களுக்குத் தன்னை அடையாளப்படுத்தினவர். 'ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும்" என்று பிலிப்பு கேட்டபோது, 'பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?" (யோவா 14:8,9) என்றும், 'நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்" (யோவான் 10:30) என்றும், 'என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை" (யோவான் 8:29) என்றும் தனக்கும் பிதாவுக்கும் இடையிலான பிரிக்க இயலாத உறவினை நமக்கும் பாடமாக்கத்தக்கதாக கூறினவர். 'எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான்" (யோவான் 1:15) என்று யோவான் ஸ்நானகனாலும் அறிமுகப்படுத்தப்பட்டவர். இப்படிப்பட்டவருக்கு நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், நம்மிடத்திலிருந்து பிறருக்கு வெளிப்படும் வாழ்வியல் முறைகளிலும் இடங்கொடாவிட்டால், ஆடம்பரமாயிருப்பவைகளும் மற்றும் அலங்காரமாயிருக்கும் அத்தனையும் அவர் பார்வையில் ஆகாததாகவே மாறிப்போகும். 

பிரியமானவர்களே! ஆவிக்குரியவர்களாகிய நம்முடைய கண்கள், எப்போதும் ஆண்டவரையே நோக்கியிருக்கவேண்டும், எத்தனை திரளான கூட்டத்திலும், அவரை அடையாளம் கண்டுகொள்ள நாம் அறிந்திருக்கவேண்டும்.  'என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம் பேர்களில் சிறந்தவர். அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது. அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது. அவர் கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஸ்பங்களைப்போலவுமிருக்கிறது; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப்போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது. அவர் கரங்கள் படிகப்பச்சைபதித்தபொன்வளையல்களைப்போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது. அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது. அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்" (உன். 5:10-16) என்று வார்த்தைகளால் வடித்துப் பாடும்; சாலொமோனின் வரிகள் அவருக்கு எத்தனை பொருத்தமானவைகள். அநேக நேரங்களில், இத்தகைய நேசர் நம்முடைய வாழ்க்கையில் இருக்கின்றாரா? என்பதை அறிந்துகொள்ள முயலாமல், விழாக் காலங்களில் 'நம்மை நாமே மகிழ்வித்துக்கொள்ள விரும்புகின்றோம்"; அத்தகைய விழாக்களின் முடிவு வெளிப்புறத்தில் பிறர் பார்வையில் குதூகலமாகக் காட்சியளித்தாலும், நம்முடைய வாழ்க்கைக்கு ஏமாற்றமாகவே காணப்படும்.  

இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டபோது, அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டபோது, சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான் (மத். 16:13-16). இத்தகைய தெளிவான பரத்திற்கடுத்த வெளிப்பாடும் பார்வையும் இன்று நம்முடைய கண்களில் உண்டா? இல்லையேல், 'நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" (யோவான் 14:6) என்று சொல்லுபவரை, 'இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?" (மத். 13:55) என்ற சாதாரணமான மாம்சீகக் கண்ணோட்டத்துடன் கடந்துசெல்லுகின்றோமா? இப்படிப்பட்ட மாம்சீக் கண்ணோட்டத்துடன் இயேசு கிறிஸ்துவைப் பார்த்தவர்கள், தங்கள் ஆத்துமாவிற்கு அவரால் கிடைக்கவிருந்த பலனை அடையவில்லையே, அனுபவிக்கவில்லையே!   

இயேசு கிறிஸ்து பிறந்தபோது, எருசலேமுக்கு வந்த சாஸ்திரிகள் ஏரோதுவை நோக்கி, 'யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்" (மத். 2:2) என்று கேட்கிறார்கள்; நட்சத்திரத்தைக் கண்டதும், சாஸ்திரிகளுக்கு இருந்த ஞானம், 'ராஜா பிறந்துவிட்டார்" என்ற அறிவினை மாத்திரமே அவர்களுக்குக் கொடுத்தது; அது அவர்கள் மாம்சத்தில் பெற்றிருந்த அறிவின் அடிப்படையில் உண்டானது. என்றபோதிலும், அது 'கிறிஸ்துவே" என்ற உணர்வு அவர்களது உள்ளத்தில் உண்டாகவில்லை. எனவே, ஒரு முறை நட்சத்திரத்தைக் பார்த்ததும், ராஜாவின் பிறப்பிடத்தை தாங்களே மனதில் நிர்ணயித்துக்கொண்டவர்களாக, தாங்கள் அறிந்திருந்த ஏரோதுவின் அரண்மனைக்குப் போகும் பாதையில் பயணத்தைத் தொடங்குகின்றார்கள்; வானத்தை நோக்கிப் பார்த்து, கிழக்கிலே கண்ட நட்சத்திரம் செல்லும் பாதையைப் பின்பற்றவோ அவர்கள் மறந்துவிட்டார்கள்.  

நட்சத்திரத்தைக் கண்ட இடத்திலிருந்தே, தங்களுடைய அறிவைப் பின்பற்றாமல், அது காட்டும் பாதையில் அவர்கள் பயணித்திருந்தால், அது 'நேர்வழியாகப்" பிள்ளை இருக்கும் ஸ்தலத்திற்கு நேராக அவர்களை வழிநடத்தியிருக்குமே, ஏரோதுவின் அரண்மனைக்கு அவர்கள் சென்றிருக்க வாய்ப்பில்லையே. இயேசு கிறிஸ்துவை தரிசித்த பின், ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப் போனார்கள் (மத். 2:12) என்று நாம் வாசிக்கின்றோமே; அப்படியென்றால், குழந்தையாகிய இயேசு கிறிஸ்துவை காண வாஞ்சித்த சாஸ்திரிகளை, இந்த வழியிலேயே, அதாவது, 'நேர்வழியிலேயே" வரும்போதும் அது கூட்டிவந்திருக்கக்கூடுமே. சாஸ்திரிகளுடைய மாம்சீகக் கண்களுக்கடுத்த வழிவிலகுதல், எத்தனை பெரிய பழிவாங்குதலுக்கு ஏரோதுவைத் தூண்டிவிட்டுவிட்டது. வேறு வழியில் சென்றதினால், அவர்களது உயிர் காப்பாற்றப்பட்டுவிட்டாலும், பாலகனாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர் பாதுகாக்கப்பட்டுவிட்டாலும், எத்தனையோ ஆண்பிள்ளைகளின் உயிரை இவ்வுலகை விட்டுப் பிரித்துவிட்டதே (மத். 2:16,17).நம்முடைய வாழ்க்கையிலும், வழிவிலகுவதினால் உண்டாகவிருக்கும் விபத்தினைப் புரிந்துகொண்டவர்களாக அவர் காட்டும் நேர்வழியில் பயணிப்பது எத்தனை அவசியம். மாம்சீகக் கண்கள் பரத்தின் பாதையை விட்டு நம்மை விலக்கிவிடக்கூடாது, பிறரது வாழ்க்கைக்கும் அது ஆபத்தாக முடிந்துவிடக்கூடாது.

  அநேக நேரங்களில் 'நேர்வழியாக" நம்மை வழிநடத்த தேவன் முயற்சிக்கின்றபோதிலும், நமக்கு இருக்கும் அறிவினால் நாம் வழிவிலகிச் சென்றுவிடுகின்றோம். பயணம் தொடங்கக் காரணமாயிருந்தது அவர்தான்; என்றாலும், பாதை மாறிச் சென்றுவிடுகின்றோம். கிழக்கிலே தோன்றிய நட்சத்திரம், அதன் இலக்காகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி 'நேர்வழியாக" நடத்திச் செல்ல ஆயத்தமாயிருப்பதை சாஸ்திரிகள் அறிந்துகொள்ளாமல், கிறிஸ்துவுக்கு எதிரியாகிய ஏரோதுவின் அரண்மனைக்குள் சாஸ்திரிகள் நுழைந்துவிட்டதைப் போல, நாமும் அநேக நேரங்களில் மாம்சீகக் கண்களைப் பின்பற்றி, எதிரிகளின் எல்லைக்குள் நுழைந்துவிடுகின்றோம்; என்றபோதிலும், 'யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது" (மத். 2:6) என்று எதிரியின் எல்லைக்குள்ளிருந்தும் வசனத்தின் மூலம் நம்மை வழிநடத்த தேவன் போதுமானவர். தேவன் காட்டுகின்ற நேர்வழியினை சில நேரங்களில் நாம் தவறவிட்டாலும், அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதை புரிந்துகொள்ளவும் மற்றும் உணர்ந்துகொள்ளவும் நாம் தடுமாறினாலும்; எழுதப்பட்டிருக்கும் வசனங்களைக் கொண்டு நம்மை வழிநடத்த தேவன் போதுமானவர்; எப்படியாகிலும், நம்மை இலக்கை அடையவைப்பதே அவரது நோக்கம்.   

எழுதப்பட்டவைகளை அறிந்துகொண்டவர்களாக, ஏரோதுவின் அரண்மனையிலிருந்து வெளியே வந்ததும், மீண்டும் வானத்தை நோக்கிப் பார்த்த சாஸ்திரிகள், அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, 'மிகுந்த ஆனந்த சந்தோ~மடைந்தார்கள்" (மத். 2:10). பின்னர், அந்த நட்சத்திரம் காட்டிய வழியிலேயே தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். நட்சத்திரம் காட்டிய வழியில் அவர்கள் சென்றபோது, 'அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்". (மத். 2:11)  சாஸ்திரிகள் பாதை மாறிச் சென்றபோது, நட்சத்திரம் 'நேர்வழியாக" தன் வழியில் சென்றுவிடவில்லை, எப்படியாகிலும் அவர்களை அழைத்துச் செல்லவேண்டும் என்று, அவர்கள் அறியாதபோதிலும், அவர்கள் அதனைப் பின்பற்றாதபோதிலும், அவர்களோடு கூட தொடர்ந்து பயணித்துக்கொண்டிருந்தது. சாஸ்திரிகள் நட்சத்திரத்தைப் பின்பற்றி நடந்திருக்கவேண்டும்; ஆனால், இப்போதோ, அவர்கள் வழிவிலகிச் சென்றதினால், நட்சத்திரம் அவர்களைப் பின்பற்றிச் செல்லவேண்டியதாயிற்று. அநேக நேரங்களில், வழிகாட்டும் நட்சத்திரத்தை விட்டு விட்டு, நமக்கு இருக்கும் அறிவினை மாத்திரமே சார்ந்துகொண்டவர்களாக வழி மாறிச் செல்வதினாலேயே, வேதனைகளை வாழ்க்கையில் கூட்டிக்கொள்ளுகின்றோம்; மாத்திரமல்ல, தேவனை நமக்குப் பின்னே தள்ளிவிடுகின்றோம்.  

'யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?" என்று சாஸ்திரிகள் கேட்டபோது, ஏரோதுவோ, பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச் செய்து: 'கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று" அவர்களிடத்தில் விசாரிக்கின்றான் (மத். 2:4). அப்படியென்றால், 'கிறிஸ்துவைக் குறித்த அறிவு" ஏற்கனவே ஏரோதுவுக்கு இருந்திருக்கிறது என்றும், 'அவர் யூதருக்கு ராஜாவாக எழும்புவார்" என்பதை அவன் முன்னமே அறிந்திருந்தான் என்றும் நம்மால் உணர்ந்துகொள்ள முடிகின்றதல்லவா.  ஏரோதுவுக்கு இருந்த இந்த அறிவு சாஸ்திரிகளுக்கு இல்லையே! 

இன்றும். உலகத்தின் இரட்சகராக 'கிறிஸ்து" பிறந்திருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ளாமல், 'யூதருக்கு ராஜா" என்ற அறிவோடு மாத்திரமே நின்றுவிட்ட சாஸ்திரிகளைப் போல, நாமும் அநேக நேரங்களில் நின்றுவிடுகின்றோம். அடையாளங்களைத் தொடர்ந்து அவர் நடத்தும் வழிகளுக்கு உடன்படாமற்போய்விடுகின்றோம். கிறிஸ்து பிறப்பின் பண்டிகைகளைக் கொண்டாடுகின்றபோதிலும், இரட்சகராக 'கிறிஸ்துவை" இன்றும் பலரது கண்கள் காணக்கூடாமலிருப்பதற்கான காரணம் இதுவே. சாஸ்திரிகளுக்கு 'ராஜா" என்ற அறிவு மாத்திரமே இருந்தது; ஆனால், எதிரியோ அவர் 'கிறிஸ்து" என்பதை அடையாளம் கண்டுகொண்டான்; அதனாலேயே, அவரை கொலைசெய்யத் துடிக்கின்றான். இன்றும் இந்த உலகத்தில் வாழும் மனிதர்களில் அநேகருக்கு சாஸ்திரிகளுக்கு இருந்ததைப் போன்ற அறிவு இருக்கக்கூடும்; ஆனால், எதிரியாகிய சாத்தானோ, ஒருபடி மேலாக, 'அவர் உலக இரட்சகர்" என்ற அறிவுடன் அவரை அறிவிக்காதபடிக்கும், ஜனங்கள் அவரை அடையாதபடிக்கும் நம்மை தடைசெய்ய முற்படுகின்றான். சத்துருவின் இத்தகைய சூட்சுமத்தைப் புரிந்தவர்களாகச் சுவிசே~ப் பணியில் நாம் முன்னேறிச்செல்லவேண்டுமே. 

சாஸ்திரிகளுக்கு வானத்தைக் குறித்த அறிவு இருந்தது, ஆனால் வசனத்தைப் பற்றிய அறிவில்லை; பிரதான ஆசாரியருக்கும், ஜனத்தின் வேதபாரகருக்கும் வசனத்தைப் பற்றிய அறிவு இருந்தது, ஆனால் வானத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய அறிவில்லை. ஆனால், ஏரோதுவோ, வானத்தைக் குறித்த அறிவுடைய சாஸ்திரிகளையும், வசனத்தைப் பற்றிய அறிவுடைய ஆசாரியர்களையும், வேதபாரகர்களையும் தன் ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டு, கிறிஸ்துவுக்கு எதிராக செயல்பட நினைக்கின்றான்; இச்சூழ்ச்சியை இன்றைய நாட்களிலும், சத்துரு சாத்தியப்படுத்தத் துடிக்கிறான். அப்படியிருக்க, நம்முடைய கண்கள் அவர் காட்டும் வழியினை மாத்திரமே பின்பற்றிச் செல்லவேண்டியது எத்தனை அவசியம், அத்தகையக் கிருபையினை இந்நாட்களில் கர்த்தர் நமக்குத் தருவாராக. 


மாம்சீகக் கண்கள் மாம்சத்திற்கே மகிழ்ச்சி தேடும்

மனமது ஆலயமானால் ஆண்டவருக்கே மகிழ்ச்சி சேரும்

மறுபிறப்பின் அனுபவம் மனிதனுக்கு மறுவாழ்வு தரும்;

மண்ணுலகம் அல்ல விண்ணுலகேயதைக் கொண்டாடும்


மாம்சீக வழிநடந்தால் மாறிவிடும் பாதையும் பயணமும்

மறுபடியும் ஒளிகண்டால் வழிதெரியும் நேர்வழி தெரியும்

        'உலக இரட்சகர் அவர்" இந்த உண்மையை எதிரியே உணர்ந்திருக்க

 உண்மையறிந்த நாம் இனி உறங்காது முன்னேறவேண்டாமோ? 

                               

                                                                                     அன்பரின் அறுவடைப் பணியில் 

                                                                                         அன்பு சகோ. P. J.  கிருபாகரன் 


November 2025

 கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே, 

சமாதானத்தைக் கூறி; நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து; இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன (ஏசா. 52:7) என்று சுவிசேஷகர்களை வர்ணிக்கிறவரும்; சீயோன் குமாரத்தியே; மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார் (சக. 9:9) என்று இரட்சகராகவும் ராஜாவாகவும் கிறிஸ்துவை அறிமுகப்படுத்துகிறவருமாகிய ஆண்டவரின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். 

'ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்" (யோவான் 14:2,3) என்றார் இயேசு கிறிஸ்து. ஆம்; அவர் மீண்டும் வர இருக்கின்றார்; அப்படியென்றால், அவரைச் சந்திக்க எத்தனையாய் நாம் நம்மை ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கின்றோம்?

எபிரெய கலாச்சாரத்தின்படி, அவர்கள் திருமணம் செய்யும்போது; முதலில் மணமகளைப் பார்த்து நிச்சயித்துவிட்டு; திரும்பி வந்து, அவர்கள் இருவரும் வாழ்வதற்கு ஏதுவான வாசஸ்தலங்களை ஆயத்தப்படுத்திய பின் மணமகளை அழைத்துவருவது அவர்களது வழக்கமாயிருந்தது. தன்னை பெண் பார்த்துவிட்டுச் சென்ற நாள் முதல், தனக்கு நிச்சயமான கணவர் மீண்டும் வரும்வரை, 'அவர் என்று வருவாரோ" என்ற எதிர்பார்ப்புடன் நியமிக்கப்பட்ட பெண் ஒவ்வொரு நாளும் அவருக்காகக் காத்திருந்து ஆயத்தமாக இருக்கவேண்டும். 

பிரியமானவர்களே! நம்முடைய வாழ்க்கையும் இதற்கு ஒப்பானதுதானே! 'நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்" (பிலி. 3:20) என்ற பவுலின் வரிகள்; மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் மணவாட்டிகளாகிய நமது எதிர்பார்ப்பினைத்தானே வெளிப்படுத்துகின்றன. இந்த பூமியில் நாம் வாழ்ந்தாலும். அநேக போராட்டங்களை நாம் சந்தித்தாலும். ஒன்றை மாத்திரம் நாம் நினைவில் கொள்ளவேண்டியது அவசியம்; நாம் இந்தப் பிரபஞ்சத்திற்குரியவர்கள் அல்ல. அவருடைய சித்தத்தை நிறைவேற்றவே நாம் இங்கு அனுப்பப்பட்டுள்ளோம். இந்த பிரபஞ்சத்தில் நாம் இருக்கும் நாட்களில்; வந்த நோக்கத்தினை ஒருபோதும் நாம் மறந்துவிடக் கூடாது. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் (ரோமர் 12:2) என்று பவுல் எழுதுகின்றாரே! 

முதலாவதாக வருகைக்காக எதிர்பார்ப்பு : இயேசு கிறிஸ்து மீண்டும் வருகிறார்; உலகத்தின் நிகழ்வுகள் அதனை எதிரொலித்து நம்மை எச்சரிக்கின்றன; என்றபோதிலும்; நம்முடைய ஆயத்தமும் எதிர்பார்ப்பும் எத்தகையதாயிருக்கின்றது? விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்கள்; பெற்றோர்களைச் சந்திக்கும் நாளன்று மிகுந்த ஆவலுடன் பெற்றோருக்காகக் காத்திருப்பார்கள்; விடுதியின் வாசலை நோக்கியே அவர்களது கண்கள் பார்த்துக்கொண்டிருக்கும். நேரம் ஆக ஆக கலக்கமும் எதிர்பார்ப்பும்கூட அவர்களில் அதிகரிக்கத் தொடங்கும். அதே போலவே, நாமும் நமக்கு நியமித்த ஓட்டத்தை முடித்து, வரப்போகும் ராஜாவிற்காக எதிர்பார்ப்புடனும் ஆயத்தத்துடனும் காணப்படுவோம்.

இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நாம் எதிர்பார்த்து (1தெச. 1:10). அந்த மகிமையையையும் பிரசன்னத்தையும் மனதில் உணர்ந்தவர்களாக; நம்மை இடறலடையச் செய்யும் இந்த உலகச் சிற்றின்பங்களை வெறுத்து; ஒரே மனதுடையவர்களாயிருக்க வாஞ்சிப்போம்.  நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும். மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்க தேவன் நமக்கு உதவிசெய்வாராக! (தீத்து 2:13)

பொதுவாக; யாரேனும் நெருங்கிய விருந்தினர்களோ அல்லது நண்பர்களோ நமது வீட்டிற்கு வரப்போகிறார்கள் என்று தெரிந்துவிட்டால்' நாம்; மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்; அவர்களின் வருகைக்காக மகிழ்ச்சியுடன் காத்திருப்போம். அவர்கள் வருவதற்கு முன்பதாகவே நமது வீட்டைச் சுத்தம் செய்து. அவர்களது வருகைக்காக ஆவலுடனும் ஆர்வத்துடனும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்போம். அப்படியிருக்க. ராஜாதி ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக நாம் எத்தனை ஆயத்தத்துடனும். ஆனந்தத்துடனும்; எதிர்பார்ப்புடனும் காத்திருக்கவேண்டும். 

ஓர் அழகிய நகரத்தில் ஒரு பெரிய அரண்மனை இருந்தது. நீதியும் அன்பும் நிறைந்த ஒரு ராஜா அதனை ஆட்சிசெய்தான். ஒருமுறை. தனது மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை நேரில் சென்று பார்க்க விரும்பிய ராஜா; நகரத்தின் மக்களுக்கு அச்செய்தியினை அறிவித்தான். நகர மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்; ராஜாவை வரவேற்க ஆயத்தமாகத் தொடங்கினர். வழிகளில் விளக்குகளையும், சாலைகளைச் சுத்தம் செய்தும். வீடுகளை அலங்கரித்தும்; குழந்தைகள் மலர் மாலைகளைச் செய்தும் ராஜாவின் வருகைக்காகக் காத்திருந்தனர். ஆனால். அந்த நகரத்தில் இருந்த இளங்கோ என்ற மனிதனோ. உண்மையிலேயே ராஜா நமது நகரத்திற்கு வருவாரா? என்ற சந்தேகத்துடனும்; வராவிட்டால் என் எதிர்பார்ப்புகள் மற்றும் ஆயத்தங்கள் அனைத்தும் வீணாகிவிடுமே என்ற எண்ணத்துடனும் ராஜாவின் வருகைக்காக ஆயத்தப்படாதவனாகக் காணப்பட்டான். அவனது வீடு விளக்குகளின்றி இருளடைந்து காணப்பட்டது. வீட்டின் சுவர்கள் பழுதடைந்திருந்தன. வீட்டினருகே குப்பைகள் தேங்கிக் கிடந்தன.

மறுநாளில்; ராஜா அந்த நகரத்திற்கு வருகை தந்தார்; ஜனங்கள் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று. 'ராஜா வாழ்க" என முழக்கங்களை எழுப்பினர். நகரத்தின் சாலை வழியே சென்று விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்ட சுத்தமாயிருந்த வீடுகளைப் பார்த்து ராஜா மகிழ்ந்துகொண்டிருந்தபோது. ஒரே ஒரு வீடு மட்டும் இருளில் மூழ்கியிருப்பதைக் கண்டு; 'இந்த வீடு யாருடையது?" என்று கேட்டபோது. அது இளங்கோவின் வீடு என்று பதிலளித்தனர் ஜனங்கள். ராஜாவின் வருகையில் இளங்கோவினால் பங்கெடுக்க முடியவில்லை. அன்று இரவு இளங்கோவின் மனம் உடைந்தது; ராஜா வருவார் என்பதை நான் நம்பியிருக்கவேண்டும். அவருக்காக எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கவேண்டும் என்று அழுதான்.  

பிரியமானவர்களே! அவர் வரும் நாளினை நாம் அறியோம். எனவே; எல்லா நாளும் அவரது வருகையை நாம் எதிர்நோக்கிக் காத்திருப்பது அவசியம் (மத். 24:42). உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். (மத். 24:42)  

இரண்டாவதாக: விசுவாசத்தின் வெளிச்சம்,  சிறுவயதில் இயேசு கிறிஸ்துவின் வருகையைக் குறித்ததான காரியங்களை நான் கேள்விப்படும்பொழுது; எனக்கும் மிகுந்த பயம் உண்டானது. அந்த பயம்; அவரது வருகையில் நான் எப்படியாகிலும் கூடச் செல்ல வேண்டும் என்பதுதான். ஆம். பிரியமானவர்களே! அவரது பிள்ளைகளும் ஜனங்களுமாகிய நாம்; அவர் வரப்போகும் நாளை நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கவேண்டுமல்லவா! நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்துக்கும்; மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி வேதம் நமக்குப் போதிக்கின்றதே. (தீத்து 2:13) 

ஆசீர்வாதங்களாலும், உற்சாகமூட்டும் வார்த்தைகளாலும் நிறைந்த இக்காலத்துச் சபைகள். அவரது வருகைக்கு  அழுத்தம் கொடுக்க மறந்தது ஆச்சரியமே. அவரது ராஜ்யமும், வருகையும் நாம் காணாதவைகளாயினும், விசுவாசத்தில் அவைகளுக்காக நாம்  எதிர்நோக்கிக் காத்திருக்கவேண்டுமே. விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது (எபி. 11:1); நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம் (ரோமர் 8:25). பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் தங்கள் தீர்க்கதரிசனங்களில்; மேசியாவின் முதலாம் வருகையையும். இரண்டாம் வருகையையும் பகிரங்கமாக ஜனங்களுக்கு அறிவித்தார்கள். என்றபோதிலும், அநேகர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நோவாவின் காலத்தில், ஜலப்பிரளயத்தைக் குறித்தும் மற்றும் பேழையைக் குறித்தும் எவ்வித ஞானமும் இல்லாத நோவா; தேவனது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, அழிவினின்று தப்ப பேழையைச் செய்தானல்லவா;  நாமும் இக்காலத்தின் நோவாக்களாகச் செயல்பட வேண்டியது எத்தனை அவசியம். 

மூன்றாவதாக: இரட்சிப்பின் ஆடை இது, ராஜாவின் வருகைக்கு ஆயத்தமாகுதலில் அடுத்த நிலை; விசுவாசத்தினால் ஆத்தும இரட்சிப்பை அடைதல். அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார் (யோவான் 1:12) என்றும்,  ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே (கலா. 3:27) என்கிறது வேதம்.  

துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள் (ரோமர் 13:14) என்று எழுதுகின்றார் பவுல். பொதுவாக, நாம் புத்தாடையினை அணிந்தால்; பிறந்தநாள் அல்லது வீட்டில் ஏதோ விஷேசம் என மக்கள் அறிந்துகொள்வார்கள். காரணம். புது ஆடை ஒரு சிறப்பினைக் குறிக்கிறதாயும் அத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறதாயும் இருக்கிறது. அவ்வாறே, தேவனும் நமது உலகத்திற்கடுத்த பழைய ஆடைகளை நீக்கி, இரட்சிப்பு என்னும் புது வஸ்திரத்திரத்தினால்  நம்மை உடுத்துவிக்கிறவராயிருக்கிறார். ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தில், கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார் (ஏசாயா 61:10) என்றும். சகரியாவின் புஸ்தகத்தில், அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக யோசுவா நின்றுகொண்டிருந்தபோது; தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: 'இவன்மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள்" என்றும்; அவனை நோக்கி: பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றும்; அவன் சிரசின்மேல் சுத்தமான பாகையை வைப்பார்களாக என்றும் சொன்னாரே. அப்பொழுது சுத்தமான பாகையை அவன் சிரசின்மேல் வைத்து, அவனுக்கு வஸ்திரங்களைத் தரிப்பித்தார்கள்; (சகரியா 3:4-5) என்று வாசிக்கின்றோம்.  

ஆனால், இந்நாட்களில்; மணவாளனுக்காகக் காத்திருக்கும் நாமோ, நம்மை நாமே அலங்கரித்து ஆயத்தமுடன் காத்திருக்கவேண்டியது அவசியம்; நம்மை அழைத்துச் செல்ல அவர் எக்கணத்திலும் வரலாம்; எனவே, இரட்சிப்பின் ஆடையுடன் ஆயத்தமாயிருப்போம்.   

நான்காவதாக: பரிசுத்தமென்னும் சுத்தம்: ஆயத்தமாகுதலில் மிக முக்கியமானது பரிசுத்தம். அது தேவன் எந்த மனிதனிடமும் எதிர்பார்க்கும் ஒரு காரியம். ஏனெனில், அவர் பரிசுத்தராயிருக்கிறார். 'நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்" (1பேதுரு 1:16) என்று வாசிக்கின்றோமல்லவா. எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம் (2கொரி. 7:1) என்றும், ஆனபடியால்; நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்.  அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார் (2கொரி. 6:17,18) என்றும் பவுல் எழுதுகின்றாரே. பவுலின் இந்த வார்த்தைகள் பரிசுத்தத்தின் அவசியத்தினை எத்தனையாய் நமக்கு எடுத்துரைக்கின்றன.  

பிரியமானவர்களே! நமது தேவன் பரிசுத்தத்தை விரும்புபவர். சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக (1தெச. 5:23).  

ஐந்தாவதாக: நற்கிரிகையின் அலங்காரம்: ஆயத்தத்தின் ஒரு அடையாளம் இந்த நற்கிரியை (கனிகள்). நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார் (எபே. 2:10). 

பிரியமானவர்களே! நமது கிரியைகளினால் ஜனங்கள் தேவனை அறிந்துகொள்ளவும் மகிமைப்படுத்தவும் கூடும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது (மத். 5:16) என்று இயேசு கிறிஸ்து கூறினாரே! அப்படியிருக்க; இக்கடைசி நாட்களில், நற்கிரியைகளினாலும். கனிகளினாலும் கிறிஸ்துவை பிற ஜனங்களுக்கு நாம் வெளிப்படுத்துவது எத்தனை அவசியமானது. பிரியமானவர்களே! இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக நாம் ஆயத்தமுடன் இருக்கிறோமா? என்பதை ஒவ்வொரு நாளும் நாம் ஆராய்ந்து பார்ப்போம். விசுவாசத்தினால், இரட்சிப்பினால்; பரிசுத்தத்தினால் மற்றும் நற்கிரியைகளினால் ஒவ்வொருநாளும் நம்மை ஆயத்தப்படுத்துவோம். ஆயத்தமாயிருந்தவர்கள் மாத்திரமே அவரோடே கூடக் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது (மத். 25:10). ராஜாவின் வருகைக்காக நாம் ஆயத்தப்படவும். மற்றவர்களை ஆதாயப்படுத்தி ஆயத்தப்படுத்தவும்  தேவன் நமக்கு உதவிசெய்வாராக!   


மணவாளன் வருவார் நேரம் அறியோம்; விழித்திரு இதயமே

மறுநாள் உறுதி இல்லை; இன்று தான் ஆயத்தம் என எண்ணு  தினமே

விசுவாசத் தீயை ஏற்று; இருளை அகற்று மனமே

பரலோகம் நம் வீடு; அதற்கே வாழ்கைகொடுத்திடு தினமே


இரட்சிப்பின் ஆடை அணிந்து; புது வாழ்வைத் தொடங்குவோம்

பரிசுத்தத்தின் வாசம் வீச; உலகக் களங்கம் துறந்திடுவோம்

நற்கிரியைகள் மலரட்டும்; நம் கிரியையில் கிறிஸ்து தெரிக

அன்பின் வெளிச்சம் ஒளிரட்டும்; இருளில் பலர் எழுக


இக்காலத்து நோவாவாய்; கப்பலைக் கட்டுவோம் உறுதியாக

ராஜா வருமுன் நம்பிக்கையால்; தன்னை தயார் செய்க

ராஜா வரும்போது மகிழ்ச்சி நம்மை நிரப்பட்டும்

அவரைச் சந்திக்க ஆயத்தமாய் நம் ஆவி பிரகாசிக்கட்டும் 

 

அன்பரின் அறுவடைப் பணியில்

அன்பு சகோ. லெஸ்னின் செல்வா